Tuesday, October 23, 2018

ஊடக வெளியும் இழிநிலைகளும்



தமிழகத் திரைப்பட இயக்குநர் திரு. பாரதிராஜாவின் அண்மைக்கால இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து நிகழ்ந்திருக்கும் சர்ச்சைகள், இலகுவில் கடந்து செல்லக்கூடியவையல்ல.  

யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில், ஒருவகை மேட்டிமைத்தனத்துடன் 'முறைகேடாக' அவர் நடந்துகொண்டார். அப்போது அவரை, அங்கிருந்த செய்தியாளர்கள் பக்குவமாக எதிர்கொண்டிருக்க வேண்டும். அந்த இடத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டிய ஆரோக்கியமான, முறையான எதிர்வினைகள் நிகழவில்லை. பின்னர், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் தொடர்ந்தன. பிரமுகராக நிகழ்வொன்றில் முன்னிறுத்தப்பட்டிருக்கும் ஒருவர், எத்தகைய கேள்விகளையும் பக்குவமாக எதிர்கொள்ள வேண்டியது அவசியமானது. பதில் சொல்ல விரும்பாத (முடியாத) அல்லது சூழ்நிலைக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றுகிற 'சிக்கலான' கேள்விகளை, நாகரிகமாக மறுத்துக் கடந்துவிட முடியும். சமூக வாழ்வில், பொதுவெளியில்  'எழுந்தமானமாக', 'முறைகேடாக' எதையும் யாரும் செய்துவிட முடியாது.

குழப்பத்தில் முடிந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, இரண்டு நபர்களால் பாரதிராஜாவின் 'கால்கள் கழுவப்படுவது' மாதிரியான படமொன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, சர்ச்சைகள் வேறுபோக்கிலே தொடர்ந்தன. எந்த விளக்கமுமின்றி, முன்முடிவுகளுடனும் 'கொச்சையான' கருத்துகளுடனும் பெரும்பாலும் பகிரப்பட்டிருக்கிறது அந்தப் படம். தமிழ்ச் சூழலில்  எதையும் சரியாக ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டு அவசரகதியில் கருத்துதிர்க்கும் வழக்கம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல. சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும், தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அமைவாக, தனிமனித நடத்தைகள் சார்ந்து 'அவசரகதியில் ' முன்வைக்கப்படும் எதிர்வினைகள், கண்ணியத்துடன் அமைவதில்லை. எங்கு, எப்போது, எச் சந்தர்ப்பத்தில், யாரால், எதற்காக அந்தப் படம் எடுக்கப்பட்டது? யாரால், எப்படி அது விபரங்கள் எதுவுமில்லாமல் வெளிவந்தது? அந்தப் படம் தொடர்பான பின்னணித்தகவல்கள் எதுவும் சரியாக இதுவரை கிடைக்கவில்லை. அந்தப் படமானது, பல வகையில் திரிபுபடுத்திக் காட்டப்படக் கூடியதாக, இருப்பதால் பின்னணித்தகவல்கள் அவசியமாகின்றன. எது எப்படியிருந்தாலும், சமூக மட்டங்களில் நிலவும் மேட்டிமைத்தனங்களையும் கசடுத்தனங்களையும் மத, கலாச்சார, அதிகார, அரசியல்  பின்புலங்கள் வழியாகப் புரிந்துகொண்டு, எதிர்வினைகளை ஆரோக்கியமான வழிமுறைகளில் வெளிப்படுத்த வேண்டும்.   

பாரதிராஜா சம்மந்தப்பட்ட  அந்தப் படத்தில், ஒருவகையான 'மேட்டிமைத்தனம்' தொனிப்பதை அவதானிக்க முடிந்தாலும், பின்னணித்தகவல்கள் பற்றிச் சரியாக அறிந்துகொள்ளாமல் முடிவாக எதையும் கூறிவிட முடியாது.  அப் படமானது, எத்தகைய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று, அதில் இருக்கிற மூவரும் அந்தப் படத்தை எடுத்தவரும் தான் இனி வெளிப்படையாகப் பேச வேண்டும். வயது முதிர்ந்த ஒருவருக்கான 'வைத்திய உதவி' நடந்திருப்பதன் பதிவாகக் கூட அது புரிந்துகொள்ளப்படக் கூடும். பாரதிராஜா வயது முதியவரானாலும், உடல் சார்ந்த காரியங்களை சுயமாகச் செய்துகொள்ள முடியாத அளவிற்குத் தளர்ந்துபோனவரல்ல. கால்களில் வலி இருந்தால் யார் கால்களையும் யாரும் வெந்நீரில் கழுவிடுவதும் மசாஜ் செய்து விடுவதும் சாதாரணம் தான். கால்களைக் கழுவக் கொடுத்த பாரதிராஜாவினதும், கழுவிக் கொடுத்த இரண்டு நபர்களினதும் மனநிலைகள் நுட்பமாக ஆராயப்பட வேண்டியவை.  ஒரு 'பிரமுகராக' இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்த பாரதிராஜாவின் மனநிலையானது, அதிகார துஸ்பிரயோகமாக, மேட்டிமைத்தனமாகத் தொழிற்பட்டிருந்தால் கண்டிக்கப்பட வேண்டியது. ஒரு 'மசாஜ்' நிலையத்திலோ அல்லது  வைத்திய நிலையத்திலோ, உடல் சுகத்திற்காக, 'உடன்பாட்டு நிலையில்' நிகழும் காரியங்கள் வேறுவகையானவை. 
   
விசேடமான சூழ்நிலைகளில், பிரத்தியேகமான அல்லது அந்தரங்கமான தருணங்களில் தனி நபர்கள் சார்ந்து தற்செயலாகவோ செய்திமதிப்புடனோ (news value) எடுக்கப்படுகின்ற  ஒளிப்படங்கள், ஊடக வெளிகளில் 'தவறான  முறைகளில்' பிரயோகிக்கப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பதிவாகியுள்ள ஒளிப்படமானது, ஒருவரது தனிப்பட்ட 'இயல்பை' அல்லது ஆளுமையை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்துவிடுவதும் உண்டு. எது எப்படியிருந்தாலும், நம்பகத்தன்மையுடன் கூடிய பின்னணித்தகவல்கள் எதுவும் கொண்டிராத ஒரு ஒளிப்படமானது, தவறான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் வகையில், ஊடகவெளிகளில் பிரயோகிக்கப்படுவது அறமாகாது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்தோ தனிப்பட்ட நடத்தை குறித்தோ யாரும் எழுந்தமானமாகவோ அவதூறாகவோ கருத்துக்கள் முன்வைப்பது ஏற்புடையதல்ல. எது எப்படியிருந்தாலும், ஊடக ரீதியான அத்துமீறல்களும் தனிமனித அத்துமீறல்களும்  இனங்காணப்பட வேண்டியவை. தனிமனித சுதந்திரம் குறித்த தெளிவான நிலைப்பாடு எல்லோருக்கும் அவசியமானது. தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்தும் ஓர்மமும் சுயசிந்தனையும் கொண்ட மனிதர்களே, அதிகார மையங்கள் சார்ந்த 'அரூப கரங்களின்' குரூரத்தை அம்பலப்படுத்தக் கூடியவர்கள்.

கால் கழுவுதல், முதுகு சொறிதல், காலில் விழுதல், காக்கா பிடித்தல் (கால் கை பிடித்தல்), அடிவருடுதல் (அடிவருடி), மண்டியிடுதல், போன்ற சொற்தொடர்கள் பெரும்பாலும் பிரயோகிக்கப்படுகிற சந்தர்ப்பங்கள் நுட்பமாக அவதானிக்கப்பட  வேண்டியவை. அவை, அதிகாரத்திற்கு முன் இணங்கிப் போவதை 'இழிவாக' எடுத்துரைக்கும் வகையிலே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. சாதி, மதம், அரசியல் போன்ற அதிகார மூலங்களின் இடுக்குகளில் இத்தகைய சமூக இழிவுகள் போசிக்கப்படுகின்றன.   

மரியாதை நிமித்தமாகவும் அன்பின் நிமித்தமாகவும் செய்யப்படுகிற 'மதிப்பளிப்பு' சார்ந்த உடல்மொழிதல்கள் புரிந்துகொள்ளக்கூடியவை. அவை, தனிமனித மற்றும் சமூகப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாகப் பார்க்கப்படக் கூடும். அதிகாரத்தினாலோ அல்லது மேட்டிமைத்தனத்தினாலோ அடிமை மனோபாவத்தினாலோ செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிற காரியங்கள் இனங்காணப்பட வேண்டியவை. காலில் விழுதல், அதிகாரத்தின் முன் மண்டியிடுதல், தனிமனித வழிபாடு போன்ற சமூக இழிவுகள் கண்டிக்கப்பட வேண்டியதுடன் களையப்பட வேண்டியதுமாகும். 

பாரதிராஜாவின் முதலாவது வன்னி வருகையின் போது, அவரைச் சந்தித்திருக்கிறேன். 'ஆணிவேர்' என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பைத் தொடக்கி வைத்திருந்தார். அந்தத் திரைப்பட உருவாக்கத்தில் எனது தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்பு, ஒளிப்படத் துறை சார்ந்ததாக இருந்தது. பாரதிராஜாவின் திரைப்படங்கள் மீதான 'மிகை மதிப்பீடுகள்' எதுவும் என்னிடமில்லை. எனினும், தமிழ் சினமாவில் அவரது பங்களிப்பு குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. அவர் நிதானமாக இருந்து, தனது ஆரோக்கியத்தைப் பேணிக்கொண்டு தொடர்ந்து இயங்குவது நல்லது. திரு. சீமான் போல, பாரதிராஜாவும் பொதுவெளியில் சர்ச்சைகளுக்குரிய வகையில் அடிப்படைவாத நிலைப்பாடுகளையும், அதிகாரத் தோரணைகளையும் வெளிப்படுத்தி வருவதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இத்தகையவர்களின் உளவியலும் உடல்மொழியும் நடத்தைக் கோலங்களும் ஆழமாக அணுகிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.  

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன், வன்னியில் பாரதிராஜாவைச் சந்தித்தபோது, ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை இயக்குமாறு கேட்டிருந்தார். பிரபாகரனிடம் சில விடயங்களைச் சொல்லி 'நழுவிவிட்டார்' பாரதிராஜா. ஈழப் பிரச்சினைகள் பற்றி அடிக்கடிப் பேசும் பாரதிராஜாவால் ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை இதுவரை இயக்க முடியவில்லை. ஈழப் பிரச்சினைகளை அவற்றின் சகல பரிமாணங்களோடும் உள்வாங்கி, ஒரு நல்ல ஈழத் திரைப்படத்தை இயக்கி, சர்வதேச அளவில் அவரால் கொண்டுசெல்ல முடியும் என்று தோன்றவில்லை. (உண்மையான அக்கறைகளுடன் முயன்றால் அது சாத்தியமாகக் கூடும்.) இலங்கைக்கு அவர் இப்போது பயணம் செய்திருப்பதன் நோக்கம் சரியாகத் தெரியவில்லை.   

பாரதிராஜாவையோ அவரை இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றவர்களையோ தொடர்புகொள்ளக்கூடிய நிலையில் உள்ள யாராவது, அவர்களோடு உரையாடி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். பாரதிராஜாவின் கால்கள் 'கழுவப்படுவது போன்ற' படம் தொடர்பிலும், யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதான பாரதிராஜாவின் 'முறைகேடான' நடத்தை தொடர்பிலும் ஊடகவியல் நெறிமுறைகளுக்கு அமைவான உரையாடல் சாத்தியமாக வேண்டும்.

2018-10-23
அமரதாஸ்

Wednesday, October 3, 2018

காதலின் ரகசிய அழைப்பு




பாத்திரங்களின் உளவியலை அல்லது மன நிலைகளை இசையிலும் காட்சிகளிலும்  இயல்பாக, அழகியலாக வெளிப்படுத்த முயன்ற திரை இசைப் பாடல்களில், 'சின்னப் பொண்ணு சேலை...' என்னும் பாடல் குறிப்பிடத் தகுந்தது. 'மலையூர் மம்பட்டியான்' என்ற  திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. 

பாடலின் காட்சியமைப்புகளில் பாத்திரங்களாக வரும் தியாகராஜனும் சரிதாவும் வாயசைத்துப் பாடவில்லை, ஆடவுமில்லை. அவற்றுக்கான அவசியமிருக்கவில்லை. ஒரு பாடலை எப்படிப் பொருத்தமாகக் காட்சிப்படுத்தித் திரைப்படத்துடன் ஒட்டவைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் பாடலைப் பரிந்துரைக்கலாம். இது ஒரு வகை உதாரணப் பரிந்துரை மட்டுமே.

மரத்தை அணைத்திருந்து பாதி முகம் காட்டி, காதலை ஒற்றைக் கண்ணில் கடத்த முயலும் சரிதாவின் நடிப்பும், அதை நெருக்கமாக அணுகி நகரும் கமெராவின் நுட்பமும்  அழகியலாகப் பதிவாகியுள்ளன. இசைப் படிமங்கள் காட்சிப் படிமங்களுடன் இயைந்து  சங்கமிக்கின்றன. வரிகளிலும் காட்சியமைப்புகளிலும் தொனிக்கும் சில செயற்கைத்தனங்கள் பெரிய உறுத்தலாகத் தோன்றவில்லை. இளையராஜாவின் எளிமையான இசையும் இயல்பான காட்சியமைப்புகளும் காதலின் பசுமையாக விரிகின்றன. 

இரண்டாவது சரணத்தின் இறுதியில், 'அருகே நீ வா...' என்னும் வரிகளை ரகசியத் தொனியில் ஜானகி பாடுவதை, பாடல் முடிகையில் வெளிப்படும் அவரது 'சிணுங்கலான அழைப்பை' நுட்பமாக உற்று ரசிக்க முடியும்.

தெளிவான காட்சி மற்றும் நல்ல ஒலித்தரத்தில் இந்தப் பாடல் கிடைக்கவில்லை.

அமரதாஸ் 
2018-10-03

Saturday, September 15, 2018

தமிழர் அழுத கண்ணீர் வீணானதா?



ஓவியர், ஊடகர், கவிஞர், எழுத்தாளர், ஒளிப்படக் கலைஞர் எனப் பன்முகப் பாரம்பரியம் கொண்ட அமரதாஸினால் இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் கண்காட்சி அண்மையில் சுவிஸ் நாட்டின் வர்த்தகத் தலைநகரான சூரிச் மாநகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. “தமிழர்களின் கண்ணீர்’ என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட இந்தக் கண்காட்சியை பல்கலைக் கழக மாணவர்களும், ஆர்வலர்களும் பார்வையிட்டிருந்தனர்.

ஓவியங்களே அமரதாஸின் விருப்புக்குரிய துறையாக இருந்த போதிலும், காலச் சூழல் அவரை ஒரு ஒளிப்படக் கலைஞனாக மாற்றியிருந்தது. தனது மனச்சாட்சியை ஏமாற்றாமல் முடிந்த அளவில் தனது பணியை, சமூக அக்கறையோடு அவர் நிறைவேற்றி உள்ளார் என்பதை அவரது ஒளிப்படங்களைப் பார்வையிடும் அனைவரும் புரிந்து கொள்வர்.

ஒரு ஊடகவியலாளனைப் பொறுத்தவரை அவன் எடுக்கின்ற ஒளிப்படங்களைப் பிரசுரம் செய்வதோடு அவனது பணி நிறைவுக்கு வந்து விடுகின்றது. அதையும் தாண்டி தன்னால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தி, அவை தொடர்பான ஒரு பரப்புரையை மேற்கொள்ளும் போது அவனது பாத்திரம் ஊடகவியலாளன் என்பதற்கும் அப்பால் பரந்து விரிந்து பயணிக்கத் தொடங்குகின்றது. ஊடகங்களில் காட்சிப் படுத்தப்பட்ட ஒளிப்படங்கள் சொல்லிய சேதியை விடவும் ஒளிப்படக் கண்காட்சிகள் சொல்லுகின்ற சேதிகள் ஆழமானவை, அகலமானவை.

அந்த வகையில், “தமிழரின் கண்ணீர்’ தனது பணியைச் செவ்வனே செய்திருக்கின்றது எனத் துணிந்து கூறலாம்.

ஈழத் தமிழரின் கண்ணீர் பல கதைகளைக் கூறும் வகையினது. பல சரித்திரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐரோப்பிய ஜனநாயகக் கூறுகளை மாத்திரம் அளவீடாகக் கொண்டு நோக்குபவர்களால் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாதது. “பாவத்தின் சம்பளம் மரணம்’ எனப் பழங்கதை பேசுபவர்களின் பட்டியலில் அடங்காதது. “போரில் மனித இழப்பு தவிர்க்க முடியாதது’ என வரட்டுத் தத்துவம் பேசுபவர்களால் அறிந்து கொள்ள முடியாதது. இரத்தமும், சதையும், கண்ணீரும் என வாழ்ந்து, போரின் துயர்களுக்கு முகங் கொடுத்து, “பறிகொடுக்கக் கூடாத’ அத்தனையையும் பறிகொடுத்து, உயிர் தப்பி, நடைப் பிணங்கள் போன்று வாழ்ந்து கொண்டு, “எங்களை இரட்சிக்க மேய்ப்பன் ஒருவர் வர மாட்டாரா?’ என ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களால் மாத்திரமே ஈழத் தமிழரின் கண்ணீரை முழுவதுமாக விளங்கிக் கொள்ளவும், புரிந்து கொள்ளம் முடியும்.

அத்தகைய ஒரு விளக்கத்தை, புரிதலை ஏனையோரிடத்தில் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே அமரதாஸின் ஒளிப்படக் கண்காட்சியை நோக்க வேண்டும். அமரதாஸ் குறிப்பிடுவதைப் போன்று ஒளிப்படங்கள் மிகவும் காத்திரமான ஊடகங்கள். அவற்றில் பொய்மை இருக்க முடியாது. உள்ளதை உள்ள படியே பதிவு செய்யும் அவை கறுப்பு வெள்ளை நிறங்களில் காட்சிப் படுத்தப்படும் போது, தாம் கொண்டிருக்கும் கருத்தை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றன. அவரது கருத்தை ஒட்டியே, அவர் காட்சிப் படுத்திய ஒளிப்படங்கள் யாவும் கறுப்பு வெள்ளையிலேயே வைக்கப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது.

இது மே மாதம். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த மாதம். தமிழர்களின் வீரத்தையும், வேதனைகளையும் நினைவு கூர்வதற்கான மாதம். இழப்புக்களின் நினைவு கூரலில் எதிர்கால செயற்பாடுகளுக்கு வழிகோலும் தருணம். இந்தக் காலகட்டத்தில் குறிப்பறிந்து இந்த ஒளிப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருப்பது அதிலும் சுவிஸ் நாட்டவர்களை இலக்கு வைத்துச் செய்யப் பட்டிருப்பது சாலப் பொருத்தமானது.

வெறுமனே துயரங்களை மாத்திரம் காட்சிப் படுத்தாமல், போரின் வடுக்களை மாத்திரம் காட்சிப் படுத்தாமல், போர்க் காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியல் சம்பவங்களையும் காட்சிப் படுத்தியதன் ஊடாக, தான் ஒரு பரப்புரையாளன் என்ற வரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒரு சிறந்த ஊடகவியலாளன் என்பதை அமரதாஸ் நிரூபித்து நிற்கிறார்.
அது மாத்திரமன்றி, புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் ஊடகவியலாளர்கள் தாயகத்திலே பெரிதாக எதுவும் சாதித்து விடாமல், புலம்பெயர்ந்த நாட்டிற்கு வந்த பின்னரே புகழைத் தேடிக் கொண்டார்கள் என “அப்பாவித் தனமாக(?)’ நினைக்கும் ஒருசிலரின் எண்ணங்களையும் அமரதாஸின் ஒளிப்படக் கண்காட்சி உடைத்திருக்கிறது.

இத்தகைய கண்காட்சியை அமரதாஸ் அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடாத்தி இருக்கிறார். தற்போது சூரிச் மாநகரில் நடைபெறும் கண்காட்சியைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற கண்காட்சியைத் தொடர இருக்கிறார். அது மாத்திரமன்றி, ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைச் சபையிலும் நேரில் தோன்றி சாட்சியம் வழங்கி இருக்கிறார்.

ஒரு ஊடகவியலாளனாய், போர்க் காலத்திலே பணியாற்றிய ஒருவனாய் தனது பணியை அவர் தொடர்கிறார் என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமான ஒரு செய்தி அல்ல. ஊடகவியலாளர்களாகப் புலம்பெயர்ந்த பின்னர் “பொதுமக்களாகிப்’ போன தமிழ் ஊடகர்களுக்குமான அழுத்தமான செய்தியே.

“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்’ என்பது தமிழில் உள்ள ஒரு சொல்வகை. அதன் அர்த்தம் ஏழையின் கண்ணீரில் இருந்து உருவாகும் செயற்பாடு ஒரு மாற்றத்தை, புரட்சியை நோக்கிச் செல்லும் என்பதே. தமிழர்கள் சிந்திய கண்ணீருக்கு அளவே இல்லை. கடந்த காலத்தில் மட்டுமன்றி நிகழ்காலத்தில் கூட தினம் தினம் தமிழர்கள் கண்ணீர் சிந்திய வண்ணமே உள்ளார்கள். ஆனால், அந்தக் கண்ணீர் ” மழுங்கிய கத்திகளாகவே’ வீணாகிப் போகின்றன.

இத்தகைய அவல நிலைக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஈழத் தமிழர் அரசியலை நகர்த்திச் சென்றவர்கள். இன்றும் நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். பதில் சொல்வார்களா?

சுவிசில் இருந்து சண் தவராஜா
நன்றி-தினக்குரல் 2018-05-21
http://thinakkural.lk/article/10283

Thursday, September 6, 2018

Destroyed cage.




துயர் பெருக்கும் இறுதிப் போர்க்காலம்... தமிழ் மக்கள் குடியிருப்புகளின் மேல், சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் அவ்வப்போது நடந்துகொண்டிருந்தன.

நீண்ட தூரம் இடம் பெயர்ந்து அலைந்தவர்கள் செறிவாகத் தங்கியிருந்த இரணைப்பாலை என்ற இடத்திலே, தற்காலிகக் கொட்டகை ஒன்றின் மேலேயே எறிகணை ஒன்று விழுந்து வெடித்தது. அந்த இடத்தில், தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடக்கக் கூடும் என்று அஞ்சிய பலரும் ஆங்காங்கே ஓடிப் பதுங்கிக்கொண்டார்கள்.

அயலவர் சிலருடன், எறிகணை வெடித்த திசையினை நோக்கி உடனடியாகவே விரைந்தேன். (பல தடவைகள் நான் இடம்பெயர்ந்து, இரணைப்பாலை என்ற இடத்தை அடைந்திருந்தேன். அங்கு நான் தற்காலிகமாக வசித்த கொட்டகைக்கு மிக அருகில், கிட்டத்தட்ட 50 மீற்றர் தூரத்திலேயே அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.)

புழுதியும், புகையும், மரண நெடியும் படிந்த சிதிலங்களிடையே அதிர்ச்சியில் உறைந்து எதையோ தேடிக்கொண்டிருந்தார் அவர். மகனும் மனைவியும் பெரு வெடிப்பில் உருக்குலைந்து போயிருந்த விபரீதத்தை அப்போது தான் உணரத்தொடங்கியிருந்தார். ஒரு குடும்பத்தைக் கொண்டிருந்த அவர் மட்டுமே மயிரிழையில் உயிர் பிழைத்திருந்தார் அப்போது. அந்த விபரீத நிலையில், அவர் என்ன நினைத்தாரோ...? யாரை நினைத்தாரோ...? அவரே, சிதைந்த உடல்களின் பாகங்களைத் தேடித்தேடிக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தார். இதயத்தின் குமுறலை, விரல்களில் தாங்கிக்கொண்டிருந்தவரின் தோற்றம், என்னை வியப்பிலும் வேதனையிலும் ஆழ்த்திக்கொண்டிருந்தது. அயலவர் சிலரும் அவருடன் இணைந்து, இரண்டு சடலங்களின் சிதைவுகளையும் தேடிக்கொண்டிருந்தார்கள்.

கொல்லப்பட்டிருந்தவர்களின் உருவப்படங்களைக் கண்டெடுத்தேன். அந்தப் பதின்பருவத்துப் பையனின் முகத்தை, இனி எப்போதும் அவனால் பயன்படுத்த முடியாத 'பயண அனுமதி அட்டை' ஒன்றிலே அப்போது தான் பார்த்தேன். (அந்தப் 'பயண அனுமதி அட்டை', 'தமிழீழம்' என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டமைத்திருந்த 'நிழல் அரசாங்க' அடையாளங்களில் ஒன்று.)

உருக்குலைந்து சிதறிக் கிடந்த சடலங்களின் பாகங்கள், இரண்டு பொதிகளில் அடுக்கப்பட்டன. அருகில் இருந்த ஒரு பற்றைக்கிடையில் புதைப்பதற்காக, அவற்றை எடுத்துச் சென்றார்கள் அயலவர்கள்.

அவர் கடைசியாக நடந்தார். 'நடைப்பிணம்' என்னும் மொழிவழக்கின் காட்சிப்படிமம் என் கண்களின் முன்னே... கடைசியாக அவர் நடந்தார். அவரை நான் பின்தொடர்ந்தேன்.

பயண வழியில், கிளைகளை இழந்திருந்த ஒரு அடிமரத்தின் விளிம்பில், தனித்திருந்து விசும்பிக்கொண்டிருந்தது சிறு குருவி.

ஒரே குழியில், மகனையும் மனைவியையும் இரண்டு பொதிகளாய் இறக்கிவைத்தார். பிறகு, தன் தீனக்குரலை உருவியிழுத்துக் கைகளில் ஏந்தி என்னவோ சொன்னார். அப்போது என்னவோ சொன்னார்....என்ன சொன்னாரோ...?

அவர் இனி என்ன செய்வார்...? எங்கு செல்வார்...? தன்னிச்சையாகத் தோன்றிக்கொண்டேயிருந்தன கேள்விகள். யுத்தத்தில் கொல்லப்பட்டோரினதும் காணாமல் ஆக்கப்பட்டோரினதும் உறவினர்கள் பெறும் பெருவலியை, எழுத்தில் இறக்கிவிட முடியுமா...? சுயாதீன ஊடகராயிருந்து, என் சனங்களின் அவலங்களைப் பதிவாக்கிய அனுபவங்கள் அதீதமானவை.

அன்றைய காலையின் ஒளியிலே படர்ந்த அவலத்தின் கோடுகள், என் கமெராவில் பதிவாகிக்கொண்டிருந்தன. கலங்கிக்கொண்டிருந்த என் கண்களால் குவியப்படுத்தலை (focus) மேற்கொள்ளச் சிரமாயிருந்தது.

அவலத்தில் விடிந்த அந்த நாளின் பின்னர், அவரை எங்கும் நான் காணவேயில்லை. போர் முடிந்த பிறகு, மீள்குடியேறி, மனநோயில் உழன்று, அவரும் அநாதரவாக இறந்து போனாராம். ஆக, அந்தக் குடும்பத்தில் யாருமே இன்றில்லை.

என் படங்களின் கோடுகளில் படர்ந்துகொண்டேயிருக்கின்றன, சந்ததியின்றி அழிந்துபோய்விட்ட அந்தக் குடும்பத்தின் நினைவுகள்.

2018-09-06
அமரதாஸ்

Tuesday, September 4, 2018

பேரைச் சொல்லவா...அது நியாயமாகுமா...?



முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி பற்றிய பதிவுகள், அவரது மறைவைத் தொடர்ந்து சமூக  வலைத்தளங்களில் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. கருணாநிதியின் பெயருக்குப் பதிலாக, 'கலைஞர்' என்ற பொதுவான வார்த்தை தான், பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பிரயோகிக்கப்படுகிறது. அதுவே அவரை மதிப்புடன் அழைப்பதற்கான 'பட்டப்பெயர்' என்று கருதப்படுகிறது. (அது, அவரது 'புனைபெயர்' அல்லது 'மாற்றுப் பெயர்' அல்ல என்பது கவனத்துக்குரியது.) 

கருணாநிதி பற்றிய நிகழ்வொன்றில், அவரது பெயரைக் குறிப்பிட்டு ஊடகர் திரு. சமஸ் உரையாற்றிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், இடையில் சிலர் எழுந்து “கருணாநிதி என்று சொல்லாதே, கலைஞர் என்று சொல்” என்று கத்தியிருக்கிறார்கள். அந்த சர்ச்சை குறித்து, சமஸ் தனது முகநூலில் எழுதியிருந்தார். இத்தகைய சர்ச்சைகள் குறித்த எனது நிலைப்பாடு தொடர்பாக ஏற்கெனவே பலருடன் பலமுறை பேசியும், அவ்வப்போது எழுதியும் வந்திருக்கிறேன். 

கலைஞர் என்ற சொல்லானது பொதுவாகக் கலைத்துறை சார்ந்தவர்களுக்கானது. அது, தனக்கெனப் பிரத்தியேகமான அர்த்த பரிமாணத்தையும் நீண்டகாலப் பாரம்பரியத்தையும் கொண்டது. கருணாநிதி என்னும் பெயரை மறைத்து, 'கலைஞர்' என்ற சொல்லை மட்டும் பெயருக்குப் பதிலாகப் பிரயோகிப்பது நியாயமாகுமா? அவரை விடவும் காத்திரமாகக் கலைப்பணியாற்றிய பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பெயர் குறிப்பிட்டு அழைக்காமல், 'கலைஞர்' என்று பொதுவாக அழைத்தால் எப்படியிருக்கும்?       

ஒருமுறை எழுத்தாளர் திரு. ஜெயகாந்தனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட  கருணாநிதி, 'கலைஞர் பேசுகிறேன்' என்று முதலில் சொன்னாராம். 'நானும் கலைஞர் தான், சொல்லுங்க' என்று பதிலுக்குச் சொன்னாராம் ஜெயகாந்தன். இதை அறிந்தபோது குபீரென்று சிரிப்பு வந்தது. கூடவே, நடிகர் திரு. வடிவேலு திரைப்படத்தில் பேசிப் பிரபலமான 'நானும் ரவுடி தான்' என்ற வசனம் நினைவுக்கு வந்தது. ஒருவகை  அறச்செருக்குடன், எள்ளலுடன் ஜெயகாந்தன் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். அடிப்படையில் அவரும் 'கலைஞர்' தான். கலைத்துறை சார்ந்து இயங்கிய கருணாநிதியை, 'கலைஞர் கருணாநிதி' என்று  'அழைப்பது' பொருத்தமாக இருக்கலாம். 'கலைஞர்' என்ற பொதுச் சொல்லானது, கருணாநிதியின் தனியுடமையாகக் கட்டமைவது தான் கேள்விக்குரியது.

யாருக்காக, எங்கு, எத்தகைய பட்டப்பெயரை ஒருவர் பிரயோகிக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது. இருந்தாலும், அது சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் கவனிக்கப்படவேண்டியவை. தனிநபர் துதிபாடல், வழிபாட்டு மனோபாவம், அதீத அபிமானம், அதீத விசுவாசம் போன்ற பின்னணிகளில் இருந்து ஒருவர் மீதான பட்டப்பெயர் கட்டமைக்கப்படுகிறது. இதுபோலவே, ஒருவரை இழிவாகச் சித்தரிக்கும் வகையிலான பட்டப்பெயர்களும் கட்டமைக்கப்படுகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியது. ஒருவரை நேசிக்கவும் புகழவும் அல்லது வெறுக்கவும் இகழவும், பட்டப்பெயர் மட்டுமே உண்மையான காரணியாக அமைந்துவிடுவதில்லை. இருந்தாலும், பட்டப்பெயர்கள் சமூகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. கலாச்சாரம், அதிகாரம் மற்றும் அரசியல் போன்ற காரணிகள், பட்டப்பெயர்களின் உருவாக்கத்தில் அதிகமதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன. பட்டப்பெயராக வழங்கப்படுகிற பல சொற்கள், பெரும்பாலும் 'துஸ்பிரயோகம்' ஆவது நடைமுறை யதார்த்தமாகத் தொடர்கிறது. அதிகாரத்தின் பிரயோகமாக, பொருத்தமில்லாத நடைமுறையாக, வழிபாட்டின் விம்பமாக  ஒரு  பட்டப்பெயர் மாறும்போது பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.   

'பட்டப்பெயரை' ஒருவரின் 'மரியாதைக்குரிய' அடையாளப் பெயராக ஆக்கிவிடுவது மொழியியல், சமூகவியல் நோக்கில்  ஆரோக்கியமானதல்ல. பெரியார் என்று ஈ.வே.ராமசாமியையும் மகாத்மா என்று காந்தியையும் கலைஞர் என்று கருணாநிதியையும் அம்மா என்று ஜெயலலிதாவையும்  அழைப்பது எல்லோருக்கும் உவப்பானதாக இருக்குமா? மக்கள் அபிமானம் பெற்று சமூக முக்கியஸ்தர்களாகக் கருதப்படுகிறவர்களின்  அசலான பெயர்களை, ஜனநாயக வெளிகளிலும் ஊடகங்களிலும் புழக்கத்தில் கொண்டுவருவது தான் ஆரோக்கியமானது.

சினமாவிலும் இலக்கியத்திலும் நன்கு அறியப்பட்டிருந்த ஒருவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழைப்பில் தமிழகத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்திருந்தார். ஒரு நாள், அவருடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நடிகர் திரு.விஜய் நடித்த ஒரு திரைப்படத்தின் விளம்பரத்தை அங்கிருந்த சிறிய திரையரங்கிலே காண முடிந்தது. அதில் 'இளைய தளபதி விஜய்' என்று எழுதப்பட்டிருந்தது. ''எத்தனையோ உண்மையான தளபதிகள் இருக்கும் இந்த இடத்தில், ஒரு நடிகரின் பெயருடன் 'தளபதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாமே...'' என்று அந்தத் தமிழக நண்பர் அப்போது சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.    

தமிழைப் பொறுத்தவரையில் எழுத்தில்  மதிப்புடன் ஒருவர் பெயரை அடிக்கடி  பயன்படுத்த வேண்டியிருந்தால் ஆரம்பத்தில் மட்டும்  'திரு', 'அவர்கள்' போன்ற  ஏதாவது ஒரு சொல்லைப் பயன்படுத்துவதே போதுமானது. 'திரு', 'அவர்கள்', 'மேதகு'  போன்ற மதிப்புக்குரிய சொற்களை, ஒரு பெயரின் முன்னும் பின்னுமாக அடுக்க வேண்டிய அவசியமேயில்லை. பெயர்களை மறைத்துவிட்டு, தலைவர், கலைஞர், தேசியத் தலைவர், அம்மா, தளபதி, பண்டிதர், பெரியார், மகாத்மா, கவிப்பேரரசு, சுப்பர் ஸ்டார், உலக நாயகன் என்றெல்லாம் பதவி நிலைகளாலும் பட்டங்களாலும் மனிதர்கள் முன்னிறுத்தப்படுவது ஆரோக்கியமானதா? இத்தகைய வழக்கமானது, சார்புநிலைப்பட்டதாகவும் வழிபாட்டு மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் தமிழ்ச் சமூகத்தில் தொடர்வதைத்தான் அவதானிக்க முடிகிறது.

ஒரு தரப்பினரால் 'தலைவராக' ஏற்றுக்கொள்ளப்படுகிறவர், 'மாற்றுத் தரப்பினர்' எல்லோரினதும் 'தலைவர்' ஆகிவிட  முடியுமா? ஒரு 'கலைஞர்' தான் இருக்க முடியுமா? ஒரு 'கவிப்பேரரசு' தான் இருக்க முடியுமா? ஒரு 'தேசியத் தலைவர்' தான் இருக்க முடியுமா? ஒரு 'பெரியார்' தான் இருக்க முடியுமா? ஒரு 'மகாத்மா' தான் இருக்க முடியுமா? இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுப் பார்ப்பது நல்லது.

ஒருவரைப் பற்றிய பதிவொன்றில், அவரது பெயரும் தனித்துவமான அடையாளங்களும் விபரங்களும் மதிப்பீடுகளும் தான் முக்கியமே தவிர, 'பட்டப்பெயர்' அல்ல. ஒரு பதிவின் பல்வேறு இடங்களில் ஒருவரது பெயர் பாவிக்கப்பட நேர்கையில், மரியாதையினை வெளிப்படுத்தும் 'திரு' போன்ற முன்னொட்டுக்களையோ 'அவர்கள்' போன்ற பின்னொட்டுக்களையோ எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டியதில்லை. தொடக்கத்தில், ஒரு இடத்தில் மட்டும் பயன்படுத்தினால் போதும். சர்வதேச அளவில் பிரபலமான ஊடகங்களில், கட்டுரை அல்லது செய்தி போன்றவற்றில், முக்கிய பிரமுகர்களினது பெயர்கள் கையாளப்படும் 'ஊடக முறைமை' கவனிக்கப்பட  வேண்டியது. (தமிழில் சில விடயங்கள் சிக்கலானவையாகவே தொடர்கின்றன.) 

மொழி என்பது அடிப்படையில் விஞ்ஞான பூர்வமானது. அதனால் தான் மொழி சார் இலக்கணங்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன. மொழியின் இருப்புத் தொடரவும் வளர்ச்சியடையவும் விஞ்ஞான பூர்வ அடித்தளமே  வழிவகுக்கிறது. மொழியானது, அதன் பிரயோக நிலையிலே தான் உணர்வுபூர்வ பரிமாணங்களை அடைகிறது. உண்மையில், தமிழை நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழ் மொழியின் இனிமை, அறிவியல் போன்ற பின்னணிகள் தொடர்பிலான தேடலைப் படைப்பாக்க வழிமுறைகளில் தொடர்கிறேன். மொழியின் மரபில் தொடரும் கசடுத்தனங்களை அறியவும் விலகி நடக்கவும் விழைகிறேன். ஒரு எழுத்தாளர் மற்றும் ஊடகர் என்ற முறையில், இயன்றவரையிலும் தெரிந்தவரையிலும் தமிழை நான் செம்மையாகவே பிரயோகிக்க முனைவேன்.

விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்தவர் திரு. பிரபாகரன். அவரைப் பற்றி எங்காவது நான் குறிப்பிட நேர்ந்தால், அவரது பெயரைக் குறிப்பிடுவது வழமை. (ஊடகவியல் மரபின் அடிப்படையிலான எனது சுயாதீன நடைமுறை அது.) இதனால், பிரபாகரனின் தீவிர விசுவாசிகளாகக் காட்டிக்கொள்கிற, ஊடகவியல் மொழியின் சாத்தியப்பாடுகளைப் புரிந்துகொள்ளாத சிலர், தமது 'எதிர்ப்புகளை' வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அவர்களது 'அறியாமை', 'தீவிர விசுவாசம்' போன்றவற்றின் எதிர் வெளிப்பாடுகளை என்னால் 'புரிந்துகொள்ள' முடிந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாது. இயன்றவரை, எனது நிலைப்பாட்டினை எழுத்திலும் நேரிலும் சிலருக்கு விளக்கியிருக்கிறேன். எது எப்படியிருந்தாலும், யாரைப் பற்றியாவது எழுத நேரும் போது, அவர் எத்தகைய பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும், ஊடகவியல் பண்புகளின் அடிப்படையில் அவரது பெயரைக் குறிப்பிட்டே எழுதுவேன். அதனால், அந்தப் பெயருக்குரியவருக்கு எந்த மரியாதைக் குறைவும் ஏற்பட்டு விடாது.   

'பேரைச் சொல்லவா...அது நியாயமாகுமா...?' என்ற திரை இசைப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பெயரைச் சொன்னால் என்ன தான் குறைந்துவிடப் போகிறது..? பெயரில் என்ன இருக்கிறது? ஒருவரை நினைவுபடுத்த, அழைக்க உதவும் அடையாள வார்த்தையாகவே பெயர் அமைந்திருக்கிறது. கணவன் பெயரை மனைவி சொல்வது, மரியாதைக் குறைவாகும் என்று நம்பக்கூடிய  தமிழ்ச் சமூகத்தின் 'நுட்பமான' ஆதிக்க மனோபாவத்தையும் மொழியோடு வன்புணரும் கலாச்சாரக் கசடுத்தனங்களையும் உற்றுக் கவனிக்க வேண்டும். பரஸ்பரம் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில் சுயமரியாதை, தோழமை பேணப்பட முடியும். சுவிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், குடும்ப அமைப்பிற்குள் பரஸ்பரம் பெயர் சொல்லியே பெரும்பாலும் அழைத்துக்கொள்வார்கள்.   

சமூகப் பிரபலங்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்பும் 'அதிகாரிகள்' முன்பும்  எழுந்து நிற்றல், காலில் விழுந்து வணங்குதல் போன்ற செயல்கள் மூலம் உண்மையிலேயே 'மரியாதை' வெளிப்பட்டு விடுகிறதா? அதிகார இருப்பிற்கான அங்கிகாரமாக, கீழ்படிதலின் அல்லது தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடாக, வெறும் சம்பிரதாய நடைமுறையாக அத்தகைய செயல்கள் பெரும்பாலும் அமைந்து விடுகின்றன.

படைப்பாளிகள் மற்றும்  போராளிகள் பலருடன், விடுதலைப் புலிகளின்  தலைவர் பிரபாகரன் கலந்துகொண்ட ஒரு பிரத்தியேக நிகழ்வில், ஒரு படைப்பாளியாக நானும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. திரு. பொட்டு மற்றும் திரு. தமிழ்ச்செல்வன் போன்றவர்களுடன் மேடைப் பகுதியில்  இருந்த பிரபாகரன், ஒரு தேவைக்காக எழுந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து எழுந்து நின்றுவிட்டார்கள். அந்த இடத்தில், எல்லோரும் எழுந்து நிற்க வேண்டிய 'அவசியம்' இருக்கவில்லை. அந்த இடத்தில் பிரபாகரன் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இது பற்றி, அப்போது சில நண்பர்களுடன் பேசியிருக்கிறேன். 'சுவாரசியமான' அந்த அனுபவத்தையும், அந்த நிகழ்வில் பிரபாகரனிடம் இருந்து  அவதானிக்க முடிந்த சில நற்பண்புகளையும் தனியாகப் பிறகு ஒரு தருணத்தில் பதிவுசெய்யலாம் என்று தோன்றுகிறது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சில நண்பர்கள் இன்னமும் வாழ்கிறார்கள். 

2018-09-04
அமரதாஸ்

கமல் - BIGG BOSS - காலில் விழுதல்



மனித உணர்வுகளுடன் 'விளையாடும்' தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவே பெரும்பாலும் 'பிக்பாஸ்' காட்சியளிக்கிறது. இது பொதுவாகவும் சுருக்கமாகவும் சொல்லக்கூடிய கருத்து. இது விரிவான விவாதத்திற்குரியது. அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு ஊடக நிகழ்ச்சி என்ற வகையில், அது பற்றிய தெளிவான 'புரிதல்' அவசியமாகும். (ஆய்வு நோக்கில் மட்டுமே, அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.) 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என்றுபிரத்தியேகமான வணிக நோக்கங்களே முதன்மையானவையாக உள்ளன. அதனை, அதன்போக்கில் யார் வந்து நடத்தினாலும் இப்படித்தான் இருக்கும். என்றாலும், கமல் நடத்தும் போது, அது அவருக்கான நிகழ்ச்சியாகவும் ஆகிவிடுகிறது. அவர் அப்படியாக ஆக்கிவிடக் கூடியவர். சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடிகர் திரு. கமல்ஹாசன் வந்து செல்லும் நிகழ்ச்சிப் பகுதிகளில், சில 'நல்ல விடயங்கள்' நடந்திருக்கின்றன.

இன்றைய நிகழ்ச்சியில், திரு. டானியல் வெளியேறும் படலத்தில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சம்பவம் அடங்கியிருந்தது. கமலின் காலில் விழ முயன்ற டேனியை நிறுத்தி, ''அதுக்கு இன்னொரு வழி இருக்கு'' என்று சொல்லிக்கொண்டே கட்டிப்பிடித்துக்கொண்டார் கமல்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கமல். அவரை எனக்குப் பிடிப்பதற்கான காரணங்களில் ஒன்று அது. ஆனால், 'ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்' என்று அவரைப் பிறர் சொல்லும்போது, 'ஆமோதிப்பது போல' அவர் நடந்துகொள்வதை எப்படிப் புரிந்து கொள்வது? நேற்று, திரு.பாலாஜி அப்படிச் சொல்லும்போது 'அமைதியாக' இருந்துவிட்டார் கமல். அவருக்குள் ஒருவித 'மேட்டிமைத்தனம்' தொழிற்படுகிறதோ என்னவோ?

எதற்காகவும் காலில் விழுவது தவிர்க்கப்பட வேண்டியதே. கட்டி அணைத்தல், கைகுலுக்குதல் போன்ற நடத்தைகளில், பரஸ்பர அன்பும் மதிப்பளித்தலும் பேணப்பட முடியும். பொதுவாக மனித நடத்தைகளில், பரஸ்பர சுயமரியாதை பேணப்பட வேண்டியது அவசியமாகும்.

2018-09-02
அமரதாஸ்

Friday, June 22, 2018

ஊடக அற மீறல்.



ஒரு அமைப்பின் (PLOTE) ஆரம்பகாலப் பயிற்சிமுகாம்  காட்சிகளை YouTube தளத்தில் மிக அண்மையில் பார்த்திருந்தேன். அதிலிருக்கும் சில பயிற்சிக்  காட்சிகள், IBC தொலைக்காட்சி யின்  நிகழ்ச்சியொன்றில் ('தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்! - வெளிவரும் அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்') பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மூலக் காட்சிகளில் 'Swiss Ranjan PLOTE' என்று பதிக்கப்பட்டிருந்த எழுத்துகள், IBC தொலைக்காட்சி யில் பயன்படுத்தும் போது அழிக்கப்பட்டிருப்பது ஊடக தர்மத்தின் அடிப்படையில் நியாயமானதல்ல. இரண்டையும் YouTube  மூலம்  அண்மையில் நான் அடுத்தடுத்துப் பார்க்க முடிந்தமையால்  இதனைக் கண்டுபிடிக்க முடிந்தது. இப்படியான காரியங்களில் சில 'ஊடகங்கள்' அவ்வப்போது செயற்பட்டு வருவது புதிதல்ல என்றாலும், இப்போது ஆதாரபூர்வமாக  அறிந்த இதனைப் பதிவுசெய்யத் தோன்றியது. ஒருவேளை, சம்மந்தப்பட்டவர்களிடம் முறையான அனுமதி பெற்று எழுத்துகள் அழிக்கப்பட்டிருந்தால், அது ஊடக தர்மத்துக்கு உட்பட்டதாக அமைந்திருக்கக் கூடும்.

சுவிஸ் ரஞ்சன் என்பவரோ  புளொட் அமைப்பினரோ என்னுடன் தொடர்பில் உள்ளவர்களல்ல. IBC தொலைக்காட்சி மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை. ஒரு சுயாதீன ஊடகராக, எனது ஊடகவியல் அனுபவ அறிவின் அடிப்படையில் எனது 'பார்வையினை' இங்கு பதிவுசெய்கிறேன். அவ்வளவு தான். இது, கடந்து போய்விடக்கூடிய 'சிறிய' விடயமாகப் பலருக்கும் தோன்றக் கூடும். ஆனால், இத்தகைய விடயங்களை ஊடக உலகத்தில் 'அனுமதிப்பது' ஆபத்தானதாகும்.   

வரலாற்று ஆதாரங்களை, தகவல்களை, படங்களை  எங்கிருந்தும் யாராலும் பெற முடியும். அவற்றின்  உண்மைத்தன்மையினையோ பின்னணித்தகவல்களையோ மறைக்க முயல்வது ஊடக தர்மத்தின் அடிப்படையில் இழுக்கான காரியமாகும். அது அறமற்றது. ஒருவருக்கு உரித்துடைய ஆவணம் ஒன்று, நல்ல நோக்கத்திற்காக எடுத்தாளப்படும் போது, உரித்துடையவரின் 'பெயர்' திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுவது அறமல்ல. ஒரு இடத்தில்  இருந்து ஒன்றைப் பெறுவது விருப்பமில்லையெனில் அல்லது பெறுவதில் உடன்பாடில்லையெனில், அதைப் பெறாமலேயே இருந்துவிடலாமே... இன்னொருவரினதோ இன்னொரு அமைப்பினதோ ஆவணத்தின் உண்மைத்தன்மையை  மறைக்க முயல்வது மோசமான  ஊடக ஊழலாகும். தயவுசெய்து  இத்தகைய ஊழலை ஊடகங்களும் தனிமனிதர்களும் இனியாவது செய்யாமலிருக்க வேண்டும்.



விடுதலைப் புலிகளுக்கும் இந்திய  இராணுவத்தினருக்கும் இடையிலான  மோதல் இடம்பெற்ற  காலத்தில், விடுதலைப் புலிகள் வளர்த்த சிறுத்தை ஒன்று கைவிடப்பட்டது பற்றி, நேற்று ஒருவர் தனது முகநூலில் பதிவுசெய்திருந்தார். அந்தப் பதிவினை, இன்று இரண்டு நபர்கள் தமது முகநூலில் எழுதியவரின் பெயர் போடாமல் அப்படியே மீள்பதிவு செய்திருந்தார்கள். இத்தகைய பொறுப்பற்ற செயல்களை முகநூலிலும்  அடிக்கடி காண முடிகிறது. முகநூலும் அடிப்படையில் ஒரு ஊடகமாகும். அதனாலேயே அது சமூக வலைத்தளம் என்று சொல்லப்படுகிறது.

2018-06-22

கொலையும் குரூர மனநிலையும்.


இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதில்லை. இந்த உலகமானது, குறிப்பிட்ட இனப் பிரிவினருக்கானதோ நிறப் பிரிவினருக்கானதோ வர்க்கப் பிரிவினருக்கானதோ மதப்பிரிவினருக்கானதோ ஏனைய பிரிவினருக்கானதோ மட்டுமானதில்லை என்பதை எல்லா மனிதர்களும் உணர வேண்டும்.

ஜீவகாருண்ணியம் எனப்படுவது, மனிதர்களிடம் இருக்க வேண்டியதும் மனிதாபிமானத்தை உள்ளடக்கியதுமாகும். ஒரு 'ஆபத்தான உயிரினம்' ஆபத்துக்குரிய தருணத்தில் கொல்லப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கக் கூடும். ஒரு கொலைக்கு, சில தவிர்க்க முடியாத காரணங்கள் இருக்கக் கூடும். எது எப்படியிருந்தாலும், ஒரு கொலையினைக் கொண்டாட்ட மனநிலையில் அணுகும் மனித மனநிலை மிகவும் வக்கிரமானது, ஆபத்தானது...

கிளிநொச்சியில் ஒரு சிறுத்தை கொலை செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கொலை, பாதுகாப்புக் காரணத்துக்கானதாக இருக்கலாம். அது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். அந்தக் கொலையானது, சட்ட ரீதியில் குற்றமாகக் கூட இருக்கலாம். அந்தக் குற்றத்தின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அந்தக் கொலை நடைபெற்ற சூழலில் நிலவிய 'கொண்டாட்ட மனநிலை' கண்டிக்கப்பட வேண்டியது. வெற்றிக் களிப்புடன் கூடிய வக்கிர மனநிலை அது. அங்கு பதிவாகியுள்ள ஒளிப்படங்களும் வீடியோ பதிவுகளும் மனிதர்கள் சிலரின் குரூரத்தை வெளிப்படுத்துகின்றன.

'இன விடுதலையின் பெயரால்', சொந்த இனத்திற்குள்ளேயே இயக்கங்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான படுகொலைகளை 'ஆதரிக்கிற' மனநிலை கொண்டவர்கள், இதையும் இலகுவில் கடந்து போய்விடுவார்களா? போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைக் குற்றங்களையும் 'கொண்டாட்ட மனநிலையில்' குரூரமாகச் செய்து முடித்த சிங்கள அரச தரப்பினருடன் இணங்கிப் போகிறவர்கள், எதையும் கடந்து போய்விடுவார்களா? வீட்டுக்குள் புகுந்துவிட்ட பாம்பு ஒன்றினை அடித்துக் கொன்றுவிட்டு, இப்படி யாரும் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்களா?

இந்த 'சிறுத்தை' படுகொலைக்குள்ளானது, இலங்கையில் இனி விசாரிக்கப்படக் கூடும். அத்தகைய விசாரணையை வேண்டுகிறவர்களும் அதற்கு ஆதரவாக இருப்பவர்களும், இறுதி யுத்த காலத்தில் பெருந்தொகையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் போர்க்குற்றங்களுக்குமான விசாரணைகளை வேண்டுவார்களா?

குறிப்பு - சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள இந்த ஒளிப்படத்தினை ஆவண முக்கியத்துவம் கருதிப் பதிவுசெய்கிறேன். ஏனைய படங்கள் மற்றும் வீடியோ எதனையும் பதிவுசெய்ய மனம் வரவில்லை. கொல்லப்பட்ட சிறுத்தையின் தோற்றம் தரும் துயரத்தை விட, சில மனிதர்களின் உடல் மொழியிலும் கூக்குரல்களிலும் தொனிக்கும் 'குரூரம்' தரும் துயரம் அதீதமானது.

2018-06-22

Thursday, June 14, 2018

கேரளப் பயணத்தின் சிறு தடம்.




சில கேரள நண்பர்களுடன் ஒரு வண்டியில் ஒளிப்படங்கள் எடுப்பதற்காகப் பயணித்துக்கொண்டிருந்த போது, கேரளாவின் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில்   கம்பீரமாக நிற்கும் திரு. சே குவேரா வின் பெரிய அளவிலான படத்தைக் கண்டேன். (கேரளாவில், பல இடங்களில் சே குவேரா வின் படங்களைக் கண்டிருக்கிறேன்.) அந்த இடத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். 

உண்மையான போராளியாக மட்டுமல்ல, கவிஞராகவும் ஒளிப்படக் கலைஞராகவும் சே குவேரா இருந்தார். எல்லோரது பிறப்பும் போல, அவரது பிறப்பும் சாதாரணமானது தான். பிற்காலத்தில், தன் வாழ்வை 'அர்த்தமுள்ளதாக' ஆக்கிக்கொண்டார்.

சேகுவேரா கம்பீரமாக நிற்கும் அந்தப்  படம், சில இடங்களில் கிழிந்திருந்தது. அதுவும் கூட வித்தியாசமான அழகைக் கொடுப்பதாகத் தோன்றியது. சே குவேரா வின் பெரும்பாலான படங்கள், எப்போதும் ஈர்ப்புக்குரியவையாகவே இருக்கும். அந்தப் படத்தின் ஈர்ப்பிற்கான காரணங்கள் பற்றி, அந்த இடத்தில் நின்று யோசித்துக்கொண்டிருந்தேன். கேரளத் திரைத்துறையினர் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்த  விவரணத் திரைப்பட இயக்குநரான நண்பர்  ஒருவர், 'அவரைப் போல, உங்கள் கழுத்திலும் ஒரு கமெரா இருக்கிறது' என்று சொல்லிவிட்டு, சே குவேரா வின் அந்தப் படத்துக்கு அருகில் என்னை  நிற்கவைத்து ஒளிப்படம் எடுத்தார். அந்த இடத்தில், நானும் என்னவோ சொல்லிவிட்டு எல்லோருடனும் சேர்ந்து சிரித்தேன்.

2018-06-14
அமரதாஸ்

Friday, June 1, 2018

ராஜ்குமாரும் நானும் அல்லது சென்னையும் சினிமாவும்.

ராஜ்குமார் & அமரதாஸ் (WOODLANDS SYMPHONY திரையரங்கு)

சினிமாவில் தீவிர ஈடுபாடு கொண்டவன் ராஜ்குமார். சென்னையில், திரைத்துறையில் இயங்கும் நண்பன் சோமிதரன் வீட்டில் அவன் தங்கியிருந்தபோதுதான் அவனது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அப்போது சென்னையில் திரைப்பட விழா நடைபெற்றது. தினமும் அவனோடு சென்று பல மொழிகள் சார்ந்த பல்வேறு திரைப்படங்கள் பார்த்தேன்.

சினிமா பற்றி அதிகம் பேசுவான், கேட்பான். அவனுக்கு, வளர்ந்துவரும் HDSLR Film Making பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், காசநோய் விழிப்புணர்வு குறித்த ஒரு குறும் திரைப்படப் போட்டிக்கு அனுப்பவென ஒரு குறும் திரைப்படம் உருவாக்குவோமென்றும், அதற்கு நான்தான் என்னிடமிருந்த Canon HDSLR கமெராவினால் ஒளிப்பதிவு செய்யவேண்டுமென்றும் சொன்னான். அவனது தீவிரம் எனக்கு விளையாட்டுத்தனமாகவே ஆரம்பத்தில் தெரிந்தது. தவிரவும், கலை ரீதியில் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இல்லை. அவனது வற்புறுத்தலால் அவனோடு இணைந்து சென்னையில் பல இடங்களுக்கும் சென்று படப்பிடிப்புக்களை மேற்கொண்டேன்.
கொஞ்சம் விளையாட்டுத்தனமாகவே படப்பிடிப்பு நிகழ்ந்தது. பரீட்சார்த்த முயற்சியாகவும் இருந்தது. பல காட்சிகளைத் உள்ளடக்கம் சார்ந்து, திட்டமிட்டே Out Of Focus நிலையில் எடுத்தேன். கமெரா அசைவுகள், கமெரா கோணங்கள், ஒளியமைப்பு எல்லாவற்றையும் வித்தியாசப்படுத்தியும் எடுத்தேன். என்னைக் கூட வைத்துக்கொண்டு ஒரு பரிசோதனை முயற்சியைத்தான் அவன் செய்துகொண்டிருந்தான். அடிக்கடி திட்டங்களை மாற்றிக்கொண்டிருந்தான். அதிகம் திட்டமிடல் இல்லாமல் இயங்கினான். சிலசமயம் எனக்கு சலிப்பாகவுமிருந்தது, என்னை வைத்துக் ‘கொமெடி’ பண்ணுவது போலவும் இருந்தது.
ஒரு நாள், ஒருவர் இருமுவதுபோல ஒரு காட்சி எடுக்கவேண்டியிருந்தது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ஒரு இடத்தில் நின்று கொண்டு, பலரை வந்து கமெரா முன்னால் இருமச் சொன்னோம். எல்லோரும் மறுத்து நழுவி விட்டனர்.(காசநோய் பற்றிய படம் எடுக்கிறோம் என்று தெரிந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ?) கடைசியில் கமெராவை 'செற்' பண்ணித்தந்துவிட்டு நீங்களே போய் இருமுங்கள் என்று வற்புறுத்தினான். வேறு வழியில்லாமல் நானே கமெரா முன்னால் இரும வேண்டியிருந்தது. அந்த மோசமான இருமலைப் படத்தொகுப்பில் சேர்க்காதே என்று அப்போதே சொன்னேன். அவன் வேறு வழியில்லாமல் அதையே கோர்த்துவிட்டிருந்தான்.
படப்பிடிப்பை வேகமாக ஒரு வாரத்தில் முடித்துவிட்டு வேறு இடம் சென்றுவிட்டேன். நீண்டகாலம் அவனை நேரில் சந்திக்கவில்லை. நான் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் அவசரகதியில் படத்தொகுப்பு செய்யப்பட்டு அவனால் போட்டிக்கு அனுப்பப்பட்டது. போட்டி விதிமுறைகளுக்கு சரியாகப் பொருந்தியிருக்கவில்லையென்றும், பொதுவாக நன்றாக வந்திருப்பதாகவும் அங்கு தேர்வாளர்களாக இருந்த நடிகர் சூர்யா வும், இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனனும் சொல்லி அந்தப் படத்தைச் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்தார்களென்று பிறிதொரு நாளில் ராஜ்குமார் சொன்னான். படத்தொகுப்பின் பின் அது ஒரு பரீட்சார்த்த நிலையிலான Documentary ஆகிவிட்டிருந்தது.
சென்னையில் உள்ள L.V.Prasad Film & TV Academy க்கு ஒரு நாள் அவனை அழைத்துச் சென்றேன். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்குநர் பிரிவுகளில் இணைந்து திரைத்துறை அனுபவங்களை விரிவுபடுத்தும் நோக்கில், அதன் இயக்குநராக இருந்த ஹரிஹரன் அவர்களைச் சந்தித்தேன். ராஜ்குமார், அங்கு எனது கமெராவினால் சில ஒளிப்படங்களும் எடுத்தான். அங்கிருந்த கமல்ஹாசனின் படத்துக்கு அருகே நான் எதிர்பாராத விதமாக ஒரு படத்தை எடுத்துவிட்டு என்னவோ காரணத்துக்காக அது தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னான். எனக்கு, அது கொஞ்சம் செயற்கைத்தனமாகத் தோன்றுவதால் பிடிக்கவில்லை என்று சொன்னேன்.
L.V.Prasad Film & TV Academy யில் இருந்து திரும்பி வந்ததும், இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனின் Mindscreen Film Institute சென்று இயக்குநர் பிரிவில் இணைந்துகொள்ளவிருந்த திட்டத்தைக் கைவிட்டு L.V.Prasad Film & TV Academy யில் இயக்குநர் பிரிவில் இணைந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னான். பிறகு அப்படியே இணைந்து கொண்டான். நல்ல இயக்குநராகி விடுவான் என்று நினைத்திருந்தேன்.
நீண்ட காலம் அவனோடு தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மிக அண்மையில், திரைத்துறையில் இயங்கும் நண்பன் அரவிந்த் மூலம் ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டான் என்ற தகவலை அறிந்தேன். துயரமும் அவனோடு சென்னையில் திரிந்த நினைவுகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன.
ராஜ்குமார்..... உனக்கு என்னடா ஆச்சு? என்னென்னவோ எல்லாம் செய்யவேணுமென்று சொல்லிக்கொண்டிருந்தாயே....

திரு.ஹரிஹரன் & அமரதாஸ் - ராஜ்குமார் எடுத்த படம்.

ராஜ்குமார் எடுத்த படம்.


ராஜ்குமார் எடுத்த படம். (L.V. Prasad Film & TV Academy)

ராஜ்குமார் எடுத்த படம். (L.V. Prasad Film & TV Academy)



சோமிதரன் வீட்டில், சோமிதரனின் அம்மா  மற்றும் ராஜ்குமார்.

அமரதாஸ் 2015-12-20

Sunday, May 20, 2018

நீயா பேசியது...


'நீயா பேசியது...' என்று தொடங்கும் திரையிசைப் பாடலின் இசையமைப்பை நுட்பமாகவே வித்யாசாகர் கையாண்டிருக்கிறார். காதலும் கோபமும் ஏக்கமும் கலந்த கலவையான தொனியில் பாடப்பட்டிருக்கும் விதம் நன்றாக இருக்கும்.

'நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது...'என்று இருக்கும் சாதாரண வரிகள், பாடப்படும் போது கொள்ளும் பரிமாணங்களும் உணர்வுப் படிமங்களும் அலாதியானவை. 'நீயா பேசியது' என்ற இரண்டு வார்த்தைகளை மட்டும் திரும்பத்திரும்ப வெவ்வேறு தொனிகளில் சங்கர் மகாதேவன் பாடுவது அல்லது பிரயோகிப்பது நுட்பமான ரசனைக்குரியது. (நானும் அப்படிப் பாடிப் பார்க்கிறேன்.) ஈர்ப்பான சில வரிகள் உண்டெனினும் 'காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்...' என்ற வரியினை நடைமுறை அர்த்தத்தில், பொதுவில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது, 'தன் கூற்றாக' தனியொருவரின் நம்பிக்கையாக இருப்பதையும் காண முடிகிறது. பெரும்பாலான திரையிசைப் பாடல்களை நான் வரிகளுக்காக விரும்புவதில்லை என்பது வேறு விடையம்.

மிகவும் இலகுவாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கக் கூடிய சுழ்நிலை (situation) தான் இது. பாவம்...ஜோதிகாவை வெருட்டுவது போலவே விஜயின் நடிப்பு பல இடங்களில் அமைந்திருக்கிறது. இதில் விஜய் நடித்திருக்கும் ஒரு இடம் 'மெச்சத்தக்கதாக' உள்ளது. பாடலுக்கு வாய் அசைப்பதைத் தவிர்த்திருக்கலாம். இன்னும் சிறப்பாகவே நடிப்பையும் காட்சியமைப்புக்களையும் இயக்குநர் கையாண்டிருக்க முடியும். (இது ஒரு 'மொக்கைப் படத்தின்' பாடல் என்பது கவனிக்கத்தக்கது.) இந்த இசையினை, 'உள்மனக் குமுறலின் காட்சிப் படிமங்களாக மிகவும் சிறப்பாகவே நகர்த்தியிருக்க முடியும்.


https://youtu.be/KrnwKDvn6dc
அமரதாஸ் 

2017-05-31

நினைத்தேன் வந்தாய்...




'உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்...' போன்ற சொல்முறைகளும் இசையும் குரல்களும் இசைந்தெழுப்பும் படிமங்கள் இனிமையானவை, மகிழ்ச்சிகரமானவை, உள்ளுறையும் 'காதல்' உணர்வைப் பெருக்குபவை.

'நினைத்தேன் வந்தாய்...' என்று தொடரும் திரையிசைப் பாடலை, எத்தனையோ தடவைகள் பார்த்தாயிற்று, கேட்டாயிற்று. இசையமைத்த எம். எஸ்.விஸ்வநாதனும் பாடியிருக்கும் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் மகிழ்ச்சியின் படிமங்களை ஒலியலைகளில் விரிக்கிறார்கள். எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகிய இரண்டு ஆளுமைகளும் இடையிடையே செய்யும் 'உடற்பயிற்சி'களைச் சகித்துக்கொண்டுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

திரையில் தோன்றும் இருவருமே இப்போது இல்லையென்ற நினைவு சடுதியாக வந்து உறுத்துகிறது. வாழ்க்கை நிரந்தரமில்லாதது தானே. இல்லாமல் போனவர்களையும் உயிரோட்டமாக வைத்திருக்கிறது காட்சியூடகம். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இதில் அழகாயிருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் 'காதல்' இருந்திருக்கும். இருந்தாலென்ன...யார் மீதும் யாருக்கும் எப்போதும் காதல் வருமென்பதுதானே நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது.


https://youtu.be/0HnEPVGGA4w

அமரதாஸ்
2017-05-31

மிருதங்க நாதமும் ஒரு காதலும்



ஒரு நாள், எனது மடிக் கணினியை யாழ்ப்பாணத்தில் உள்ள கடையொன்றில் திருத்தக் கொடுத்துவிட்டு, அதனைத் திரும்பப் பெறுவதற்காகக் காத்திருந்தேன். அப்போது ஒரு இசை, வார்த்தைகள் இல்லாமல் இசையாக மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. பல்வேறு இரைச்சல்களுக்கு மத்தியிலும் அந்த இசை நெஞ்சைக் கவர்வதாக இருந்தது. அது எனக்கு இப்போதும் நல்ல நினைவிருக்கிறது. 

அந்த இசை, 'எங்கேயேயும் காதல்' என்றஒரு சாதாரணமான தமிழ்த் திரைப்படத்தில் இடம் பெற்ற ''நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ...'' என்ற பாடலுக்கானதென்று நீண்ட காலத்துக்குப் பிறகு அறியமுடிந்தது. அதன் பிறகு இசையின் துல்லியத்தன்மை விளங்கும் வகையில் அந்தப் படத்தின் பாடல்களைத் தனியாக உற்றுக் கேட்டேன். ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியிருக்கும் பாடல்களுக்கான இசை கவனத்திற்குரியதாகவே இருந்தது. அவர், 'மஜ்னு' என்ற திரைப்படத்தின் பாடல்களுக்கு வழங்கியிருந்த இசையால் என்னைக் கவர்ந்திருந்தார். அதில் இடம்பெற்ற ''முதல் கனவே...'' பாடல் எனக்குப் பிடித்திருந்தது, ஜெயஸ்ரீ மற்றும் ஹாரிஸ் ராகவேந்திரா ஆகியோரின் குரல்களுக்காக மட்டுமல்ல. அவ்வப்போது ஏனைய வாத்தியங்களின் ஒலிப்பையும் மீறி, மிருதங்க நாதம் அதில் தனித்துவமாக இசைந்து வரும்.

அதை விட நுட்பமாக ''நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ...'' பாடலில் மிருதங்க இசை கலந்திருக்கும். பாடலின் ஒட்டு மொத்தமான 'காதலின் மகிழ்வை' அந்த மிருதங்க நாதம் பிரதிபலிக்கும். சுழித்துச் சுழித்து வருகிற மிருதங்க நாதம், இந்தப்பாடலின் தனித்துவத்துக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாகிறது. தமிழின் சிறந்த பாடல் இசை வரிசையில் இது இருக்கிறது. இப் பாடலின் சில வரிகள் காதலில் குழைந்து வரும். ஹாரிஸ் ராகவேந்திரா மற்றும் சின்மயி ஆகியோரின் குரல்களில் அந்த வரிகளுக்கான உணர்வோட்டம் அதீதமாகும். பாடலுக்கான காட்சிப்படுத்தல் பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. அது அவசியமில்லை என்றாலும் கூட, அந்த நாட்டின் சூழல் அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாடலுக்கான காட்சியமைப்புக்களில் நீலத்தைப் படரவிட்டு இசையோடு நகரும் ஒளிப்பதிவு கவனிப்பிற்குரியது. வேகமான நடன அசைவுகளால் பிரபலமாகியிருக்கும் பிரபுதேவா, இயல்பான காட்சிகளோடும் லாவகமான இலகு நடன அசைவுகளோடும் இந்தப் பாடலை இயக்கியிருக்கிறார்.

''கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ...'' என்று திரும்பத் திரும்ப வரும் இடங்களில் ஜெயம் ரவி யும் ஹன்சிகா வும் கைகளை மேல் நோக்கி அசைக்கும் லாவகமானது, பறத்தலின் பரவச அனுபவத்தைப் பார்வையாளரில் நிகழ்த்தக்கூடியது. (பாடல், நடனம் போன்ற தனித்துவமான கலைகள் திரைப்படங்களில் பிரயோகிக்கப்படுதலின் 'பொருத்தப்பாடுகள்' அல்லது 'தேவைகள்' தனியான 'பார்வைக்கு' உரியன. படத்தோடு சம்மந்தமில்லாத, காட்சிப்படுத்தப்பட்ட இசைத் தொகுப்புக்களாக - music video album - பல திரைப்படங்களின் பாடல்கள் இருப்பதனைப் பார்க்க முடியும்.) இந்தப் பாடலுக்கான படத்தொகுப்பு, இன்னமும் கவனமாகக் கையாளப்பட்டிருக்க முடியும். பாடலின் லயத்தோடு படத்தொகுப்பு இயைவதாகத் தோன்றினாலும் ஒருவித செயற்கைத்தனம் அல்லது 'வேண்டாத வேகம்' சில இடங்களில் துருத்தலிடுகிறது. பாடலின் முடிவில், காதலர்களின் பிரிவை மிருதங்க நாதத்துடன் கலங்கலாகக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம், (shallow) காதலின் துலக்கமற்ற 'புதிரான' தன்மையைக் கோடி காட்டுவதாகக் கொள்ளவும் முடியும்.

மிருதங்க இசையானது, தமிழ் சினமாப் பாடல்கள் பலவற்றில் நுட்பமாகப்  பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதில் ஒன்றுதான் ''மானே தேனே கட்டிப்பிடி...'' என்ற 'சாதாரணமான' பாடலும். அந்தப் பாடலை, நான் மிருதங்க இசைக்காக மட்டுமே பலமுறை கேட்டிருக்கிறேன். 



https://youtu.be/l98b32yBiQg

அமரதாஸ் 
2017-07-13 

Saturday, May 12, 2018

நீதி கோரலை வீரியமாக்குதல்.


இந்தக் கட்டுரைக்குப் பயன்படுகிற ஒளிப்படம் பற்றிய சிறு அறிமுகம் - இந்த ஒளிப்படமானது, சர்வதேச மட்டத்திலான பல்வேறு ஒளிப்படக் காட்சிப்படுத்தல்களிலும் பல ஊடகங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. ஜேர்மன் நாட்டில் 2013 இறுதியில், சர்வதேச மனித உரிமை வாதிகளால் 'Permanent Peoples Tribunal' (நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்) என்னும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழினப் படுகொலையை உறுதி செய்யும் விதமாக அது அமைந்திருந்தது. அதைச் சார்ந்து வெளியிடப்பட்ட 'Permanent Peoples Tribunal - Peoples Tribunal on Sri Lanka' என்னும் நூலின் அட்டைப்படமாகவும் இந்த ஒளிப்படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது, சுவிற்சர்லாந்து நாட்டிலுள்ள சூரிச் நகரில் அமைந்திருக்கும் பல்கலைக் கழகத்தில் 'Tears of Tamils - A journey through war zones of Sri Lanka' என்னும் மகுடத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒளிப்படக் காட்சியில் இந்த ஒளிப்படம் இடம்பெற்றிருக்கிறது. சுயாதீன ஊடகராகவும் கலைஞராகவும் அறியப்படுகிற அமரதாஸ் என்பவரால், 'இறுதி யுத்த காலத்தின்' நெருக்கடியான ஒரு தருணத்தில் இந்த ஒளிப்படம் எடுக்கப்பட்டது.



நீதி கோரலை வீரியமாக்குதல்.

முள்ளிவாய்க்கால் வரை நீண்ட 'இறுதி யுத்தம்', பெரும் அவலங்களைத் தமிழினத்தின் மேல் திணித்திருக்கிறது. பேரினவாதச் சிங்கள அரசை அம்பலப்படுத்தி, நியாயமான நிரந்தரத் தீர்வைச் சாத்தியப்படுத்தக் கூடிய போராட்ட அரசியல் நடவடிக்கைகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான அவசியம் தமிழினத்திற்கு உள்ளது. இறுதி யுத்தத்தின் எதிர்மறை அம்சங்களில் இருந்து சாதகமான 'உள்ளுடன்கள்' கண்டறியப்பட முடியும். அவற்றைத் தெளிவான முறையில் இனம் கண்டு,'புதிய முறையிலான' போராட்ட அரசியலை வீரியமாகத் 'தமிழர் தரப்புகள்' முன்னெடுக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட 'இனப்படுகொலை' என்னும் அரசியல் அவலத்தை 'அரசியல் மயப்படுத்தும்' வகையிலான நகர்வுகள், சர்வதேச மட்டங்களில் நிகழ வேண்டியிருக்கிறது. இனப்படுகொலையின் 'சாட்சியங்களை' இனம் கண்டு, அவற்றைத் தேவைப்படுகிற இடங்களில் 'உரிய முறைகளில்' வெளிப்படுத்தக் கூடிய வகையிலான போராட்ட அரசியல் முன்னெடுப்புகளே இப்போதைய அவசியத் தேவைகளாகும்.

சிங்களப் பேரினவாத அரசின் பாரிய போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றை சர்வதேச சமூகங்களின் மத்தியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் 'நிரூபிப்பது' இலகுவில் நடந்துவிடக் கூடியதல்ல. வல்லாதிக்க சிந்தனைகளிலும் பொருளாதார அரசியல் நலன்களிலும் மட்டுமே பெரும்பாலும் ஊறிப்போயிருக்கும் சர்வதேச அரசுகளின் நடவடிக்கைகள் மற்றும் சிங்களப் பேரினவாத அரசின் தந்திரமான ராஜதந்திர நடவடிக்கைகள் மத்தியில் தமிழர் நலன் சார் 'முன்னெடுப்புகள்' எப்போதும் சிக்கலானவை, ஆபத்தானவை. மதிநுட்பத்துடன் கூடிய ராஜதந்திர அடிப்படையில் தமிழர் நலன் சார் முன்னெடுப்புகள் விரிவாக்கம் பெற வேண்டிய அவசியம் தமிழ்த் தரப்புகளால் சமகாலத்தில் உணரப்பட வேண்டியிருக்கிறது.

விரும்பியோ விரும்பாமலோ 'அரசியல் பின்னணியில்' இறந்தவர்களை நினைவுகூரலும், இறந்தவர்கள் சார்ந்த எத்தகைய நடவடிக்கைகளும், எஞ்சி இருப்பவர்களது கண்ணியமான பாதுகாப்பான வாழ்க்கைக்கு உதவும் வகையிலும் இறந்தவர்களது கண்ணியம் பேணப்படும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். 'தலைமைகளுக்கு' மட்டுமேயான 'வெற்று விசுவாச' நடவடிக்கைகளாகவோ அல்லது 'பிழைப்புவாத' நடவடிக்கைகளாகவோ இல்லாமல், முற்போக்கான செயலாக்கக் கருத்தியல்களில் ஊட்டம் பெற்றவையாகவே எத்தகைய போராட்ட அரசியல் நடவடிக்கைகளும் அமைந்திருக்க வேண்டும்.

கண்ணியமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வின் பெயரால் முன்னெடுக்கப்படுகிற போராட்ட அரசியல் நடவடிக்கைகளை ஆற்றுப்படுத்தக் கூடியதாக, 'சுதந்திர தேசியவாதம்' என்னும் புதிய 'விடுதலைக் கருத்தியல்' செயலாக்கம் பெற வேண்டும். 'சுதந்திர தேசியவாதம்' எனப்படுவது ஜனநாயகப் பண்புகளை, மனிதாபிமானத்தை அத்திவார உட்கட்டுமானங்களாகக் கொண்ட முற்போக்குக் கருத்தியலாகும். அது, 'குறுந் தேசியவாதம்' என்று அறியப்படுகிற கருத்தியலுக்கு மாற்றான நடைமுறைக் கருத்தியலாக அமைந்திருக்கும்.

இலங்கையின் சமகால அரசியல் மற்றும் இன விகிதாசார அடிப்படைகளில் நோக்கும் போது, கட்சி அரசியல் அல்லது ஓட்டு அரசியல் வழிமுறைகளில், குறிப்பிட்ட அளவிற்கு மேல் தமிழர்களால் நகரமுடியாது என்று தோன்றுகிறது. எனவே, மக்கள் மயப்படுத்தப்பட்ட மாற்று அரசியல் செயற்பாடுகளின் தேவைகள் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்கள் மத்தியில் உணரப்பட வேண்டும். கட்சி அரசியல் வழிமுறைகளுக்கு அப்பால், மக்கள் ஆதரவுடன் கூடிய 'இயக்க அரசியல்' வழிமுறைகள் இனி அவசியப்படுகின்றன. சர்வதேச அரசியல் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, தெளிவான நிலைப்பாடுகளுடனும் ராஜதந்திர அடிப்படைகளிலும் தம்மைத் தகவமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் தமிழர் தரப்புகளுக்கு இருக்கிறது.

தமிழ்த் தரப்புகளின் கடந்தகாலத் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் அரசியல் சாதக நிலைமைகள் போன்றவற்றில் இருந்தும் கடந்தகாலத் தவறுகளில் இருந்தும் படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு புதிய முறையில் முன்னெடுக்கப்படும் போராட்ட அரசியல் முயற்சிகளே ஆக்கபூர்வமானவை, தமிழ்ச் சமூகத்தினால் வரவேற்கப்பட வேண்டியவை. அத்தகைய படிப்பினைகளின் அடிப்படையிலான போராட்ட அரசியல் முன்னெடுப்புகளே, தமிழர் தரப்புகளுக்கான தார்மீகத் தகுதியையும் ஆக்கபூர்வ வளர்ச்சியையும் வழங்குவதாக இருக்கும். அத்தகைய முன்னெடுப்புகள், இலங்கையில் மாத்திரமல்ல, முக்கியமாக தமிழர் வாழும் சர்வதேச நாடுகளெங்கும் பரவலாக்கம் பெற வேண்டும். தமிழர்கள், உலகெங்கும் பரந்து வாழ்வதில் இருக்கக் கூடிய சாதக மற்றும் பாதக நிலைமைகள் ஆராயப்பட்டு, நிதானமாகவும் ராஜதந்திர வழிமுறைகளோடும் தமிழர்களுக்கான போராட்ட அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தரப்புகள், தமக்குள் பொதுக் கருத்தியலின் அடிப்படையிலும் பொது இலக்கின் அடிப்படையிலும் இயன்றவரையில் 'ஒன்றுபடுவதே' ஆரோக்கியமானது. தமிழர்களின் இன ரீதியிலான விடுதலை சார் நகர்வானது, உலகின் ஏனைய இனங்களினதும் நாடுகளினதும் பாதுகாப்புக்கோ 'நலன்களுக்கோ' இடையூறானதில்லை என்பது, சர்வதேச அரங்கில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க நிலையில் முன்வைக்கப்பட வேண்டும். தமிழர்கள், 'விடுதலைக்குத் தகுதியான' கண்ணியமான இனத்தின் மக்கள் என்பது 'காட்சிப்படுத்தப்பட' வேண்டும்.

இறுதி யுத்தமானது 'முள்ளிவாய்க்கால்' என்னும் இடத்தில் பேரவலங்களுடன் முடிவடைந்தது. தமிழர்களுக்கான பல படிப்பினைகளையும் கசப்பான உண்மைகளையும் 'முள்ளிவாய்க்கால் யதார்த்தம்' கொண்டிருக்கிறது. இனப்படுகொலைச் செயல் முறையின் (genocide process) உச்சக் கட்டமாக, அரசியல் அர்த்த பரிமாணங்களோடு, சர்வதேச அரங்கில் 'முள்ளிவாய்க்கால் யதார்த்தம்' நிலைநிறுத்தப்பட வேண்டும். இது, இலகுவான காரியமல்ல. ஆனால், இதை விட இப்போதைய நிலையில் தமிழர்கள் வலுவாகப் பற்றிக்கொள்ளக்கூடிய 'ஏதுநிலை' எதுவுமேயில்லை.

இனப்படுகொலைக்கான உள்நோக்கமும் அதன் வரலாறும் ஆதாரங்களும் தெளிவாக முன்வைக்கப்பட்டால் மட்டுமே அது சர்வதேச அரங்கில் பரிசீலனைக்கு உள்ளாகும் நிலை தோன்றும். (இது தொடர்பில் நிகழக் கூடிய வல்லாதிக்க சக்திகளின் தலையீடுகளை ராஜதந்திர வழியில் எதிர்கொள்ளும் திறன்களைத் தமிழ்த் தரப்புகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.) முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் அல்லது இறுதி யுத்த காலத்தில் மட்டும் இனப்படுகொலை நிகழவில்லை. பல்வேறு இனக்கலவரங்கள் மற்றும் பலவகைப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகள் நீண்டகாலமாக நடந்துவந்திருக்கின்றன. முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தை மையப்படுத்தி, அண்மைக்காலத்தில் பாரிய அளவில் இனப்படுகொலை நடந்திருக்கிறது. இத்தகைய உண்மைகள், உலக அரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டப்பட வேண்டியவைகளாகும்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காகவே இறுதி யுத்தம் முன்னெடுக்கப்பட்டது என்னும் தோற்றப்பாட்டையே சிறிலங்கா அரசு ஏற்படுத்தியது. ஆனால், இறுதி யுத்தமானது, ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை யுத்தமாகியது எப்படியென்று மிகவும் நுட்பமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். முன்னறிவித்து விடுதலைப் புலிகளை அழிப்பது, அத்தோடு 'முன்னறிவிக்கப்படாத' இனப்படுகொலையை 'மறைமுகமாக' நிறைவேற்றுவது, ஆகிய இரண்டு வகையான நோக்கங்கள் சிறிலங்கா அரசுக்கு இருந்திருக்கின்றன.

நீண்ட காலமாக விடுதலைப் போராட்டத்தைப் பலவகையிலும் முன்னெடுத்த தமிழ் இனத்தின் மனச் சாட்சியும் தியாக வரலாறுகளும் கூட்டு அனுபவங்களும் இன நலன் சார்ந்து, ஆரோக்கியமான வகையிலே பயன்பட வேண்டும். தமிழனத்தின் கூட்டு மன நிலையில் சாதி, மத, இன ரீதியிலான அடிப்படைவாதக் கசடுத்தனங்கள் நீங்கி, விசாலமான மனப்பாங்கும் உண்மையான விடுதலை உணர்வும் வாய்க்க வேண்டும்.

தமிழர்களின் அரசியல் ரீதியான நகர்வுகள், 'முள்ளிவாய்க்காலில்' இருந்து இனப்படுகொலைக்கான நீதி கோரலாக வீரியம் பெற்றிருக்க வேண்டுமென்று பல இடங்களிலும் நேர்காணல்களிலும் சொல்லிவந்திருக்கிறேன். அதை இன்னமும் அறிவியல் பூர்வமாக, வீரியமாக 'தமிழ்த்தரப்புகள்' முன்னெடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய உண்மையாகும். இன்னும் காலம் ஆறிவிடவில்லை. உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் விழிப்படைந்து, 'ஒன்றுபட்டுச்' சிந்திக்கவும் செயற்படவும் வேண்டியது அவசியமாகும். 'முள்ளிவாய்க்கால்' என்னும் குறியீட்டு அவலத்தினை அதன் பரிமாணங்களுடன் புரிந்துகொண்டு, இனப்படுகொலைக்கான நீதி கோரலை மையப்படுத்திய போராட்ட அரசியல் நகர்வுகளை சர்வதேச அளவில் விரிவுபடுத்தி வீரியமாக்க வேண்டும்.
அமரதாஸ்
2018-05-09

Monday, April 30, 2018

அவலச் சாவுகளும் கேள்விகள் சிலவும்.



விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 'முன்னாள் போராளிகள்' சிலர், புற்றுநோயினாலும் வேறு சில காரணங்களாலும் சாவடைவதாக அவ்வப்போது அறியப்படுகிறது. மிக அண்மையிலும் அத்தகைய ஒருவர் புற்றுநோயினால் சாவடைந்திருப்பதாகத் தெரியவருகிறது. இத்தகைய சாவுகளும் அவை தொடர்பிலான செய்திகளும் தமிழ்ச் சமுகத்தின் மத்தியில் அவலங்களையும் அச்சங்களையும் விதைத்து வருகின்றன. தமிழ் அரசியலாளர்கள் உட்பட யாருமே அத்தகைய சாவுகளுக்கான காரணங்களை, மருத்துவ விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து 'உண்மைகளை' வெளிப்படுத்த முன்வருகிறார்களில்லை என்பது தமிழினத் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் பின்னடைவே.


புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த பலரும் சிறிலங்கா அரசினால் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு 'மெல்லக் கொல்லும்' விச மருந்து ஏற்றப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் பரவலாகி வருகிறது. புலிகள் இயக்கத்தவர்கள் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடயங்களில் சிறிலங்கா அரசு மோசமாக நடந்துவந்திருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியக் கூடிய நிலையில், தமிழ் தேசிய அரசியலாளர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களால் ஆரோக்கியமான எதிர்வினைகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பது எதனால்? தமிழ் தேசிய அரசியல் எனப்படுவது பதவிகளை அடையப் பயன்படுகிற ஏணி போன்ற ஒரு பொருளா?

சிறீலங்கா அரசினால் சிறைப்படுத்தப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 'முன்னாள் போராளிகள்' அனைவருமே முன்னாள் அரசியல் கைதிகளாகப் பார்க்கப்பட வேண்டியவர்களே. அவர்களது வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் சிறிலங்கா அரசு போதிய அளவிலான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை. யுத்தத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் 'நீதி' உறுதிசெய்யப்படவில்லை. முன்னாள் அரசியல் கைதிகள் பற்றிய விடயங்களில், 'புனர்வாழ்வு' என்ற பொருத்தமற்ற பிரயோகத்தை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். 'புனர்வாழ்வு அளிக்கப்பட்ட...' அல்லது 'புனர்வாழ்வின் பின்னர்...' போன்ற மொழிப் பிரயோகங்கள், கருத்தியல் மற்றும் அரசியல் ரீதியில் தவறானவை.

'தீவிர தமிழ் தேசிய வாதிகளும்' விடுதலைப் புலிகளின் 'தீவிர ஆதரவாளர்களும்' முன்னாள் அரசியல் கைதிகளின் சாவுகள் தொடர்பில் சிறிலங்கா அரசைக் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கைதிகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய்த்தாக்கம் இருப்பதாக அறியப்படவில்லை என்றாலும், அத்தகையவர்களுக்கு இனி எதுவும் நடந்துவிடாது என்பதற்கான உத்தரவாதமில்லை. நோய்த்தாக்கத்தினால் அவ்வப்போது நிகழும் அவலச் சாவுகளில் சிறிலங்கா அரசின் நேரடியான, மறைமுகமான காரணங்கள் மட்டுமில்லாமல், வேறு சில காரணங்களும் இருக்கக் கூடும். எதையும் முறையாக ஆய்வு செய்தால் தானே எதையும் உறுதிப்படுத்த முடியும். இந்த விவகாரமானது முன்னாள் அரசியல் கைதிகள் மத்தியில் மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியிலும் அச்சங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. வலுவாக சந்தேகிக்கப்படுகிற எதுவும் உறுதிப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதும் வெறுமனே 'வதந்தி' ஆக்கப்படுவதும் ஊழல் அரசியலாகும்.

இலங்கையில் தற்போது நிகழும் தமிழ் அரசியலானது மிகவும் பலவீனமானது. தமிழ் தேசிய இனத்தின் பாதுகாப்பை, கண்ணியத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான 'போராட்ட வழிமுறையாக', தேசியக் கவசமாகத் தமிழ் அரசியல் அமைந்திருக்க வேண்டும். கட்சி அரசியல் அல்லது ஓட்டு அரசியல் வழிமுறைகளுக்கு வெளியே, ஜனநாயக வழிமுறைகளுடன் கூடிய 'இயக்க' அரசியலாகத் தமிழ் தேசிய அரசியலை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கக் கூடிய அர்ப்பணிப்புணர்வு மிக்க 'தமிழ் தேசிய அரசியல் போராளிகள்' உருவாக வேண்டும்.

பின் இணைப்பு - முன்னாள் அரசியல் கைதியாக இருந்தவரும், தற்போது புற்று நோய்ப் பாதிப்பில் சாவடைந்து விட்டவருமான இந்த இளைஞரின் படம் என்னைப் பலவகையில் பாதித்தது. உண்மையில், எனது இந்தப் பதிவுடன் இந்தப் படத்தைப் பயன்படுத்துவதற்கு விரும்பியிருக்கவில்லை. முதலில், பலமுறை பல கோணத்தில் யோசித்தேன். பிறகு, இதுவே பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதனை இணைத்துக்கொண்டேன். இந்தப் படத்தில் தொனிக்கும் 'பார்வையும்' உடல்மொழியும் தீவிரமானவை, தீராக் கேள்விகளைக் கிளர்த்துபவை.

2018-04-30
அமரதாஸ்