Friday, March 15, 2019

தமிழ்ச் சமூகத்தில், ஒரு பேரிழப்பு...


தமிழ்ச் சமூகத்தில், ஒரு பேரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. இங்கிலாந்தில் இருந்து, 'தமிழ் தகவல் நடுவம்' (Tamil Information Centre - TIC) என்ற அமைப்பின் சார்பில் செயற்பட்டு வந்த வரதகுமார் அவர்கள், நேற்று (2019-03-13) மறைந்துவிட்ட செய்தியை, இன்று அதிகாலையில் அறிய நேர்ந்தது. பெருந்துயர்... கலை, இலக்கியம், அரசியல், ஊடகம் போன்ற செயற்பாட்டுத் தளங்களில், பல்வேறு நிலைகளில் அரிதாகக் கிடைத்த உறவுகளை இழக்க நேர்வது பெரும் துயரம்...

நீண்டகாலமாக, ஈழத்தமிழ்ச் சமூகம் சார்ந்த அக்கறைகளோடு செயற்பட்டு வந்த வரதகுமார் அவர்களுடன் அவ்வப்போது பேசி வந்திருக்கிறேன். இன்னமும் விரிவாகப் பேசுவதற்கான தேவைகள் அதிகம் இருந்தன. அவருடன் இணைந்து, தமிழ்ச் சமூக நலன்சார்ந்த சில பணிகளில் ஈடுபடவேண்டியிருந்தது.

பல்வேறு திட்டங்களை முன்வைத்து, தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருந்தார். அதிக வேலைகள் இருக்கும் போது, தனது செயலகத்திலேயே அவர் தங்கிவிடுவாரென்று, அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னுடன் உரையாடும்போது சொல்லியிருந்தார்.

தனது, அடுத்த கட்ட வேலைத்திட்ட வரைபை அண்மையில் எனக்கு அனுப்பியிருந்தார். முதுமைக் காலத்திலும் அயராத அவரது பணிகளை அறிந்து ஆச்சரியப்பட்டேன். என்னை அவர் இங்கிலாந்து நாட்டிற்கு வருமாறு அழைத்திருந்தார். இங்கிலாந்து நாட்டில், எனது போர்க்கால ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அண்மைக்காலத்தில், அவருடன் பேச நினைத்துக்கொண்டிருந்தேன். பல்வேறு காரணங்களால், பேசமுடியாமலே போய்விட்டது.

அவரது செயற்பாடுகள், தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து கவனிக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டியவை. மிக நீண்ட காலமாக, தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். வெறுமனே அவரைப் புகழ்ந்து பேசிவிட்டுக் கடந்துசென்றுவிடாமல், அவரை அறிந்தவர்களும் அவரது நண்பர்களும் அவரது நற்காரியங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதுவே அவருக்கான மதிப்பார்ந்த அஞ்சலியாக அமையும்.

வரதகுமார் அவர்கள், என்னைப் பற்றி அறிந்த காலத்தில், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதையும், அதற்கான எனது பதில் மின்னஞ்சலையும் இன்று தேடி எடுத்துப் பார்த்தேன். அவற்றை, அவரது நினைவுடன் பதிவுசெய்ய விரும்புகிறேன். அவரை அறிந்திராதவர்கள், அவற்றிலிருந்து அவரைக் கொஞ்சமாவது அறிந்துகொள்ள முடியும்.

// அன்புள்ள அமரதாஸ் அறிவது,
நேற்று உங்களுடன் உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. தமிழ் தேசியம் பற்றிய உணர்வும், உங்கள் உறுதிப்பாடு மற்றும் ஆர்வமும் மிகவும் பாராட்டத்தக்கது.
முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை அமைத்து, நீங்கள் செய்துவரும் பணி ஒரு முக்கியமானது.
2019 மே மாதம், 10 வது ஆண்டு நிறைவையொட்டி முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் வகையில், மே 18இல் இருந்து 24ஆம் திகதிவரை இலங்கைத் தமிழர் அடையாளம், அவர்கள் வரலாறு, மேலும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார போராட்டங்கள், இழப்புகள் போன்றவற்றினை வெளிக்கொணர்வும் வகையில் ஒரு பரந்த கண்காட்சியை லண்டன் தலைநகரில் மக்களை முன்வைத்து, சர்வதேச மனித உரிமைகள் சமுதாயத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். .
இதில் முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பிலான புகைப்பட கண்காட்சி ஒரு முக்கிய கூறாக அமையும்.
இதை அமைப்பதில், எமது நேரகாலங்களைச் செலுத்தாமல் தற்போது உங்களால் மிகத்திறமையான வழியில், சரியான பொருளடக்கத்துடன் அமைந்துள்ள புகைப்படக் கண்காட்சியை பயன்படுத்துவது மிகவும் பொருத்தம் என்பது எமது விருப்பமும் நோக்கமும் ஆகும். இது பற்றிய உங்கள் முடிவை விரைவில் அறிய ஆவலாக உள்ளோம்.
இத்துடன், எங்கள் திட்டத்தின் தகவல்களை இணைத்துள்ளேன். இவற்றினை, தயவுசெய்து இப்போதைக்கு உங்கள் பார்வைக்கு மட்டும் பயன்படுத்தவும். இது பற்றிய உங்கள் கருத்தினை அறியத்தரவும்.
மேலும், எங்களால் பிரசுரிக்கப்பட்ட இனப்படுகொலை அறிக்கையை மற்றுமொரு மின்னஞ்சல் ஊடாக உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்
நன்றி
இப்படிக்கு
வரதகுமார் //

// அன்புள்ள வரதகுமார் அவர்களுக்கு,
மிக்க நன்றி. உங்களுடன் உரையாடியது மகிழ்ச்சிக்குரியது.
நல்ல நோக்கமும் புரிந்துணர்வும் கொண்டவர்களின் ஆதரவுடன் கலை, இலக்கிய, ஊடகவியல் நடவடிக்கைகளை ஈழத்தமிழர் நலன்கள் சார்ந்து இயன்றவரை சுயாதீனமாக மேற்கொண்டு வருகிறேன். உங்கள் தொடர்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. உங்களின் ஆதரவுடன் லண்டனில் ஒளிப்படக் காட்சியினை சிறப்பாக நடத்தமுடியும் என்று நம்புகிறேன். வேண்டிய ஒளிப்படங்கள் தாராளமாக இருக்கின்றன. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் தேவைகளை, அவல நிலையை ஒளிப்படங்கள் வாயிலாக சர்வதேச சமூகங்களின் கவனத்திற்கு உணர்வுபூர்வத் தாக்கத்துடன் கொண்டுசெல்ல முடியும். லண்டனில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு ஒளிப்படக் காட்சியினை முன்னெடுப்பது தொடர்பாக, நாம் தொடர்ந்து பேசுவோம். லண்டனிலும் வேறு சில இடங்களிலும் தொடர்ந்து ஒளிப்படக் காட்சிகளை நடத்துவதற்கு வேறு சில நண்பர்கள் ஆர்வம் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆதரவுடன் வேறு திகதிகளில் வேறு ஒளிப்படக் காட்சிகளை நடத்தலாம் என்று நினைக்கிறேன். என்னைத் தேடிக் கண்டுபிடித்து, தொடர்புகொண்டமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
அமரதாஸ் //

2019-03-14
அமரதாஸ்

கலைஞர் கருணா - வரையப்படுகிற நினைவுகள்


ஓவிய நண்பர் கருணா (Karuna Vincent) அவர்களின் சடுதியான மறைவு, தமிழ்ச் சூழலில் கனத்த வெற்றிடத்தையும் துயரலைகளையும் தோற்றுவித்திருக்கிறது.

ஓவியக் கலையில் மட்டுமல்லாமல், ஒளிப்படக் கலையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கலைஞர் திரு. கருணா, கனடாவில் நீண்டகாலமாக வசித்துவந்தவர். பல்வேறு கலைச்செயற்பாடுகளில் தனது காத்திரமான பங்களிப்பினை வழங்கிவந்தவர். உலகெங்கிலும், இனிய  நண்பர்கள் பலரைப் பெற்றிருந்தவர். 

ஓவியம் சார்ந்த அவரது விரிந்த தேடல்களை, அவருடனான உரையாடல்களிலும் படைப்புகளிலும் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. ஓவியத்துறையில் அவர் வீச்சுடன் இயங்கத் தொடங்கியிருந்த காலத்தில், அவரது இழப்பு சடுதியாக நிகழ்ந்துவிட்டது. உண்மையில், தமிழ்க் கலைச்சூழலில் அது ஒரு பேரிழப்பாகும். வயதில் மூத்தவராக இருந்தாலும், நிதானமாகவும் வெளிப்படையாகவும் மதிப்பார்ந்து என்னுடன் உரையாடக்கூடிய நல்ல நண்பராக இருந்தார். அவரை இழந்த பெருந்துயரைக் கடந்துசெல்வது, எனக்கு இலகுவானதாக இருக்காது. 

அவர் கனடாவிலும் நான் சுவிஸிலும் வசிக்கும் காலத்தில், பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவ்வப்போது உரையாடிவந்திருக்கிறோம். மிக அண்மையில், அவர் இறப்பதற்குச் சில நாட்கள் முன்னதாக, என்னுடன் நீண்ட நேரம் உரையாடியிருந்தார். ஓவியம் மற்றும் ஒளிப்படம் போன்ற காட்சிக்கலைகள் மீது அவருக்கும் எனக்கும் இருந்த தீராக்காதல் தான், நம்மை நெருக்கமாக்கியிருந்தன. 

வெவ்வேறு காலங்களில் ஓவியர் அ. மாற்கு அவர்களின் ஓவிய மாணவர்களாகப் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் கருணா மிகவும் முக்கியமானவர், வித்தியாசமானவர். ஓவியர் மாற்குவுடன் கருணாவும் நானும் வெவ்வேறு காலங்களில் நெருங்கிப் பழகியிருக்கிறோம். எனது பதின்பருவ காலத்தில், ஓவியர் மாற்குவை அடிக்கடி அவரது வீட்டிலேயே சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அவரது ஓவிய மற்றும் சிற்பக் கலைச்செயற்பாடுகளையெல்லாம் அருகிலேயே இருந்து அவதானிக்கவும், அவரிடமிருந்து கலை நுட்பங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர், வன்னியில் அலைக்கழிந்து பல்வேறு துன்பங்களை அவர் அனுபவிக்க நேர்ந்த காலப்பகுதியில், கனடாவிற்குப் புலம்பெயர்ந்திருந்த கருணாவுடன் கடிதத்தொடர்பில் இருந்திருக்கிறார். யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு முன்னர், நீண்ட வெண்தாடியுடன் அவர் இருந்த முதுமைக்காலத்தில், அவருடன் நெருங்கியிருந்த நினைவுகள் மறக்க முடியாதவை. ஓவியர் மாற்குவின் மூலம் கருணாவும் நானும் பெற்றுக்கொண்ட அரிதான அனுபவங்களை, அவ்வப்போது பகிர்ந்துகொள்வதுண்டு.
 
தாயகத்திலிருந்து கருணா புலம்பெயர்ந்த பின்னர், ஓவியத்துறை சார்ந்த நவீன தொழில் நுட்ப மாற்றங்களை உள்வாங்கித் தனது ஓவிய ஆளுமையை விருத்திசெய்துகொண்டேயிருந்தார். மாற்குவின் மாணவர்களாக இருந்த திரு. க. கிருஸ்ணராஜா, திருமதி. அருந்ததி போன்றவர்கள், புலம்பெயர் சூழல்களில் தொடர்ந்து ஓவியர்களாக இயங்கியவர்கள்.

ஓவிய நண்பரான மருது அவர்கள், டிஜிற்றல் ஓவிய நுட்பமுறைமைகள் தமிழ்ச் சூழலில் அதிகமதிகம் செல்வாக்குப் பெறக் காரணமாக இருந்தவர். அவரது தனித்துவம் மிக்க ஓவியங்கள் குறித்தும் அவருடன் நமக்கிருந்த நட்புக் குறித்தும், கருணாவும் நானும் பலமுறை உரையாடியிருக்கிறோம். ஓவியர் மாற்குவின் தாக்கமும் ஓவியர் மருதுவின் தாக்கமும் கருணாவின் ஓவியங்கள் சிலவற்றில் வெளிப்படுவதை அவதானிக்க முடிந்திருக்கிறது. பிற்காலத்தில், டிஜிற்றல் தொழில்நுட்பத்துடன் கூடிய, அசைவியக்கம் கொண்ட எளிய கோடுகளால், தமிழர் வாழ்வியலைத் தனித்துவமாகப் பதிவுசெய்ய முயன்றுகொண்டிருந்தார். மாற்குவின் ஓவியங்களில் மாற்குவின் பெயர் வரையப்பட்டிருக்கும் சாயலில், கருணாவின் ஓவியங்களில் கருணாவின் பெயர் வரையப்பட்டிருக்கும். (அதுபோலவே கிருஸ்ணராஜாவின் ஓவியங்களில் அவரது பெயர் வரையப்பட்டிருக்கும்.) 2017 ஆம் ஆண்டில், கருணாவின் ஓவியங்கள் கனடாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கருணாவின் கலைப்பயணத்தில் அது மிகவும் முக்கிய நிகழ்வாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது படைப்புகள், நூல் வடிவில் இனி வெளிக்கொண்டுவரப்படவேண்டியது அவசியமாகும்.

பல்வேறு கலைஞர்களின் கூட்டு முயற்சியில், 'இற்றைத் திங்கள் இந்நிலவில்' என்னும் அரங்க நிகழ்வு, கனடாவில் சாத்தியமாகியிருந்தது. பல்வேறு நிலைகளில் முக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்வு அது. அதன் வீடியோ இணைப்பினை, கருணா எனக்கு அனுப்பியிருந்தார். அந்த அரங்க நிகழ்வின் ஒளியமைப்பினை அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தனது ஒளியமைப்புப் பணி தொடர்பிலான எனது கருத்தை அறியும் ஆவலை வெளிப்படுத்தியிருந்தார். ஈடுபாடுள்ள துறைகள் சார்ந்து, மேலதிகமாகக் கற்றுக்கொள்வதில் மிகுந்த நாட்டம் கொண்டவர். பல்வேறு  தளங்களில் அவரது அறிதலும் இயக்கமும் தொடர்ந்திருக்கின்றன.

தனது கலை சார் பணிகள் குறித்துத் தனது நண்பர்களுடன் கலந்துரையாடிக்கொண்டேயிருந்தார். தன்னைச் சுய மதிப்பீட்டிற்கு உள்ளாக்கிக்கொண்டே பயணித்துக்கொண்டிருந்தார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. 2018-05-18 அன்று (சென்ற வருடம்) மிக நீண்டநேரம் அவரும் நானும் உரையாடியிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் பற்றி, எனது போர்க்கால ஒளிப்படங்கள் பற்றி, கியூபெக் பற்றி, ஓவியர் மாற்கு பற்றி, ஓவியர் வாசுகியின் ஓவியக்காட்சி பற்றி, ஓவியரும் நண்பருமான மருது பற்றி, நண்பர் கங்காதரன் பற்றி, இன்னும் பல்வேறு விடயங்கள் பற்றியெல்லாம் அன்று உரையாடினோம். ஓவியர் மாற்கு, எழுதி அனுப்பியிருந்த 'உருக்கமான' இறுதிக் கடிதம் பற்றிய தகவல்களையும் அன்று பகிர்ந்துகொண்டார்.

கனடாவில் தொடர்ந்து வெளிவரும் 'தாய்வீடு' பத்திரிகையில் கருணாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மிக அண்மையில், அவர் இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னர், அவருடன் விரிவாகப் பேசவேண்டியிருந்தது. 'தாய்வீடு' சார்ந்து, என்னுடன் ஒரு 'நேர்காணல்' பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தார். சில கேள்விகளையும் என்னுடன் பகிர்ந்துகொண்டிருந்தார். 2019 ஆம் ஆண்டில் வருகிற 'முள்ளிவாய்க்கால் நினைவுக்காலத்தை' முன்னிட்டு, எனது போர்க்கால ஒளிப்படங்களுடன் சிறப்பிதழாகத் 'தாய்வீடு' வெளிவரவேண்டும் என்று விரும்பியிருந்தார். எனது போர்க்கால ஒளிப்படங்கள் பலவும், 'தாய்வீடு' பத்திரிகையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளமையினை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இவை குறித்து, 'தாய்வீடு' சார்ந்த நெருங்கிய நண்பர்களான திரு. கங்காதரன், திரு. திலீப்குமார் ஆகியோரோடு இறப்பதற்கு முன்னர் உரையாடியிருக்கிறார். கருணா இறந்த பின்னர், இழப்புத்துயரையும் சில நினைவுகளையும் அந்த நண்பர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள். கருணா என்னும் கலைஞனது இழப்பின் கனத்தை, சமூக வலைத்தளங்களிலெங்கும் சமநேரத்தில், காணக்கூடியதாக இருந்தது. கருணா என்னும் இனிய நண்பரை இழந்த பெருந்துயரைக் கடந்துசெல்வது, எனக்கு இலகுவான காரியமேயல்ல.  

2019-02-27
அமரதாஸ்



நன்றி - 'தாய்வீடு' (2019 march)