Sunday, November 19, 2017

வா காதலே...




'யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே...
நாம் சென்று வாழ்வோமா
வா காதலே...'
என்று தொடங்கும் பாடலின் பல்லவி, காதலியைக் காதலாகவே உருவகிக்கும் காதலனுடைய அழைப்பின் குழைவினால் ஈர்ப்புக்குரியதாக மாறிவிடுகிறது. அந்தக் காதலின் அழைப்பிற்கு, ஆரம்பத்தில் இழையும் கம்பீரமான வீணையிசை வழி சமைத்துக் கொடுக்கிறது.

இமானின் இசையில், குமரேஸ் கமலக்கண்ணன் மற்றும் நளினி கிருஷ்ணன் ஆகியோர் இனிமையாக, லாவகமாகப் பாடியிருக்கிறார்கள். மதன் கார்க்கியின் செயற்கையான சில வரிகளுக்கு இடையிலும் இயல்பான, இனிமையான வரிகள் காதலின் இசையில் குழைகின்றன.
சரணங்கள் இரண்டும் ஒரேமாதிரியான மெட்டில் இல்லாமல் வேறு வேறாக அமைக்கப்பட்டிருப்பது இந்தப் பாடலில் இருக்கிற சிறப்புக்களில் ஒன்றாகும். முதலாவது சரணம், பல்லவியின் சாயலிலேயே உள்ளது. மகிழ்ச்சிகரமான இசையுடன், ஒருவித துள்ளலுடன், 'குலேபாவா...' என்று தொடங்கித் திரும்பத்திரும்ப வரும் அனுபல்லவி அமைந்திருக்கிறது. அது, 'அஸ்கு லஸ்க ஐமோ ஐமோ...' என்ற பாடலை நினைவுபடுத்துகிறது. இதுபோலக் கலவையான தினுசில் வேறு சில பாடல்களும் உள்ளன. பொதுவாக, திரையிசைப் பாடல்களின் சரணங்கள் பலவாக இருந்தாலும் அவற்றின் மெட்டுக்கள் ஒன்றாகவே இருக்கும்.

மஞ்சிமா மோகன், காதல் உணர்வை அநாயாசமாக முகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த அளவிற்கு உதயநிதி யின் உணர்வு வெளிப்பாடு இல்லை. பல இடங்களில், கண்ணாடி அவரைக் காப்பாற்றி விடுகிறது போல...

பாடலை, ஓரளவுக்கு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கிற இயக்குநர் கௌரவ் நாராயணன், மற்றும் ஒளிப்பதிவாளர் ரிச்சார்ட் எம். நாதன், படத்தொகுப்பாளர் பிரவீன் போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். பாடலுக்கான படப்பிடிப்பிற்காக, 'ஓமான்' சென்று சிரமப்பட்டது பற்றி இயக்குநர் சொல்லியிருந்தார். அந்தச் சிரமங்கள் இல்லாமல் இந்தியாவிலேயே படப்பிடிப்பைச் செய்திருக்க முடியுமே...

ஒரு 'வீடியோ இசை அல்பமாக' தனியாகப் பார்க்கும்போது, இந்தப் பாடல் ரசனைக்குரியதாக இருக்கிறது. அண்மைக்காலத்தில் நான் அடிக்கடி கேட்ட பாடல்களில் ஒன்று இது.

ஒட்டுமொத்தமாக ஒப்பிட்டுப் பார்த்து, இசையாலேயே இந்தப் பாடல் அதிகம் வசீகரிப்பதாக உணர்கிறேன்.

https://youtu.be/KuwNfob7Q8U

2017-11-19
அமரதாஸ்

Saturday, September 16, 2017

திலீபன் - நிகழ்ந்திருக்கக் கூடாத நிகழ்வுகளின் நினைவுகள்.


அமரதாஸ்
2017-09-15

தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்து திரு. திலீபன் வகித்த பங்கு தனித்துவமானதாக நோக்கப்படுகிறது. உலகின் விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் தனித்துவமாக இடம்பெறும் போராளியாக அவர் அறியப்படுகிறார். 5 கோரிக்கைகளோடு முன்னெடுத்த உண்ணா நிலைப் போராட்டத்தில் உணவை மட்டுமல்ல, நீரையும் மருத்துவத்தையும் முற்றாகப் புறக்கணித்திருந்தார். சாகும் வரையான அவரது உண்ணா நிலைப் போராட்டத்தின் காலகட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள சில ஒளிப்படங்களின் பின்னணியில் இருக்கும் திரு.தேவர் மற்றும் திரு.ராஜன் போன்றவர்கள் எனக்கு இன்றுவரை நெருக்கமானவர்கள். அவர்கள் இப்போது வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் அவர்களோடு பேசுகிறபோது, திலீபனின் நினைவுகள் எழுவது வழக்கம். திலீபனின் தியாகச்சாவுக் காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஒளிப்படங்கள், என்னுள் பல நினைவுகளையும் கேள்விகளையும் கிளர்த்திக்கொண்டிருப்பவை. பெரும் சோகத்தையும் மறக்க முடியாத வரலாற்றையும் தாங்கியிருப்பவை அவை.



அப்போதிருந்த அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து, உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்வதென்று முடிவெடுத்த திலீபன், அதைத் தனக்கு நெருக்கமாக இருந்த ஒரு அரசியல் ஆய்வாளருக்கு முதலில்  சொல்லியிருக்கிறார். திலீபன் மேல் மிகுந்த அன்பும் நட்பும் கொண்டிருந்த அந்த அரசியல் ஆய்வாளர் அதை ஏற்கவில்லை. 'உன்னை எல்லோரும் சாகவிடுவார்கள், உனது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும், இந்த விசப்பரீட்சையைக் கைவிடு' என்று அப்போது திலீபனிடம் சொல்லியிருந்தார். (அவர் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் எனது  நீண்டகால நண்பர்களில் ஒருவர்.) 

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரனிடம் தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அனுமதிபெற்று உண்ணாநிலைப் போராட்டத்தைத் திலீபன் தொடர்ந்தார். தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதிருந்தால், மயக்கமுற்றிருந்தாலும் தனக்கு வைத்திய உதவிகள் எதுவும் செய்யக் கூடாது என்று சொல்லியிருந்தார்.



விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில், இந்திய இராணுவ காலகட்டமானது மிகுந்த நெருக்கடிக்குரியதாக இருந்தது. அன்றைய காலத்தின் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக திலீபனின் உண்ணா நிலைப் போராட்டத்தை விளங்கிக்கொள்ள முடியும். அது, இந்திய வல்லாதிக்கத்தை அம்பலப்படுத்தவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் அப்போது ஏற்பட்டிருந்த பலவீனமான நிலையினைச் சரிசெய்வதற்குமான முயற்சியாகவும் பார்க்கப்படலாம். எது எப்படியிருந்தாலும், திலீபனின் உண்ணா நிலைப் போராட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட 5 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாது என்று தெரிந்துகொண்ட பின்னரும், அவரது இறப்பை யாராலும் தடுக்க முடியாமல் போனது ஒரு வரலாற்று அவலமாகவே எனக்குத் தெரிகிறது. தனக்கு நீரோ உணவோ வைத்தியமோ வழங்கக் கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லியிருந்தாலும், நீர் கூட அருந்தாமல் வதங்கிப்போய் மயங்கிக் கிடந்த கடைசி நேரத்திலாவது அவரை யாரும் சாவிலிருந்து காப்பாற்றியிருக்கக் கூடாதா...? இது எனது தனிப்பட்ட ஆதங்கமாகும். அவர் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும், காப்பாற்றப்பட்டிருக்க முடியும். 

'இங்கு ஓர் மலர் வாடுகின்றதே
இதய நாடிகள் ஒடுங்குகின்றதே 
தங்க மேனியை சாவு தின்னுதே 
தழலிலாடிய மேனி சோருதே 
பொங்கி நின்றவன் பேச்சடங்குதே 
பொழுது சாயுதே பொழுது சாயுதே 
வந்து பாரடா வந்து பாரடா 
வாடமுன்னொரு செய்தி கூறடா...' 
என்று திரு. புதுவை இரத்தினதுரையும்  
'ஐயா திலீபன்...எங்கைய்யா  போகின்றாய்...' என்று திரு. காசி ஆனந்தனும் தமது உணர்வுகளின் வரிகளை ஒலிபெருக்கிகளில் வழியவிட்டுக்கொண்டிருந்தார்கள். திரு. பிரபாகரன் வந்து, திலீபனின்  தலையைக் கோதிக்கொண்டிருந்தார். திலீபன் நினைவிழந்து போனதை மக்கள் பலரும் போராளிகள் சிலரும் விழிகள் கசியப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் சூழ்நிலையின் கைதிகளாக இருந்திருக்கக் கூடும். (அப்போது திலீபனின் பக்கத்தில் போராளிகளாய் இருந்த சிலர், திலீபனின் கனத்த நினைவுகளுடன் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.)    

இருந்த இடத்திலேயே அணுவணுவாய் இறந்துகொண்டிருந்த திலீபனைச் சுற்றிக் காத்திருந்தவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், இறப்பை உறுதிசெய்து கொண்டே நினைவிழந்த திலீபனின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? இயலாமையின் விளைவான ராஜதந்திரத்தில் அந்தத் தியாகச் சாவு நிச்சயிக்கப்பட்டதா?  எது எப்படியிருந்தாலும், அதுவொரு மானுடப் பேரவலம். அது நடந்திருக்கவே கூடாத துன்பியல் நிகழ்வாகும். மானுட நேசர்களாலும் விடுதலை விரும்பிகளாலும் 'திலீபனின் தியாகம்' புரிந்துகொள்ளப்பட முடிந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.



திலீபனின் வேண்டுகோளுக்கு அமைவாக, யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தனது உடல், கல்வித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பது அவரது விருப்பமாக இருந்தது. அங்கு அவரது உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தபோது நான் பார்த்திருக்கிறேன். கறுத்துப்போயிருந்த வெற்று உடலின் உட்புறம் தெரியும் நிலையில், சில இடங்கள் வெட்டப்பட்டிருந்தன. அவருக்கு இயல்பாகவே துருத்தலாக இருக்கும் பற்கள், மேலதிகமாகத் துருத்திக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அப்போது எனக்கு ஏற்பட்ட மன உணர்வுகள் பற்றி, இப்போது எழுத்தில் விபரிப்பது கடினம். அது இப்போது அவசியமுமில்லை. 

யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்திலிருந்த திலீபனின் உடலானது, 'யாழ்ப்பாண இடப்பெயர்வுக் காலத்தில்' விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினரால் பெறப்பட்டு, வன்னிக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. அங்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அது பாதுகாக்கப்பட்டு வந்தது. திலீபனின் உடல் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம், 'கிபிர்' தாக்குதலுக்கு உள்ளான ஒரு சந்தர்ப்பத்தில் கூட, உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் 'பேழை' சேதமாகவில்லை. பின்னர் 'இறுதி யுத்த காலத்தில்', இடப்பெயர்வில் தொடர்ந்தும் காவிச்சென்று பாதுகாக்க முடியாதிருந்த நிலையில், அந்த உடல் புதைக்கப்பட்டுவிட்டது.

இதை அறிந்த, விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் இருந்த ஒரு நண்பனுடன் அண்மையில் இது பற்றி உரையாடினேன். யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திலேயேயே திலீபனின் உடலை விட்டு வைத்திருந்தால், அது இப்போதும் எப்படியோ பாதுகாப்பாக இருந்திருக்கக் கூடுமென்று அந்த நண்பனுக்குச் சொன்னேன். ஆனால், சிறிலங்கா அரசினால் அது பின்னர் அழிக்கப்பட்டிருக்கவும் கூடும்.



இறுதி யுத்த காலத்தின் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, நல்லூரில் திலீபனின் 'நினைவுக்கல்' வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று ஒளிப்படங்களை எடுத்திருக்கிறேன். அப்போது, பெரிதாக அமைக்கப்பட்டிருந்த திலீபனின் 'நினைவுத் தூபி' அழிக்கப்பட்டிருந்தது. இன்னொரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் 'நினைவுக்கல்' அப்படியே இருந்தது. (அப்போது, அது யாராலும் கவனிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.) இதுவும் விட்டுவைக்கப்படாதென்று அப்போதே நினைத்திருந்தேன். நான் ஒளிப்படங்களை எடுத்த பிறகு, பின்னொரு காலத்தில் அந்த 'நினைவுக்கல்' சிறிலங்கா அரசினால் அழிக்கப்பட்டுவிட்டது. 


திலீபனின் உயிரை அவரது 'விருப்பத்திற்கு' மாறாகக் காக்க முடியவில்லை என்பது ஒருபக்க வரலாற்று அவலம். அவரது உடலை அவரது 'விருப்பத்திற்கு' அமைவாக, தொடர்ந்தும் காக்க முடியவில்லை என்பது இன்னொருபக்க வரலாற்று அவலமாகும். தமிழின விடுதலையை அவாவி, அதற்காக உழைத்த போராளி திலீபன் பற்றிய நினைவுகளும் வரலாறும் பேணப்பட  வேண்டியவை.  

பிற்குறிப்பு -  திலீபனின் வரலாற்றினைத் திரைப்படமாக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. முக்கியமான சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், உண்ணா நிலைப் போராட்டக் காட்சிகள் இன்னமும் படமாக்கப்படவில்லை என்று அறிய முடிந்தது. 'திலீபன்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட அத் திரைப்பட முயற்சியில், திலீபன் பாத்திரத்தில் நடித்த நடிகர் நந்தா மற்றும் இயக்குநர் ஆனந்த் மூர்த்தி ஆகியோருடன் அண்மையில் உரையாடியிருந்தேன். திரைப்படத்தைப் பூர்த்திசெய்து, இன்னமும் வெளிக்கொண்டுவர முடியாத நிலை தொடர்வதில், 'பண நெருக்கடி' முக்கிய காரணியாக இருக்கிறது என்று தெரிய வருகிறது. அத் திரைப்படத்தின் 'தரம்' எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. உண்மையான வரலாற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற அக்கறையோடு தான் அந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்று கருதுகிறேன். அதன் படப்பிடிப்பு  நடந்துகொண்டிருந்த காலத்தில், சென்னையில் நடிகர் நந்தாவை சந்தித்திருந்தேன். வன்னிப்பகுதியில் உருவாக்கப்பட்ட 'ஆணிவேர்' என்ற திரைப்படத்தில் ஒளிப்படக் கலைஞராக நான் பணியாற்றியபோது, அதில் நடித்த நந்தாவுடன் நல்ல அறிமுகம் ஏற்பட்டிருந்தது. 'திலீபன்' என்ற திரைப்பட முயற்சியில் சம்மந்தப்பட்டிருந்தவர்கள், ஆர்வமுள்ளவர்கள் அதனை நேர்த்தியுடன் வெளிக்கொண்டுவர முயற்சிப்பது நல்லது.


Friday, September 8, 2017

'பொங்கியதே காதல் வெள்ளம்' அல்லது 'கண்ணுக்குள் நூறு நிலவா'...

'பொங்கியதே காதல் வெள்ளம்' அல்லது 'கண்ணுக்குள் நூறு நிலவா'...

- அமரதாஸ்
2017-09-08



'மண்ணுக்குள் வைரம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதில் இடம்பெற்ற ''பொங்கியதே காதல் வெள்ளம்...'', ''இதழோடு இதழ் சேரும் நேரம்...'' போன்ற பாடல்களால் கவனம் பெற்றவர் இசையமைப்பாளர் திரு. தேவேந்திரன். பின்னர், இயக்குநர் திரு. பாரதிராஜாவின் குறிப்பிடத்தகுந்த திரைப் பங்களிப்புகளில் ஒன்றான 'வேதம் புதிது' என்ற திரைப்படத்தில் தேவேந்திரனின் இசைப் பங்களிப்பு கவனிப்பிற்குரியதாக இருந்தது. அதில் இடம்பெற்றிருந்த ''கண்ணுக்குள் நூறு நிலவா...'' என்ற பாடல், அது வெளிவந்திருந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது.


''பொங்கியதே காதல் வெள்ளம்...'' மற்றும் ''கண்ணுக்குள் நூறு நிலவா...''ஆகிய பாடல்களுக்கிடையே இரண்டு முக்கியமான ஒற்றுமைகள் இருக்கும். முதலாவது காதல், இரண்டாவது மிருதங்கம். இரண்டு பாடல்களிலும் மகிழ்ச்சிகரமான மிருதங்க இசையை அனுபவிக்க முடியும். காதலின் மகிழ்ச்சியை, உக்கிரத்தை, புத்துணர்ச்சியை மிருதங்கத்தில் ஏற்றியிருக்கிறார் தேவேந்திரன். மிருதங்கத்தால் எனக்குப் பிடித்த பாடல்களில் இவையிரண்டும் முக்கியமானவை.


தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில், என்றைக்கும் நினைவுகூரத்தக்க சில பாடல்களை அவர் உருவாக்கியிருக்கிறார். ''பொங்கியதே காதல் வெள்ளம்...'', ''கண்ணுக்குள் நூறு நிலவா...'', ''இதழோடு இதழ் சேரும் நேரம்...'', ' போன்ற பாடல்களில் அவர் தனது இசை ஆளுமையைப் பதிவுசெய்திருக்கிறார். நல்லதொரு இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்த தேவேந்திரனுக்கு நல்லபடியான வாய்ப்புகள் அதிகம் அமையவில்லை என்பதும், அவர் அதிகம் 'கவனிக்கப்படவில்லை' என்பதும் வருத்தத்துக்குரியது.


''கண்ணுக்குள் நூறு நிலவா...''
https://youtu.be/o_umXE7vB_w

''பொங்கியதே காதல் வெள்ளம்...''
https://youtu.be/QojxewDQFmk

''இதழோடு இதழ் சேரும் நேரம்...''
https://youtu.be/QCcHXXDPkgc


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக ஆரம்ப காலத்தில் பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தேவேந்திரன். அப் பாடல்கள், ஈழத்தில் இந்திய ராணுவம் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் தமிழகத்தில் உருவாக்கப்பட்டவை. அத்தகைய சில பாடல்கள் இசையால் வளம்பெற்றவை, இசையாலேயே வசீகரிப்பவை, பல்வேறு அம்சங்களில் முக்கியத்துவம் கொண்டவை. (அவை, தனியான பதிவுக்குரியவை.) தேவேந்திரனுடனான இசை சார் அனுபவங்கள் பற்றி, அவருடன் இணைந்து பல பாடல்களை உருவாக்கிய கவிஞர் திரு. புதுவை இரத்தினதுரை என்னிடம் சொல்லியிருக்கிறார்.


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான பாடல்களின் உருவாக்கத்தில், தேவேந்திரனுக்குப் பிறகு இசையமைப்பாளர் திரு. கண்ணன் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்.



Thursday, September 7, 2017

பாலியல் தொழிலும் தமிழ்ச் சூழலும் - ஒரு திரைப்படத்தினை முன்வைத்து...


பாலியல் தொழிலும் தமிழ்ச் சூழலும் - ஒரு திரைப்படத்தினை முன்வைத்து...

- அமரதாஸ்
2017-09-07




'சிவப்பு எனக்குப் பிடிக்கும்' என்ற தமிழ்த் திரைப்படத்தினை நேற்றுப் பார்க்க முடிந்தது. பாலியல் தொழிலாளர்கள் பற்றிய ஒரு பதிவினை அண்மையில் எழுதியிருந்தேன். அதற்கு முன்னர் இத் திரைப்படத்தினைப்  பார்த்திருந்தால், இது பற்றியும் சேர்த்து எழுதியிருக்க முடியும். சரி, இப்போது தனியாகவே இத் திரைப்படம் குறித்து சுருக்கமாக எழுத முனைகிறேன்.


'சிவப்பு எனக்குப் பிடிக்கும்' என்ற தமிழ்த் திரைப்படமானது, தமிழ்ச் சமூகத்தின் பாலியல் சார் பிரச்சினைகளை வெளிப்படையாகவும் புரிந்துணர்வோடும் அணுகவேண்டும் என்னும் அக்கறையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு  மாணவன், ஒரு பாதிரியார், காவல் துறைக்கும் அரசுக்கும் 'தீவிரவாதியாக' தெரியும் ஒருவர், 'அரவாணி' ஒருவர், மனநல வைத்தியர் ஒருவர், உடல் ரீதியில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆகியோருடனான  அனுபவங்களை எழுத்தாளர் முன்னே  வெளிப்படுத்தும்
பெண் பாலியல் தொழிலாளியை மையப்பாத்திரமாகக் கொண்டிருக்கிறது. அந்த எழுத்தாளர், பாலியல் ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிறுமியை  மகளாகக் கொண்டவர் என்பது படத்தின் இறுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையினர் மற்றும் வேறு சில பாலியல் தொழிலாளர்கள் போன்ற கதாபாத்திரங்கள் திரைக்கதையின் தேவைக்கேற்ப கையாளப்பட்டுள்ளன.



பாலியல் குற்றங்களைக்  குறைக்கும் நோக்கில், சென்னைக்கு 'முறைப்படுத்தப்பட்ட'  'சிவப்பு விளக்கு பகுதி' அல்லது பாலியல் தொழில் தேவை என்பதுவும், 'பாலியல் கல்வி' முறைப்படி வழங்கப்பட வேண்டும் என்பதும், இத் திரைப்படத்தின் பிரதானமான வேண்டுதல்களாக உள்ளன. 'முறைப்படுத்தப்பட்ட'  பாலியல் தொழிலை  ஒரு 'தீர்வாக' வலியுறுத்துவது, தமிழ்ச் சூழலைப் பொறுத்த வரையில்  'சர்ச்சைகளுக்குரியதாக' இருந்து வருகிறது.  இருந்தாலும் 'பரிசீலனைக்குரியதாக' முன்வைக்கப்படுகிறது. 



ஆண்களின் பாலியல் 'தேவைகள்' பற்றிய கரிசனத்தைக் கொண்டிருக்கும் இத் திரைப்படமானது, பெண்களின் பாலியல் 'தேவைகள்' பற்றிய கவனப்படுத்தலைக் கொண்டிருக்கவில்லை. அந்த வகையில் இது ஆண் நோக்கு நிலையில் அமைந்த மேலோட்டமான  திரைப்படமாகும். பல்வேறு சமூக  நிர்ப்பந்தங்களால் உந்தப்படுகின்ற ஆண்களின் பாலியல் 'தேவைகளுக்கு' 'வடிகாலாக' பெண் பாலியல் தொழிலாளர்கள் 'தேவை' என்பதே இத் திரைப்படத்தின் அடிப்படையான 'விவாதத்துக்குரிய' கோரிக்கை. 


பாலியல் தொழிலாளிகளின் உருவாக்கத்துக்கும் பெருக்கத்துக்கும் பல்வேறு சமூக, உளவியல் காரணங்கள் இருக்கும் நிலையில் பாலியல் கல்வி, மற்றும் 'முறைப்படுத்தப்பட்ட'  பாலியல் தொழில் போன்ற முன்னெடுப்புகள் ஓரளவுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பாலியல் வறட்சியும் பாலியல் குற்றங்களும் பாலியல் சார் பிரச்சினைகளும் மலிந்துபோயுள்ள தமிழ்ச் சூழலில், அவற்றை விளங்கிக்கொண்டு, அவற்றைக் குறைப்பதற்கான ஆரோக்கியமான மாற்று வழிமுறைகளை  ஆராயவேண்டிய அவசியம் உள்ளது. பல்வேறு  நாடுகளில் பாலியல் தொழில் மற்றும் பாலியல் கல்வி ஆகியவை 'முறைப்படுத்தப்பட்ட' நிலையில் மேற்கொள்ளப்படுவது அவதானிப்பிற்குரியது.


'முறைப்படுத்தப்பட்ட'  பாலியல் தொழில் மூலம் பாலியல் குற்றங்கள் குறைக்கப்படுமென்பதும் பாலியல் தொழிலாளர்களின் பல்வேறு சிரமங்கள் குறைக்கப்படுமென்பதும் இந்தத் திரைப்படத்தின் இயக்குநரது  நம்பிக்கையாகும். இதை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில், நேர்காணல்களில்  குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் இருந்து திரைப்பட இயக்குநர் ஆனவர் அவர். 'மதுரை சம்பவம்' என்ற திரைப்படத்தினை அவர்  ஏற்கெனவே  இயக்கியிருக்கிறார்.


எழுத்தாளரின் பாத்திரத்தில் (யுரேகா) நடித்திருப்பவர், இத் திரைப்படத்தின் இயக்குநரான யுரேகா. அவருக்குத் தனது அனுபவங்களைச் சொல்லும் பாலியல் தொழிலாளியின் பாத்திரத்தில் (மகிமா) நடித்திருப்பவர் சாண்ட்ரா எமி என்னும் சின்னத்திரை நடிகை. இருவரது 'வெளிப்பாடுகளும்' பல இடங்களில் செயற்கைத்தனமானவையாக உள்ளன. வலிந்து புகுத்தப்பட்டதாக சில காட்சியமைப்புகளும் வசனங்களும் தென்படுகின்றன. திரைக்கதையில் நம்பகத்தன்மையை, 'இயல்பை' மீறிய சில இடங்கள் உள்ளன. தர்க்க ரீதியில் பொருந்திவராத சில காட்சியமைப்புகள்  உள்ளன. எனினும்,  திரைக்கதைக்குத்  'தேவையான' அழுத்தமான வசனங்கள் ஆங்காங்கே கவனிப்புக்குரியதாக உள்ளன.

பாலியல் ரீதியிலான  காட்சிகளை இடம்பெறச் செய்யத்தக்க சந்தர்ப்பங்கள் அதிகமிருந்தும் அத்தகைய காட்சிகளைத் தவிர்த்திருக்கிறது திரைக்கதை. பல்வேறு நிலையில் 'பாலியல் வக்கிரத்தை' ஆங்காங்கே கொண்டிருக்கும் பல்வேறு தமிழ்த்  திரைப்படங்களின் மத்தியில், இத் திரைப்படமானது தன்னளவிலான  தனித்துவத்தையும்  கண்ணியத்தையும் கொண்டுள்ளது. ஒரு திரைப்படத்தில், பாலியல் சார் காட்சிகள் 'தேவைப்படும்'  இடங்களில் 'தேவைக்கேற்ப' இடம்பெறுவது இயல்பானது என்பது வேறு விடையம். 

இத் திரைப்படத்தின்  பேசுபொருள்  முக்கியமானது, கவனிப்புக்குரியது. ஆனால் பேசியிருக்கும் விதம் 'கலாபூர்வமானதாக' இல்லை. ஒரு திரைப்படமாக, கலை வெளிப்பாடாக இதனை அணுகும் நிலையில், பல குறைபாடுகளைக் காண முடியும். பாலியல் 'விழிப்புணர்வு' கோரும் வகையில்  கட்டமைக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தின் 'சொல்முறை' மிகவும் பலவீனமானது, செயற்கைத் தன்மைகள் நிறைந்தது. இருப்பினும், ஒரு அனுபவமுள்ள திரைப்பட பார்வையாளரால் இதன் குறைகளை,போதாமைகளை இட்டுநிரப்பி இதனை அணுக முடியும் என்று தோன்றுகிறது.  இதை ஒரு சிறந்த திரைப்படமாக எடுத்திருக்க முடியும். 'மாற்றுச் சிந்தனைகள்' கொண்ட   ஒரு  திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இயக்குநர், அது நல்ல கலையாக்கமாக அமைந்திருக்க வேண்டும் என்று அக்கறைப்பட்டிருக்கலாம்.


உண்மையில், பாலியல் தொழிலாளர்களின் நிலைமையானது, இந்தப் படத்தில் உள்ளது போலக் குறைந்த பட்ச அளவில் கூடப் பாதுகாப்பானதாகவோ  சமூகக் கரிசனத்துக்குரியதாகவோ  ஆரோக்கியமானதாகவோ  இல்லை. தமிழ்ச்  சமூகத்தின் பாலியல் சார் பிரச்சினைகள்,  'இருண்ட'  அவலங்களாகப் பரந்து   கிடக்கின்றன. பல்வேறு சமூக, உளவியல் காரணங்களால் உருவாக்கப்பட்டு 'கவனிப்பாரற்று' அலைக்கழியும் பாலியல் தொழிலாளர்கள் பற்றியும், சமூகத்தின் பாலியல் சிக்கல்கள் பற்றியும்  சமூக, உளவியல் நிலைப்பட்ட  'ஆய்வுகள்' மேற்கொள்ளப்பட  வேண்டும்.


எது எப்படியிருந்தாலும் இத் திரைப்படமானது,  கவனிப்பிற்குரியதாக இருக்கிறது. இத்தகைய சமூகப் பிரச்சினைகள் பல்பரிமாணத்தன்மையுடன் அணுகப்படுவதும், கலாபூர்வமாக வெளிப்படுத்தப்படுவதும், சமூக மட்டத்தில் ஆரோக்கியமான நிலையில் முன்னெடுக்கப்படுவதும் அவசியமாகும்.

Tuesday, September 5, 2017

பாலியல் தொழிலாளர்கள்...


யாழ் நகரின் ஒரு பகுதி  (ஒளிப்படம் - அமரதாஸ்)



யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் பற்றிய சிறு பதிவை, முக நூல் வழியாகப் பார்க்க நேர்ந்தது. அது பலவகையில் முக்கியமானதொரு பதிவாக இருந்தது. அதைத் தொடர்ந்து இலக்கிய இதழ் ஒன்றின் 'பாலியல் நலம்' சார்ந்த கட்டுரையினைப் படிக்க முடிந்தது. அவையே, இப்போது என்னை இப் பதிவினை உடனடியாக எழுதத் தூண்டியிருக்கின்றன.


நீண்ட காலத்துக்கு முன்னர் (கிட்டத்தட்ட 'அறுபதுகள்', 'எழுபதுகள்' காலப்பகுதி), யாழ் நகர்ப்பகுதிகளில் 'உலாத்திய' பெண் பாலியல் தொழிலாளி, 'சோடாமூடி' என்ற பெயரால் நன்கு அறியப்பட்டிருந்தார். அந்தப் பெயருக்குப் பின்னே ஒரு 'வஞ்சகமான' கதை இருந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் 'கதையை' நான் முன்னரே அறிந்திருந்தேன். 'விளிம்புநிலை' மனிதர்களுடனேயே அவரது சகவாசம் பெரும்பாலும் இருந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவர், அக் காலத்தில் பலருக்கு வேடிக்கைக்குரியவராகவும் வெறுப்புக்குரியவராகவும் இருந்திருக்கிறார்.


தனிமைப்பட்டு பாலியல் தொழில் செய்ய முடியாத நிலையில் தளர்ந்துபோய் வைத்தியசாலை முன்பாகக் கடலை வியாபாரம் செய்து வந்த அந்த மனிதப் பிறவியை, 'ஆயுததாரிகள்' (ஏதோ ஒரு 'இயக்கம்' சார்ந்தவர்கள்.) சுட்டுக் கொன்றது, சமூக அவலங்களில் ஒன்றாகும்.


பல்வேறு சமூக, உளவியல் காரணங்களால் உருவாக்கப்பட்டு அலைக்கழியும் பாலியல் தொழிலாளர்களின் கதைகள், சமூக ஆய்வுகளுக்குரியவை. 'சோடாமூடி' எனப்படும் பெண்ணின் கதையானது, பலவகையான சிந்தனைகளையும் கேள்விகளையும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் எழுப்பக் கூடியது. அது, ஒரு திரைப்படம் ஆக்கப்படக்கூடியது. சந்தர்ப்பம் சரியாக அமைந்தால், அக் 'கதையை' 'ஆராய்ந்து', ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்துவிடலாம் என்று தோன்றுகிறது. அதன் மூலம், தமிழ்ச் சமூகத்தின் பாலியல் சார் சிக்கல்களும் உள் முரண்களும் கசடுத்தனங்களும் கலாபூர்வமாகப் பேசப்படக்கூடும். பாலியல் தொழிலாளர்கள் சார்ந்த தமிழ்ப் படைப்புகள் (கதைகள்), ஜி.நாகராஜன் மற்றும் ஜெயகாந்தன் போன்றோரால் முன்வைக்கப்பட்டு தமிழ்ச் சூழலில் கவனிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன.


சர்வதேச ரீதியில் பாலியல் தொழிலாளர்களைப் பல வகையினராகப் பார்க்க முடியும். பெரும்பாலும் அவர்கள் பல்வேறு சமூக 'நிர்ப்பந்தங்களால்', மனப்பிறழ்வால் உருவாகியவர்களாகவே இருப்பார்கள். 'பகட்டான' வாழ்க்கைக்காகவும் உடல் இன்பத்துக்காகவும் ஒருவித சாகச மனோபாவத்திலும் சுய விருப்போடு பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் கூட இருக்கக்கூடும்.


பல்வேறு சமூகக் காரணங்களால் உருவாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் இப்படியான மனிதர்களைப் பற்றி, பல இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறேன். இலங்கையில் இருந்து ஐரோப்பா வரையில் அறியக் கிடைத்த பாலியல் தொழிலாளர்கள் பற்றிய 'சித்திரங்கள்' விசித்திரமானவை.


போருக்குப் பிறகு, இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களின் மத்தியில் பாலியல் தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களால் 'உருவாக்கப்படுகிறார்கள்' என்று ஒரு கருத்து இருக்கிறது. உண்மையில், இது பரிசீலிக்கப்படவேண்டியதும் ஆய்வுசெய்யப்பட வேண்டியதுமாகும்.


பாலியல் சார்ந்த விழிப்புணர்வும் புரிந்துணர்வும் குறைவாக உள்ள தமிழ்ச் சூழலில் இத்தகைய விடையங்கள் பேசப்படுவது அரிது. பாலியல் வறுமையும் பாலியல் வன்முறைகளும் பாலியல் சார் பிரச்சினைகளும் அதிகரிக்கும் சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறுவதை விரும்புகிறவர்கள், சமூகவிரோதிகளாகவே இருக்க முடியும். மனித குலத்தின் ஆதார சக்திகளில் ஒன்றாகிய 'பாலியல்' பற்றிய விழிப்புணர்வும் புரிந்துணர்வும் அதிக அளவில் கொண்ட சமூகம் பெருமளவுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

- அமரதாஸ்
2017-09-05

Thursday, July 27, 2017

பார்வை நாடகம் அல்லது 'ஜூலி ஐ லவ் யூ'



''விழிகள் மேடையாம்...'' என்று தொடங்கும் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களின் வரிசையில் இடம்பெறுவது. இதை அவ்வப்போது கேட்க நேரும் சமயங்களில் அதுபற்றி ஏதாவது எழுதவேண்டும் என்று நினைப்பதுண்டு. (பிடித்த பல பாடல்களைக் கேட்கும் போதும் அப்படித் தோன்றும். பிறகு வேறு சோலிகளாலும் 'சோம்பேறித்தனத்தாலும்' ஆர்வம் நீர்த்துவிடும்.)


கவிஞர் மகுடேசுவரன் எழுதிய பதிவொன்றை இப்போது படித்தபோது உடனடியாகவே எழுதும் உந்துதல் ஏற்பட்டது.


'பசி' என்னும் திரைப்படத்தை இயக்கிய துரை, 'கிளிஞ்சல்கள்' என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். அப் படத்தில், ''விழிகள் மேடையாம்..'' என்ற இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது, இயல்பாகவே இந்தப் பாடல் மனதில் தங்கிவிட்டிருந்தது. பிறகு, பாடலை எழுதி இசையமைத்தவர் டி.ராஜேந்தர் என்று அறிய முடிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. திரைத்துறையில் நுழைந்த புதிதில் இதுபோலக் கவனம் பெறத்தக்க வேறு சில பாடல்களையும் உருவாக்கியிருக்கிறார் ராஜேந்தர். 


''விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்...'' என்ற பல்லவியின் தொடக்கமே காதலர்கள் இருவரின் காதலைக் காட்சிப் படிமமாக உருப்பிக்கும் அழகியல் தன்மை கொண்டது. (இந்தப் பாடல், 'கிளிஞ்சல்கள்' திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் ரசனைக்குரியதல்ல. இந்தப் பாடலிலும் 'கிளிஞ்சல்கள்' திரைப்படத்திலும் நடித்த பூர்ணிமாவையும் மோகனையும் ஐந்து வருடங்களுக்கு முன்னர், சென்னையில் ஒரு நிகழ்வில் சந்தித்த போது, ஒளிப்படங்கள் எடுத்திருக்கிறேன்.) 


''மைதடவும் விழியோரம் மோகனமாய் தினமாடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்...'' என்று சரணத்தில் தொடரும் நயமான வரிகளைப் போல வேறுசில பாடல்களின் வரிகளையும் ஆரம்ப காலத்தில் நயம்பட எழுதியவர் ராஜேந்தர். பிற்காலத்தில் அவர் எழுதிய பல பாடல்களும் இயக்கிய திரைப்படங்களும் நல்லவையல்ல என்பது வேறு விடையம். 


இந்தப் பாடலில் அங்கங்கே வீணை பயன்பட்டிருக்கிறது. பல்லவி முடிந்து திரும்பவும் சரணம் தொடங்குவதற்கு இடையில் சுழித்து வரும் வீணையிசை ரசனைக்குரியது. 


இந்தப் பாடலில் அதிகம் ஈர்ப்புக்குரியதாக இருப்பது பாடலின் மெட்டும் ஜானகியின் குரலும் சில வரிகளுமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பாடலை நினைத்ததும் கூடவே நினைவுக்கு வருவது, இடையிடையே வெவ்வேறு தொனிகளில் 'ஜூலி ஐ லவ் யூ' என்று திரும்பத் திரும்ப ஒலிக்கின்ற ஆண் குரல். 'ஜூலி ஐ லவ் யூ' என்று அவர் திரும்பத் திரும்ப நயமாக எடுத்துரைக்கும் போது, இடையில் கலக்கும் ஜானகியின் 'சிணுங்கல்களும்' (humming) ரசனைக்குரியவை. முழுப்பாடலையும் பாடுகிறவர் ஜானகி. ஆனால் இடையிடையே கொடுக்கும் 'ஹம்மிங்' தவிர 'ஜூலி ஐ லவ் யூ' என்று மட்டும் நயமாக எடுத்துரைத்து, அழுத்தமாக இப் பாடலில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிறது ஆண் குரல். குறிப்பிட்ட 'ஜூலி ஐ லவ் யூ' பகுதியானது, பாடலின் அனுபல்லவியாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் அதனை அனுபல்லவியாகத் தான் உணர முடிகிறது. (அந்த ஆண் குரலுக்கு உரியவர் ஜூலி ஆப்ரஹாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் அந்தக் குரலுக்கு உரியவர் Dr. கல்யாண் என்பவர் என்று இப்போது அறிகிறேன்.) 


- அமரதாஸ்

Monday, July 24, 2017

பிரசன்ன விதானகேயும் அவரது திரைப்படைப்புகளும் நானும் - நட்பு ரீதியில் ஒரு பதிவு



-அமரதாஸ்
Prasanna Vithanage - Amarathaas

நண்பர் பிரசன்ன விதானகே, உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். அவரது வாழ்க்கையும் படைப்புகளுமே இதற்கு ஆதாரம். எங்கிருந்தோ ஒரு புள்ளியில் இருந்து அவரும் நானும் பழகத்தொடங்கினோம். அடிக்கடி சந்திக்கவோ பேசவோ வாய்ப்புகள் இல்லாதிருந்தும், அவருக்குத் தமிழோ எனக்குச் சிங்களமோ சரியாகத் தெரியாதிருந்தும், அவரை விட வயதில் இளையவனாக நான் இருந்தும், இன்றுவரை நல்ல நண்பராகவே அவர் இருக்கிறார் என்பது சந்தோசமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது. உண்மையான, வாழ்க்கைக்கான சினமா பற்றிய தேடலும் அன்பும் இருவருக்குமான இணைப்பை அல்லது உறவை  தொடரச் செய்யக்கூடும்.

உலக அளவிலும் இலங்கையிலும் நன்கு அறியப்பட்ட கலைஞராக இருந்தும், அவர் விரும்பியபடியாக கலைப்பணியாற்றுவதில் பல நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறார். யுத்த காலத்தில் இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த 'புரஹந்த களுவர' (Death on a full moon day) என்ற பிரசன்ன விதானகே யின் திரைப்படமே அவரை உற்று நோக்க வைத்தது. தடை நீக்கத்திற்காகவும், அத் திரைப்படத்தைப் பல்வேறு தளங்களுக்குக் கொண்டுசெல்லவும் அவர் பட்ட பாடுகள், ஒரு அறநிலைப்பட்ட கலைஞராக அவரை வெளிப்படுத்தின. உலகின் சிறந்த திரைப்படங்கள் சிலவற்றைத் தெரிவு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது, அவற்றுள் நான் பிரசன்னவின்  'புரஹந்த களுவர' (Death on a full moon day) திரைப்படத்தையும் உள்ளடக்குவேன். பிரசன்ன, எனது நண்பர் என்பதற்காக அல்ல. அத் திரைப்படம் தொடர்பில் சில ‘திருப்தியீனங்கள்’ எனக்கு உண்டென்றபோதும் அது உலகின் சிறந்த படங்களில் ஒன்றுதான். (எனக்குப் பிடித்த பல உலகத் திரைப்படங்களில், சில திருப்தியீனங்கள் இருக்கும். அது எனது பார்வை, தேடல், ரசனை சம்மந்தப்பட்டது.)
Prasanna Vithanage - Photograph of Amarathaas

பிரசன்ன விதானகே, 'ஆகாச குசும்' என்ற  தனது ஆறாவது  திரைப்படத்தின் திரைக்கதையினைத் தமிழ் மொழி மாற்றம் செய்து வெளியிட்டிருந்தார். அதனை எனக்கு அனுப்பியிருந்தார். (அத் திரைப்படமும் பின்னர் மொழி மாற்றம் செய்யப்பட்டது.) 


அதன் முகவுரையில் - '' யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த போது எனது திரைப்படங்களுடன் வடக்கிற்குச் சென்ற நான், சினமாவைத் தமது உணர்வுகளின் வெளிப்பாட்டு (Self expression) ஊடகமாகத் தெரிவுசெய்ய ஆர்வம் கொண்டிருந்த அநேகமான இளைஞர்களைச் சந்தித்தேன். எனது 'புரஹந்த களுவர' ( முழு நிலவு நாளின் மரணம்) திரைப்படத்தின் ரசிகர்களாகிய அவர்கள், நானும் அசோக ஹந்தகமவும் செல்லும் பாதையில் பயணித்து, இலங்கைத் தமிழருக்கு உரித்தான தமிழ் சினிமாவை உருவாக்கக் கனவு கண்டுகொண்டிருந்தனர். யுத்த நிறுத்தம் முறிந்ததன் பின் ஏற்பட்ட பயங்கர யுத்தத்தின் போது, அவர்கள் எங்கு இருக்கின்றார்களோ என்ற எண்ணம் என்னுள் எழுந்து உறுத்தியது. ஆனால் அண்மையில் அகதி முகாம்களிலிருந்து தமது வீடுகளுக்குத் திரும்பிய அவர்கள் தொலைபேசி மூலம் என்னுடன் பேசினார்கள். எதிர்காலத்தில் அவர்களின் உணர்வுக்குரல் சினிமாவில் ஒலிக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாக உள்ளது. வெளிப்படுத்தத் துடிக்கும் ஆயிரமாயிரம் கதைகள் அவர்களினுள் தேங்கிக் கிடப்பதை நான் அறிவேன்.'' - என்று பிரசன்ன விதானகே எழுதியிருக்கிறார்.

இலங்கையில் யுத்தம் முடிந்த பிறகு, திரைப்படப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடாத்தவென, பிரசன்ன விதானகேயும் அவரது பெரும்பாலான திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய, இலங்கையின் மிக முக்கியமான  ஒளிப்பதிவாளரான  மகிந்தபாலவும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். 

Prasanna Vithanage - Amarathaas - Mahindapala
அப்போது, நீண்ட காலத்துக்குப் பின்னரான பிரசன்னவுடனான சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியானதாக இருந்தது. 'ஆகாச குசும்' படத்தின் திரைக்கதையின் தமிழ் மொழியாக்க நூலில் உங்களையும் பற்றித்தான் எழுதியிருக்கிறேனென்று சொன்னார். (யுத்தம் முடிந்த பிறகு, அகதி முகாமிலிருந்து விடுதலையான பின்னர், பிரசன்னவுடன் தொலைபேசி மூலம் பேசியிருந்தேன். இப்போது என்ன செய்கிறீர்களென்றும் இனி என்ன செய்யப் போகிறீர்களென்றும் அவர் கேட்டபோது, சீரோ வில் - 0 - இருந்துதான் வாழ்க்கையினை ஆரம்பித்திருக்கிறேனென்றும் வாய்ப்புக் கிடைத்தால் சினமாவில் ஈடுபடுவேனென்றும் சொன்னேன்.) என் வசமிருந்த அவரது திரைப்படங்கள், ஏனைய பல ஆவணச்சேகரிப்புக்களுடன் யுத்தத்தில் அழிவடைந்து விட்டதினால் அவரது திரைப்படங்களின் பிரதிகள் வேண்டுமென்று கேட்டேன். (இலங்கையின் நல்ல திரைப்படங்கள் இலங்கையில் கிடைப்பது அரிது.) DVD வடிவில் தன் வசமிருந்த தனது எல்லாத் திரைப்படங்களையும் பிரதி செய்து தந்தார்.




யுத்தத்தின் விளைவுகளை முன்னிட்டு, ‘அதிரும் காற்று’ என்று ஒரு தமிழ்த் திரைப்படத்தையும் ஒரு விவரணப்படத்தையும் உருவாக்கத் திட்டமிடுவதுபற்றியும் அவற்றின் செல்நெறி பற்றியும் உரையாடினார். அவற்றின் உருவாக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டு, என்னை இணைத்துக்கொண்டார். அவற்றின் முற்தயாரிப்புப் பணிகளின் போது யுத்தம் தொடர்பான பல விளக்கங்களைக் கேட்டுக்கொள்வார். தனது படைப்புச் செயற்பாடுகள், நொந்துபோயிருக்கும் தமிழர் மனங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்று சொல்லித் திரைக்கதையின் முக்கியமான தருணங்கள் பற்றி நுணுக்கமாகக் கலந்துரையாடினார். பல்வேறு காரணங்களால், அந்த இரண்டு முக்கியமான 'படைப்புகள்' அடுத்த கட்டத்தை எட்டமுடியாமல் போய் விட்டன. பிறகு தான், இலங்கையின் வடபகுதியிலிருந்து யுத்தத்தால் இடம் பெயர்ந்து மலையகத்தில் வசிக்கும் தமிழ்ப் பெண் பற்றிய சிங்களத் திரைப்படம் ('ஒப நதுவ ஒப எக்க' -With You Without You- பிறகு ) உருவாக்கப்பட்டது. அத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் ஆரம்பித்தபோது தமிழகத்திலிருந்த நான், எனது ஊருக்குத் திரும்பி, பின்னர் பிரசன்னவிடம் சென்றேன். படப்பிடிப்பில், ஒளிப்படங்களை எடுக்கும் முக்கியமான பணியினை நட்பு ரீதியில் தந்ததோடு, படப்பிடிப்பின் போதான எல்லா நடவடிக்கைகளிலும் ஊடாடக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார். 





படத்தின் பிரதான பாத்திரத்தில் நடிக்கவென்று, பாத்திரப் பொருத்தம் கருதி, வட இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டிருந்த அஞ்சலி பட்டேலிடம், பெருமையுடன் என்னை அறிமுகப்படுத்தும் போது, 'நீங்கள் நடிக்கும் பாத்திரத்தின் சொந்த ஊரிலிருந்து இவர் வந்திருக்கிறார்' என்று அழுத்தமாகச் சொன்னார்.





பல்வேறு துறைகள் சார்ந்து திரைப்படத்தில் பணியாற்றிய சிங்களக் கலைஞர்கள் மத்தியில் பெருமைக்குரிய வகையில் அறிமுகப்படுத்தினார். பல புதிய நண்பர்கள் உருவாகக் காரணமாக இருந்தார். ஒருநாள் படப்பிடிப்புக் களத்திற்கு வந்த தயாரிப்பாளர்களில் ஒருவரிடம், 'ஆகாச குசும்' படம் தொடர்பாக நான் எழுதி, ஒரு சஞ்சிகையில் வந்திருந்த எனது விமர்சனக் கட்டுரையினைக் காட்டிப் பெருமையுடன் என்னை அறிமுகப்படுத்தினார்.


திரைப்பட உருவாக்கத்தின் போது பல்வேறு இயக்குநர்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். குறை நிறைகளோடு ஒவ்வொருத்தருக்கும் வேலை செய்யும் பாணி (Working style) வேறுபட்டிருக்கும். பிரசன்னவின் படப்பிடிப்புக் களச்செயற்பாடுகள் எப்போதும் அமைதியாகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். உணர்வு பூர்வமான முக்கிய காட்சிகள் சிலவற்றைப் படமாக்கும் போது, என்னை அழைத்து அருகிலேயே வைத்துக்கொண்டார். பாலியல் சார்ந்த நெருக்கமான காட்சிகள் சிலவற்றைப் படமாக்கும் போது, ஒளிப்பதிவாளர் உட்பட மிகச் சிலரையே பக்கத்தில் வைத்துக்கொண்டார். நடிகர்களையும் உதவியாளர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் சூழலையும் அவர் கையாளும் விதம் மிகவும் ஆரோக்கியமானது.


பிரசன்ன விதானகே, தனது திரைப்படங்களுக்கான ஒலியமைப்பு, படத்தொகுப்பு போன்ற பிற்தயாரிப்பு வேலைகளைப் பெரும்பாலும் தென்னிந்தியாவில் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்திற்கு நான் மீளவும் சென்றிருந்தபோது, பிரசன்னவின் 'ஒப நதுவ ஒப எக்க' (With You Without You) படத்தினதும் மணிரத்தினத்தின் 'கடல்' படத்தினதும் படத்தொகுப்புப் பணிகளை, சிறீகர் பிரசாத் சமகாலத்தில் மேற்கொண்டிருந்தார். பிரசன்னவை தமிழகத்தில் சந்தித்து, அதுபற்றி அப்போது உரையாட முடிந்தது.

கொழும்பில் ஒரு பிரபலமான திரைப்பட ஸ்ரூடியோவினுள் ஒரு வீட்டின் உட்புறப் பகுதி, பலகைகளால் நிர்மாணிக்கப்பட்டு (Set disign) 'ஒப நதுவ ஒப எக்க' (With You Without You) திரைப்படத்தின் பெரும்பாலான முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அருகில் வேறு ஒரு சிங்களத் திரைப்படப் பிடிப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில் பணியாற்றிய ஒருவர், பிரசன்ன மிகவும் நல்ல இயக்குநரென்றும் அவரது படங்கள் மரியாதைக்குரியவையென்றும் கூறினார். பிரசன்னவைப் போல், தரமான படங்களை இலங்கையில் பலராலும் உருவாக்க முடியாமலிருப்பதாக ஆதங்கப்பட்டார்.


இலங்கையில் தமிழ் சினமாவின் நிலை பற்றியும் அது நலிவடைந்து போனமைக்கான காரணங்களைத் தேடியும் அதனை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் குறித்த அக்கறைகளுடனும் தமிழ்ச் சூழலில் திரையரங்குகளின் நிலை பற்றி ஆராய்வதாகவும் ஒரு புனைவு சாராப் பட முயற்சி (Documentary film) மேற்கொள்ளப்பட்டது. அதில் பிரசன்னவின் பங்களிப்பு இருந்தது. அவரது 'ஆகாயப் பூக்கள்' (சிங்களத்தில் 'ஆகாச குசும்') என்ற தமிழாக்கப் படம், யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட சமயம், அவருடன் வந்த இரண்டு நண்பர்கள், அப் புனைவு சாராப் படத்திற்கான படப்பிடிப்புப் பணிகளைச் செய்தனர். அதற்காக எனது நேர்காணலையும் பதிவு செய்தனர். அக் காலத்தில் பிரசன்னவைச் சந்தித்து, அவரை அறிமுகப்படுத்தும் விதமான நேர்காணல் ஒன்றினைப் பதிவு செய்திருந்தேன்.

சிங்கள சினமாவின் தரத்தை மேம்படுத்த முனைவதுடன், தனது படங்களை, திரைக்கதைகளைத் தமிழாக்குவது, தமிழ் இளைஞர்களுக்குத் திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளை நடாத்துவது என்று ஈழத் தமிழ்ச் சூழலில் ஈழத் தமிழ் சினமாவிற்கான அடித்தளத்தைப் பலப்படுத்தவும் முனைகிறவராக பிரசன்ன விதானகே இருக்கிறார். ஈழத்தமிழர் சார்ந்த, போர் சார்ந்த  விடையங்களை சிங்களக் கலைஞர்கள் திரைப்படங்களில் கையாளும் அளவிற்கு, உலகளாவிய ரீதியில் தமிழ்க் கலைஞர்கள் அழுத்தமாகக் கையாளாமலிருப்பது ஈழத்தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் பாரிய பின்னடைவாகும்.



முன்னாள் போராளி ஒருவரை மையப்பாத்திரமாகக் கொண்ட 'இனி அவன்' என்ற தமிழ்த் திரைப்படத்தின் பிரிவியூ நிகழ்விற்கு, அத் திரைப்படத்தின் இயக்குநரான அசோக ஹந்தகம வினால் நட்பு ரீதியில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அசோக ஹந்தகம பிரபலமான முக்கியமான சிங்கள இயக்குநர்களில்  ஒருவர். அத் திரைப்படமானது, இலங்கையில் போருக்குப்  பின்னரான சிங்களக் கலை உலகிலிருந்து வெளிவந்த ஒரு முக்கியமான முயற்சியாகத் தெரிந்தது. இருந்தாலும் அதன் திரைக்கதையமைப்பிலும் அரசியல் வெளிப்பாட்டிலும் தெளிவற்ற அல்லது முறையற்ற தன்மைகளைக் காண முடிந்தது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த எனது நண்பரும் பிரபலமான முக்கியமான  சிங்கள இயக்குநருமான  ஒருவர், அத் திரைப்படம் தொடர்பிலான அதிருப்தியை நிகழ்வின் முடிவில் என்னிடம் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தினார். உங்களைப்  போன்ற ஈழத்தவர்களால் தான், சரியான முறையில் மிகவும் அழுத்தமாக ஈழத்தமிழர் சார்ந்த திரைப்படங்களை முன்வைக்கமுடியுமென்றும் அதற்காக முயலுமாறும் அவர் என்னிடம் கூறினார்.

பிரசன்ன விதானகே இலங்கையின் முக்கியமான அரசியல் திரைப்பட இயக்குனராக அதிகம் அறியப்படுகிறார். 'புரஹந்த களுவர', 'இர மதியம', 'ஒப நதுவ ஒப எக்க' போன்ற அவரது திரைப்படங்கள் இலங்கையின் சிங்கள தமிழ் இன  முரண்பாட்டின், போரின்  விளைவுகளைப் பிரதானமாகவும்   வெவ்வேறு தொனிகளிலும் வெளிப்படுத்துபவை. அவை, பல்வேறு நெருக்கடிகள் மிகுந்த சமூகங்களில் சிக்குண்டு உழலும் மனிதர்கள் குறித்த கலையாக்கங்களாகத் திகழ்பவை.


 பிரசன்னவின் படைப்புலகமானது, பெரும்பாலும் மக்கள் விரோத அதிகார மையங்களுக்கு எதிரானதாகவோ, பாதிக்கப்படுகின்ற சாதாரண மக்களை வெளிப்படுத்துவதாகவோ காணப்படுகிறது. அவரது திரைப்படங்கள், இலங்கையில் தொடர்ச்சியாக  அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றன.  தனது திரைப்படங்களை முன்னிறுத்துவதில், அரசியல் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் மிகுந்த நெருக்கடிகளை சந்தித்து வருபவர் பிரசன்ன விதானகே. தனது படைப்புகள் தனது சொந்த நாட்டில் தடை செய்யப்படுகிறபோது அதற்கு எதிராகப்  போராடி, தனது படைப்புகளை நிலைநாட்ட முயல்பவர் அவர்.


 'புரஹந்த களுவர' திரைப்படத்தைத் தொடர்ந்து, 'ஒப நதுவ ஒப எக்க' திரைப்படம் கூட இலங்கையில் வெளியிடப்படுவதில் ஆரம்பத்தில் அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்தது. அதற்காக அவர் அதிகம் போராடவேண்டியிருந்தது. அதன்  பின்னராக இலங்கையின்   நீதித்துறையைக்  கேள்விக்குட்படுத்தும் வகையில் அவர் உருவாக்கிய Silence in the Courts (உசாவிய நிகண்டய்) என்ற புனைவு சாராப்படம் கூட அண்மையில் சட்ட ரீதியில் நெருக்கடிக்குள்ளானது. அதற்காக அவர் சட்ட ரீதியில் போராட நேர்ந்தது.

பிரசன்னவின் 'ஒப நதுவ ஒப எக்க' (With You Without You - பிறகு) திரைப்படம் குறித்து, சுருக்கமாகவும் சற்று ஆழமாகவும் இனிப் பார்க்கலாம்.    

'ஒப நதுவ ஒப எக்க' (With You Without You - பிறகு) என்ற பிரசன்னவின் அண்மைக்காலத் திரைப்படமானது, அவரது ஏனைய சில படங்களைப் போல, உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு, சில விருதுகளையும் பெற்றுவிட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளும் சிக்குண்டது. இத் திரைப்படத்துடனான பிரசன்னவின் பயணம் இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தாஸ்தயேவ்ஸ்கியின் ஒரு கதையினை (A Gentle Creature) அடிப்படையாகக் கொண்டு, போருக்குப் பின்னரான இலங்கையின் சமகாலத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இதன் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இலங்கையில், முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்திற்குப் பின்னராக வெளிவந்துள்ள படைப்புக்களில் மிகவும் முக்கியமான, கவனிக்கப்படவேண்டிய, விவாதிக்கப்படவேண்டிய படைப்பாக இது இருக்கிறது.


பிரதான கதாபாத்திரமான செல்வி, போரினால் பாதிக்கப்பட்ட  தமிழ்ப் பிரதேசத்தைச் சேர்ந்தவராகவும், அவளது கணவனான சரத்சிறி, முன்னாள் சிங்களப் படையினனாகவும்  திரைக்கதையில் இடம்பெறுவது, அதன் பிரதான முரண்பாட்டுக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது. இந்த இரண்டு பாத்திர வார்ப்புக்களின் தன்மைகளும், தமிழ் மற்றும் சிங்களக் கதாபாத்திரங்களுக்கு இடையிலான முரண்களின் விளைவாக தமிழ் கதாபாத்திரம் தற்கொலை செய்து கொள்வது போல அமைவதும், இத் திரைப்படம் குறித்த எதிர்மறையான சில விமர்சனங்களுக்குக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.

இந்தத் திரைப்படம் குறித்து, பல்வேறு கருத்தியல் நிலைகள் சார்ந்து, பலதரப்பட்ட கேள்விகளை முன்வைக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. இத் திரைப்படத்தின் திரைக்கதையமைப்பும் பாத்திர உருவாக்கங்களும் யதார்த்த தளத்தில், போருக்குப் பின்னரான சமகாலப் பின்னணியுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. யதார்த்த தளத்திலான உருவாக்கமானது எப்போதும் பல்வேறு நிலைகளிலும்  துல்லியத்  தன்மையினைக் கோரி நிற்கும். அதுமட்டுமல்ல, அத்தகைய யதார்த்த தளத்திலான உருவாக்கமானது நேரடியான அல்லது மேலோட்டமான அர்த்த பரிமாணத்தில் புரிந்துகொள்ளப்படக்கூடிய சாத்தியங்களை அதிகம் கொண்டிருக்கும். இத்தகைய பின்னணியுடன் நோக்கும் போது, செல்வி என்கிற கதாபாத்திர உருவாக்கத்தில் போதாமைகள், தெளிவற்ற தன்மைகள் இருப்பதாக உணரப்பட்டிருக்கிறது. தனக்குக் கணவனாக வாய்த்தவன், முன்னர் சிறீலங்கா இராணுவத்தில் இருந்தவன் என்பதை அறிந்த பிறகு, செல்வி அடையும் துயரும் வெளிப்படுத்தும் எதிர்ப்பும் இயல்பானவையாக பொருத்தமானவையாக இருந்தாலும், அவள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் செல்வது, துருத்தலாகவே உணரப்பட்டிருக்கிறது. வலிந்து புனையப்பட்ட முடிவாகவே இதனை அணுக முடிகிறது. செல்வி என்கிற கதாபாத்திரம் கொல்லப்பட்டிருக்கவேண்டிய அவசியமில்லை. இணங்கி வாழ்வது சாத்தியமில்லை என்ற நிலையில், பிரிந்து செல்வதாகவோ கூட அமைக்கப்பட்டிருக்க முடியும். அந்தக் கதாபாத்திரமானது, கூடிய  அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு கொண்டதாகக் காட்டப்படவில்லை என்பதுவும் இந்த இடத்தில் கவனத்திற்குரியது. செல்வி, புறச்சூழ்நிலைகளின் நெருக்கடியினால் தான் சரத்சிறியை திருமணம் செய்துகொள்ள நேர்கிறது. ஆரம்பத்தில் அவன் சிங்கள இனத்தவனாக இருப்பது அவளுக்குப் பிரச்சினையாக இருப்பதில்லை. அவன், சிறீலங்கா இராணுவத்தில் இருந்தவன் என்பதை அறிந்த பிறகுதான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முரண்பாடுகளோடும் மனக்குழப்பத்தோடும் குற்ற உணர்வோடும்  தனிமையில் உழலும் செல்வியின் முதிர்ச்சியற்ற முடிவாகவே அவளது தற்கொலையினைப் புரிந்துகொள்ள முடிகிறது.     


சிங்களக் கலப்பற்ற தமிழ் சூழலில் இருந்து வந்த செல்வி, மிகவும் குறுகிய காலத்தில் சரளமாக சிங்களம் பேசுவது போல, சிங்களத்திலேயே  விவாதிக்கக் கூடியதாக இருப்பது, சமகால யதார்த்த மீறலாகத் தோன்றுகிறது. அவளுக்கு கணவனோடு ஏற்படுகின்ற முரண்களோடு, மொழி ரீதியில் இருந்திருக்கக் கூடிய முரண்களை மிகவும் நுட்பமாக இத் திரைப்படத்தில் கையாண்டிருக்க முடியும். அத்தகைய வாய்ப்புக்களை இயக்குநர் தவற விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது. செல்வியும் அவளது வீட்டில் வேலை செய்யும் தமிழரான லட்சுமியும் ஊடாடக் கூடிய, உரையாடக் கூடிய  வாய்ப்புக்கள்  அதிகம் இருந்தும் அத்தகைய வாய்ப்புக்கள் பயன்படுத்தப்படவில்லை. காமினியும் சரத்சிறியும் உரையாடும் ஒரு  காட்சியில், 'கொட்டி' என்று சிங்களத்தில் காமினி  சொல்லும்போது  Tamil Tiger terrorist என்று ஆங்கில உப தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, சரத்சிறியும் செல்வியும் உரையாடும் ஒரு  காட்சியில் 'கொட்டி' என்று சிங்களத்தில் சரத்சிறி சொல்லும்போதும், திரும்பவும் செல்வி அப்படிச் சொல்லும்போதும் terrorist என்றே  ஆங்கில உப தலைப்புக்கள்  கொடுக்கப்பட்டிருக்கின்றன. (சிங்களத்தில் 'ரஸ்தவாதி' என்று குறிப்பிடப்பட்டிருந்தால் 'டெரரிஸ்ட்' என்கிற ஆங்கில மொழியாக்கம் பொருத்தமாக இருந்திருக்கும். 'கொட்டி' என்று வரும் இடங்களில் Tiger அல்லது Tigers அல்லது L.T.T.E என்றுதான் வந்திருக்க வேண்டும்.) இத்தகைய நுட்பமான தவறுகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை, ஆபத்தானவை.

இலங்கையின் இன முரண்பாட்டு அரசியல்  மற்றும் சமூக வரலாற்றுப் பின்னணியில் பார்க்கும்போது, இத் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களின் உருவாக்கத்தில் (செல்வி, சரத்சிறி) துல்லியத்தன்மை குறைந்திருப்பதாகவோ அல்லது போதாமைகள் கொண்டிருப்பதாகவோ உணரமுடிகிறது. இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அந்த இரு பாத்திரங்களினதும்  அசைவியக்கமானது நெகிழ்வானதாகவும் இயல்பானதாகவும் கூடி, இத் திரைப்படத்தின் கலையாக்கத்துக்குப் பெரிதும் துணை நிற்கின்றன. துயர் படர்த்தும் உள்ளார்ந்த நேசமும் இரண்டு பிராதன பாத்திரங்களினதும் குற்ற உணர்வுகளும் முரண்களுமே இத் திரைப்படத்தின் அடிநாதமாக உள்ளோடுகின்றன.



இத் திரைப்படமானது  நுட்பமான காட்சியமைப்புக்களையும் உரையாடல்களையும் கொண்டிருக்கிறது. திரைக்கதையமைப்பில் இருண்மையான பகுதிகள், அல்லது  மேலும் துலக்கம் பெற்றிருக்கவேண்டிய இடங்கள் உள்ளன. தமிழ், சிங்கள சமூகத்தினர் மத்தியில், சர்வதேச ரீதியிலான பார்வையாளர்கள் மத்தியில் குழப்பமற்ற புரிதலையும் தெளிவையும் ஏற்படுத்தும் வகையில் திரைக்கதையினை மேலும் செம்மைப்படுத்தியிருக்க முடியும். முக்கியமாக, ஒளிப்பதிவாளரான மகிந்தபாலவும் படத்தொகுப்பாளரான சிறீகர் பிரசாத்தும் தமது சிறப்பான பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவில் சில இடங்களில், சட்டக ஒருங்கிணைப்புக்களில் (Frame Composition) மேலும் கவனம் செலுத்தியிருக்கக்கூடிய இடங்களை இனங்காண முடிகிறது. எது எப்படியிருந்தாலும் இப்போதிருக்கும் நிலையில், இது மிகவும் முக்கியமானதொரு படைப்பு முயற்சியாகும்.

கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தும் ஒரு திரைப்படத்தில் கதாபாத்திரங்களை புரிந்து கொள்வதுதான்  எல்லாவகையான புரிதல்களினதும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது. இத் திரைப்படமானது, தமிழர்கள்  மற்றும் சிங்களவர்கள் மத்தியில் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கும் வேற்று இனத்தவர்களால் அல்லது வேற்று மொழி சார்ந்தவர்களால்  சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கும் உதவும் வகையிலான நிலவியல் சார்ந்த, ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்ட அரசியல் சார்ந்த, இலங்கை இன முரண்பாட்டின் அடிப்படைகள் சார்ந்த, தெளிவான கோடி காட்டல்களை  வலுவாகக் கொண்டிருக்கவில்லையென்று படுகிறது. இத் திரைப்படம் இலங்கையின் இன முரண்பாட்டின், போரின் கதையாடலாகத் தன்னை இனங்காட்டிக்கொள்வதால் அவை சார்ந்து நோக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாதது. ஒட்டுமொத்தமாக, இத்திரைப்படத்தில் உள்ளோடும் கருத்தியல் மற்றும் அழகியல் சார்  தொனிப்புக்கள்  குறித்தும், இதன் பின் இயங்கியிருக்கக்கூடிய நுண்ணரசியல் சார் விடையங்கள் குறித்தும் ஆழமாக, விரிவாக, மிகுந்த பொறுப்புணர்வோடு  உரையாட வேண்டியது அவசியமாகும். முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில் வெற்றிபெற்றதாக மமதைப்படும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் பிரதிநிதியாக இயக்குநரை அடையாளப்படுத்திக்கொண்டு இத் திரைப்படத்தினை  அணுக முயல்வது விபரீதமானது. சரத்சிறி கதாபாத்திரமானது, சிங்கள பௌத்த சமூகத்தவர்கள் மத்தியில் குற்ற உணர்வினைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக உணர முடிகிறது. புத்தரை வழிபடும் சரத்சிறி, தனது கடந்தகால இராணுவ வாழ்வின் விபரீதங்களை உணர்ந்து குற்ற உணர்வில் உழல்கிறான். கடந்தகால வாழ்விலிருந்து மீள முயன்றாலும் கூட, ஒரு கைத்துப்பாக்கியை ஒளித்து வைத்திருக்கிறான். இத் திரைப்படத்தில் உலவும் கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ள விழைவதனூடாகவே, இதிலிருந்து வெளிப்படக்கூடிய கருத்தியல் முரண்களையும் நுண்ணரசியலையும் அழகியலையும் கண்டடைய முடியுமென்று தோன்றுகிறது.

கருத்துச் சுதந்திரத்துக்கு இலங்கையில் தொடர்ந்தும் நிலவுகிற மட்டுப்பாடுகளுக்குள்ளிருந்து இத் திரைப்படத்தினை இயக்குநர் சாத்தியப்படுத்தியிருப்பது, பாராட்டுக்குரியதும் வரவேற்புக்குரியதுமாகும். ஒரு வகையில் இதுவொரு சவாலான முயற்சியே. நெருக்கடிகளும் முரண்களும் நிறைந்த சிங்கள சமூகத்தின் மத்தியில், ஒரு சிங்களக் கலைஞராக இருந்துகொண்டு, தமிழர்கள் மீது சிங்களத்தரப்பால் நிகழ்த்தப்பட்ட அநீதிகள் குறித்த பிரக்ஞை பூர்வமான பதிவினை, With You Without You திரைப்படம் மூலமாக, இயன்றவரை தன்னளவில் நேர்மையாக, நண்பர்  பிரசன்ன விதானகே நிகழ்த்தியிருக்கிறார் என்பதுதான் முக்கியமான சமகால முன்மாதிரியாகிறது.

2016-12-04 அன்று, சுவிற்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் நடைபெற்ற 'திரையிடலும் உரையாடலும்' நிகழ்வில்  With You Without You ('ஒப நதுவ ஒப எக்க' - 'பிறகு') திரைப்படம் திரையிடப்பட்ட போது, நிகழ்த்தப்பட்ட உரை இது.

 'கரவொலி ' என்னும் சினமாவிற்கான இணைய இதழில் பதிவானது.

Making of 'With You Without You'

https://youtu.be/TqjAlffAEVA

Thursday, July 6, 2017

முத்தம் + கொண்டாட்டம்.

இன்று (July 6) சர்வதேச முத்த தினமாம். (International Kissing Day) காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற பல தினங்கள் நடைமுறையில் உள்ளன. பெரும்பாலும் உலக மக்கள் 'எல்லாவற்றுக்கும்' அடையாள தினங்கள் வைத்துவிடுகிறார்கள். அவற்றைக் கொண்டாடியும் முடிக்கிறார்கள். (சரி, பிழை, தேவை, தேவையில்லை என்பவற்றுக்கும் அப்பால்)

இத்தகைய தினங்கள், மனித வாழ்வின் அடிப்படையான அன்றாடத் தேவைகளை, வெகுஜன மட்டத்தில் செயற்கையான அல்லது போலியான அணுகுமுறைகளுக்கு உட்படுத்தி விடுகின்றனவா என்கிற அவதானிப்பு அவசியமானது. வருடத்தில் ஒரு நாள்தான் 'காதலிக்க' வேண்டுமா?

தமிழ்ச் சூழலில் 'முத்தம்', 'பாலியல் உறவு' போன்றவை பெரும்பாலும் பகிரங்கமாகப் பேசப்படுவதில்லை, புரிந்துணர்வோடு அணுகப்படுவதுமில்லை. சந்தர்ப்பங்களுக்கு அமைவாக, பண்பாட்டு வரையறைகள் மற்றும் சரி பிழைகளுக்கு அப்பால், 'பாலியல் வேட்கை' சார்ந்த உள் நோக்கம் முத்தத்துக்கு இருக்கவும் கூடும். 'பாலியல் வேட்கை' இயற்கையின் ஆதார சக்திகளில் ஒன்று. அதை முறைப்படுத்துவதும் புரிந்துகொள்வதும் மானுடத் தேவைகளின் அவசியங்களாகும்.

'அன்பை', 'காதலை' கொடுப்பதிலும் கொள்ளலிலும் பலவீனமான நிலையில் நம் சமூகம் இருக்கிறதா? கட்டியணைத்தல், கை குலுக்குதல், முத்தமிடுதல் போன்ற 'இணக்கத்தின்' உடல்வழிச் 'சமிக்ஞைகள்' நம் சமூகத்தில் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகின்றன? அவை எத்தகைய 'நோக்கங்களுடன்' பிரயோகிக்கப்படுகின்றன?

முத்தம் பற்றிய சில பதிவுகளைப் பார்க்க, ஏகப்பட்ட முத்த அனுபவங்கள் மின்னிக்கொண்டு முன்னுக்கு வருகின்றன. முத்தங்களில் பல வகை இருக்கு. யாரால், யாருக்கு, எச்சந்தர்ப்பத்தில் முத்தமிடப்படுகிறது என்பது அவதானிக்கப்படுகையில், முத்தத்தின் 'வேறுபாடுகளும்' 'வீரியமும்' 'தேவையும்' புலப்படக்கூடும்.

உண்மையில், முத்தம் கொண்டாட்டத்துக்குரியது தான். முத்தமானது, ஆரம்ப நிலையில் அல்லது முதல் நிலையில் எப்போதும் அன்பின் திறவுகோலாகவே இருந்துவருகிறது. சர்வதேச திரைப்படங்களில், நேரில் பார்த்த முத்தங்கள் பற்றி விரிவாகப் பதிவு செய்ய வேண்டும்.


தமிழ் சினமாவில் பார்க்கப் போனால், கவனப்படுத்தக் கூடிய 'கமலஹாசனின் முத்தக் காட்சிகள்' அதிகம் உள்ளதை அவதானிக்க முடியும். 'மகாநதி' படத்தில், நெருக்கடியான ஒரு தருணத்தில் சுகன்யா வின் இதழ்களில் கமலஹாசன் பதிக்கும் 'திடீர் முத்தம்' உடனடியாக நினைவுக்கு வருகிறது...

என்னோடு 'முரண்படுபவர்கள்' யாராக இருந்தாலும், அவர்களை அப்படியே இழுத்து வைத்து 'கிஸ்' அடித்துவிடலாமா என்று இப்போது தோன்றுகிறது...😉
2017-07-06