Friday, June 22, 2018

ஊடக அற மீறல்.



ஒரு அமைப்பின் (PLOTE) ஆரம்பகாலப் பயிற்சிமுகாம்  காட்சிகளை YouTube தளத்தில் மிக அண்மையில் பார்த்திருந்தேன். அதிலிருக்கும் சில பயிற்சிக்  காட்சிகள், IBC தொலைக்காட்சி யின்  நிகழ்ச்சியொன்றில் ('தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்! - வெளிவரும் அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்') பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மூலக் காட்சிகளில் 'Swiss Ranjan PLOTE' என்று பதிக்கப்பட்டிருந்த எழுத்துகள், IBC தொலைக்காட்சி யில் பயன்படுத்தும் போது அழிக்கப்பட்டிருப்பது ஊடக தர்மத்தின் அடிப்படையில் நியாயமானதல்ல. இரண்டையும் YouTube  மூலம்  அண்மையில் நான் அடுத்தடுத்துப் பார்க்க முடிந்தமையால்  இதனைக் கண்டுபிடிக்க முடிந்தது. இப்படியான காரியங்களில் சில 'ஊடகங்கள்' அவ்வப்போது செயற்பட்டு வருவது புதிதல்ல என்றாலும், இப்போது ஆதாரபூர்வமாக  அறிந்த இதனைப் பதிவுசெய்யத் தோன்றியது. ஒருவேளை, சம்மந்தப்பட்டவர்களிடம் முறையான அனுமதி பெற்று எழுத்துகள் அழிக்கப்பட்டிருந்தால், அது ஊடக தர்மத்துக்கு உட்பட்டதாக அமைந்திருக்கக் கூடும்.

சுவிஸ் ரஞ்சன் என்பவரோ  புளொட் அமைப்பினரோ என்னுடன் தொடர்பில் உள்ளவர்களல்ல. IBC தொலைக்காட்சி மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை. ஒரு சுயாதீன ஊடகராக, எனது ஊடகவியல் அனுபவ அறிவின் அடிப்படையில் எனது 'பார்வையினை' இங்கு பதிவுசெய்கிறேன். அவ்வளவு தான். இது, கடந்து போய்விடக்கூடிய 'சிறிய' விடயமாகப் பலருக்கும் தோன்றக் கூடும். ஆனால், இத்தகைய விடயங்களை ஊடக உலகத்தில் 'அனுமதிப்பது' ஆபத்தானதாகும்.   

வரலாற்று ஆதாரங்களை, தகவல்களை, படங்களை  எங்கிருந்தும் யாராலும் பெற முடியும். அவற்றின்  உண்மைத்தன்மையினையோ பின்னணித்தகவல்களையோ மறைக்க முயல்வது ஊடக தர்மத்தின் அடிப்படையில் இழுக்கான காரியமாகும். அது அறமற்றது. ஒருவருக்கு உரித்துடைய ஆவணம் ஒன்று, நல்ல நோக்கத்திற்காக எடுத்தாளப்படும் போது, உரித்துடையவரின் 'பெயர்' திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுவது அறமல்ல. ஒரு இடத்தில்  இருந்து ஒன்றைப் பெறுவது விருப்பமில்லையெனில் அல்லது பெறுவதில் உடன்பாடில்லையெனில், அதைப் பெறாமலேயே இருந்துவிடலாமே... இன்னொருவரினதோ இன்னொரு அமைப்பினதோ ஆவணத்தின் உண்மைத்தன்மையை  மறைக்க முயல்வது மோசமான  ஊடக ஊழலாகும். தயவுசெய்து  இத்தகைய ஊழலை ஊடகங்களும் தனிமனிதர்களும் இனியாவது செய்யாமலிருக்க வேண்டும்.



விடுதலைப் புலிகளுக்கும் இந்திய  இராணுவத்தினருக்கும் இடையிலான  மோதல் இடம்பெற்ற  காலத்தில், விடுதலைப் புலிகள் வளர்த்த சிறுத்தை ஒன்று கைவிடப்பட்டது பற்றி, நேற்று ஒருவர் தனது முகநூலில் பதிவுசெய்திருந்தார். அந்தப் பதிவினை, இன்று இரண்டு நபர்கள் தமது முகநூலில் எழுதியவரின் பெயர் போடாமல் அப்படியே மீள்பதிவு செய்திருந்தார்கள். இத்தகைய பொறுப்பற்ற செயல்களை முகநூலிலும்  அடிக்கடி காண முடிகிறது. முகநூலும் அடிப்படையில் ஒரு ஊடகமாகும். அதனாலேயே அது சமூக வலைத்தளம் என்று சொல்லப்படுகிறது.

2018-06-22

கொலையும் குரூர மனநிலையும்.


இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதில்லை. இந்த உலகமானது, குறிப்பிட்ட இனப் பிரிவினருக்கானதோ நிறப் பிரிவினருக்கானதோ வர்க்கப் பிரிவினருக்கானதோ மதப்பிரிவினருக்கானதோ ஏனைய பிரிவினருக்கானதோ மட்டுமானதில்லை என்பதை எல்லா மனிதர்களும் உணர வேண்டும்.

ஜீவகாருண்ணியம் எனப்படுவது, மனிதர்களிடம் இருக்க வேண்டியதும் மனிதாபிமானத்தை உள்ளடக்கியதுமாகும். ஒரு 'ஆபத்தான உயிரினம்' ஆபத்துக்குரிய தருணத்தில் கொல்லப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கக் கூடும். ஒரு கொலைக்கு, சில தவிர்க்க முடியாத காரணங்கள் இருக்கக் கூடும். எது எப்படியிருந்தாலும், ஒரு கொலையினைக் கொண்டாட்ட மனநிலையில் அணுகும் மனித மனநிலை மிகவும் வக்கிரமானது, ஆபத்தானது...

கிளிநொச்சியில் ஒரு சிறுத்தை கொலை செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கொலை, பாதுகாப்புக் காரணத்துக்கானதாக இருக்கலாம். அது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். அந்தக் கொலையானது, சட்ட ரீதியில் குற்றமாகக் கூட இருக்கலாம். அந்தக் குற்றத்தின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அந்தக் கொலை நடைபெற்ற சூழலில் நிலவிய 'கொண்டாட்ட மனநிலை' கண்டிக்கப்பட வேண்டியது. வெற்றிக் களிப்புடன் கூடிய வக்கிர மனநிலை அது. அங்கு பதிவாகியுள்ள ஒளிப்படங்களும் வீடியோ பதிவுகளும் மனிதர்கள் சிலரின் குரூரத்தை வெளிப்படுத்துகின்றன.

'இன விடுதலையின் பெயரால்', சொந்த இனத்திற்குள்ளேயே இயக்கங்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான படுகொலைகளை 'ஆதரிக்கிற' மனநிலை கொண்டவர்கள், இதையும் இலகுவில் கடந்து போய்விடுவார்களா? போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைக் குற்றங்களையும் 'கொண்டாட்ட மனநிலையில்' குரூரமாகச் செய்து முடித்த சிங்கள அரச தரப்பினருடன் இணங்கிப் போகிறவர்கள், எதையும் கடந்து போய்விடுவார்களா? வீட்டுக்குள் புகுந்துவிட்ட பாம்பு ஒன்றினை அடித்துக் கொன்றுவிட்டு, இப்படி யாரும் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்களா?

இந்த 'சிறுத்தை' படுகொலைக்குள்ளானது, இலங்கையில் இனி விசாரிக்கப்படக் கூடும். அத்தகைய விசாரணையை வேண்டுகிறவர்களும் அதற்கு ஆதரவாக இருப்பவர்களும், இறுதி யுத்த காலத்தில் பெருந்தொகையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் போர்க்குற்றங்களுக்குமான விசாரணைகளை வேண்டுவார்களா?

குறிப்பு - சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள இந்த ஒளிப்படத்தினை ஆவண முக்கியத்துவம் கருதிப் பதிவுசெய்கிறேன். ஏனைய படங்கள் மற்றும் வீடியோ எதனையும் பதிவுசெய்ய மனம் வரவில்லை. கொல்லப்பட்ட சிறுத்தையின் தோற்றம் தரும் துயரத்தை விட, சில மனிதர்களின் உடல் மொழியிலும் கூக்குரல்களிலும் தொனிக்கும் 'குரூரம்' தரும் துயரம் அதீதமானது.

2018-06-22