மனித உணர்வுகளுடன் 'விளையாடும்' தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவே பெரும்பாலும் 'பிக்பாஸ்' காட்சியளிக்கிறது. இது பொதுவாகவும் சுருக்கமாகவும் சொல்லக்கூடிய கருத்து. இது விரிவான விவாதத்திற்குரியது. அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு ஊடக நிகழ்ச்சி என்ற வகையில், அது பற்றிய தெளிவான 'புரிதல்' அவசியமாகும். (ஆய்வு நோக்கில் மட்டுமே, அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.) 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என்றுபிரத்தியேகமான வணிக நோக்கங்களே முதன்மையானவையாக உள்ளன. அதனை, அதன்போக்கில் யார் வந்து நடத்தினாலும் இப்படித்தான் இருக்கும். என்றாலும், கமல் நடத்தும் போது, அது அவருக்கான நிகழ்ச்சியாகவும் ஆகிவிடுகிறது. அவர் அப்படியாக ஆக்கிவிடக் கூடியவர். சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடிகர் திரு. கமல்ஹாசன் வந்து செல்லும் நிகழ்ச்சிப் பகுதிகளில், சில 'நல்ல விடயங்கள்' நடந்திருக்கின்றன.
இன்றைய நிகழ்ச்சியில், திரு. டானியல் வெளியேறும் படலத்தில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சம்பவம் அடங்கியிருந்தது. கமலின் காலில் விழ முயன்ற டேனியை நிறுத்தி, ''அதுக்கு இன்னொரு வழி இருக்கு'' என்று சொல்லிக்கொண்டே கட்டிப்பிடித்துக்கொண்டார் கமல்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கமல். அவரை எனக்குப் பிடிப்பதற்கான காரணங்களில் ஒன்று அது. ஆனால், 'ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்' என்று அவரைப் பிறர் சொல்லும்போது, 'ஆமோதிப்பது போல' அவர் நடந்துகொள்வதை எப்படிப் புரிந்து கொள்வது? நேற்று, திரு.பாலாஜி அப்படிச் சொல்லும்போது 'அமைதியாக' இருந்துவிட்டார் கமல். அவருக்குள் ஒருவித 'மேட்டிமைத்தனம்' தொழிற்படுகிறதோ என்னவோ?
எதற்காகவும் காலில் விழுவது தவிர்க்கப்பட வேண்டியதே. கட்டி அணைத்தல், கைகுலுக்குதல் போன்ற நடத்தைகளில், பரஸ்பர அன்பும் மதிப்பளித்தலும் பேணப்பட முடியும். பொதுவாக மனித நடத்தைகளில், பரஸ்பர சுயமரியாதை பேணப்பட வேண்டியது அவசியமாகும்.
2018-09-02
அமரதாஸ்
அமரதாஸ்
No comments:
Post a Comment