Thursday, February 21, 2019

விசேட கவனத்துடன் வரவேற்கப்படவேண்டிய முயற்சி


தமிழின் குறிப்பிடத்தகுந்த ஒளிப்பதிவாளராகத் தன்னை நிலைநிறுத்தியிருந்தவர் திரு. செழியன். 'பரதேசி' என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த காலத்தில், அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அப்போதே, திரு. பிரசன்ன விதானகே போன்ற இயக்குநர்களுடன் தொடர்பில் இருந்தவர். சினமா சார்ந்த அவரது கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். தமிழின் மிக முக்கியமான சினமா ஆளுமையாக வருவார் என்று அப்போதே நினைத்திருந்தேன். இப்போது To Let என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தமிழின் மிக முக்கியமான திரைப்படமாக அது இருக்கும் என்று தோன்றுகிறது. அதைப் பார்த்துவிட்டுத்தான் அதுபற்றி எழுதவேண்டும்.

உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, பல விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ள To Let திரைப்படமானது, பொதுப்பார்வைக்காகத் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது. தமிழ்ச் சூழலில், இத்தகைய முயற்சிகள் விசேட கவனத்துடன் வரவேற்கப்படவேண்டியவை. இரண்டு நாட்கள் செழியனின் பல்வேறு புதிய நேர்காணல்கள், பதிவுகள் போன்றவற்றைப் பார்த்தேன். என்ன செய்ய வேண்டும் என்பதில், செழியன் மிகுந்த தெளிவுடன் இருக்கிறார். தீர்க்கமாகவும் நிதானமாகவும் உரையாடுகிறார்.

திரு. மகேந்திரன், திரு.பாலுமகேந்திரா போன்ற தமிழ் சினமாவின் மிக முக்கியமான ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகவும் நேரில் கலந்துரையாடவும் முடிந்திருக்கிறது. அத்தகையவர்களின் மனக்குமுறல்களையும் போதாமைகளையும் அறிந்திருக்கிறேன். அத்தகைய சினமா ஆளுமைகளால், அடைய முடியாமற் போய்விட்ட சிகரங்களை நோக்கி, செழியன் போன்றவர்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும். To Let திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

2019-02-21
அமரதாஸ்

''Fire zone of Srilanka: Tears of Tamils'' - Photo exhibition of Amarathaas (Goa)


இந்தியாவின் கோவா மாநிலத்தில், கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி, 2017-12-14 முதல் தொடர்ச்சியாக ஒரு வார காலம் நிகழ்த்தப்பட்டது (''Fire zone of Srilanka: Tears of Tamils -
Photo exhibition of Amarathaas'').

'Serendipity arts festival' என்னும் கலைசார் பெரு நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஒளிப்படக் காட்சி நிகழ்வு அமைந்திருந்தது. இதில், இலங்கையின் இறுதிப் போர்க்காலத்திலும் (last war period) போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் (post war period) பதிவாகியிருந்த ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியாவின் பிரபலமான கலைஞர்கள் மற்றும் அரசியல் வாதிகள் உட்படப்  பலரும் கலந்துகொண்டு ஒளிப்படங்களைப் பார்வையிட்டு, அவை தொடர்பில் கலந்துரையாடினர்.

சுவிற்சர்லாந்து  நாட்டில் இருந்து கோவா சென்றிருந்த அமரதாஸ், ஒளிப்படக் காட்சி நிகழ்வினை நேரடியாக நெறிப்படுத்தியிருந்தார். பல மட்டங்களிலான சந்திப்புகளை நிகழ்த்தியிருந்தார். கோவா வில் இருந்து கேரளா மாநிலத்திற்கும் பின்னர் தமிழகத்திற்கும் பயணித்து, நெருக்கடிகள் நிறைந்த ஈழத்தமிழரின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு, சுவிஸ் திரும்பியிருந்தார்.









Wednesday, February 20, 2019

''Tears of Tamils - A journey through war zones of Sri Lanka''- Photo Exhibition in Switzerland (University of Zurich) - Photographs by Amarathaas



''Tears of Tamils - A journey through war zones of Sri Lanka''
Photo Exhibition in Switzerland (University of Zurich)
Photographs by Amarathaas (Amarathaas Artist)

07.05.2018 - 18.05.2018 Lichthof Zentrum Universität Zürich (Atrium Center University of Zurich)

21.05.2018 - 31.05.2018 Lichthof Irchel Universität Zürich (Atrium Irchel University of Zurich)

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் (இறுதி யுத்த காலம்), கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களால் பதிவாக்கப்பட்டிருந்த ஒளிப்படங்களின் காட்சிப்படுத்தல், சுவிஸ் நாட்டிலுள்ள சூரிச் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டது. (''Tears of Tamils - A journey through war zones of Sri Lanka'')

07.05.2018 முதல் 31.05.2018 வரை (தொடர்ச்சியாக 4 வார காலம்), சூரிச் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஒளிப்படக் காட்சி நிகழ்வில், சுவிஸ் நாட்டவர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.
















Tuesday, February 19, 2019

Tears of Tamils (Photo exhibition of Amarathaas)



''Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones''

ஈழத்தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில், 2018-12-16 அன்று சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி நடைபெற்றது ('Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones').



இறுதி யுத்த காலத்தில், சுயாதீன ஊடகராக இருந்து பதிவுசெய்திருந்த ஒளிப்படங்களைத் திரையிட்டு, அவை தொடர்பிலும் இலங்கை நிலவரங்கள் தொடர்பிலும் அமரதாஸ் உரையாற்றினார்.

சுவிஸ் நாட்டவர்கள் உட்படப் பலர் இந்த ஒளிப்படக் காட்சி  நிகழ்வில் கலந்துகொண்டனர்.







Genocide on Tamils - தமிழர்கள் மீதான இனப்படுகொலை


தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில், சில நிகழ்வுகள் நேற்று (2018-12-16) நடைபெற்றன. மனித உரிமைகள் சார் செயற்பாடுகளிலும் கலைச் செயற்பாடுகளிலும் ஊடகச் செயற்பாடுகளிலும் ஈடுபடும் சிலரது கூட்டு முயற்சிகளால், நிகழ்வுகள் அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே மண்டபத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றன.

மண்டபத்தின் ஒரு பகுதியில், சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி நடைபெற்றது ('Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones'). இன்னொரு புறத்தில் தமிழக ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியக் காட்சி நடைபெற்றது. 





'Sri Lanka's Killing Fields' என்ற ஆவணப்படமும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தொகுக்கப்பட்டிருந்த ஆவணக்காட்சிகளும் வேறு சில ஆவணக்காட்சிகளும் திரையிடப்பட்டன.

இறுதி யுத்த காலத்தில், சுயாதீன ஊடகராக இருந்து பதிவுசெய்திருந்த ஒளிப்படங்களைத் திரையிட்டு, அவை தொடர்பிலும் இலங்கை நிலவரங்கள் தொடர்பிலும் அமரதாஸ் உரையாற்றினார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான 'பொவி' என்பவர், இலங்கை நிலவரங்கள் தொடர்பிலான தனது பார்வைகளை உரை மூலம் வெளிப்படுத்தினார். இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டுவந்த சிலர், சாட்சிய உரைகளை நிகழ்த்தினர். 







தமிழர்களின் பிரச்சினைகளை சுவிஸ் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் நிகழ்வுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தேவையான இடங்களில், ஜெர்மன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து நிகழ்வுகளிலும் தமிழர்கள் உட்பட சுவிஸ் நாட்டவர்கள் பலரும் கலந்துகொண்டனர். கூடியிருந்து உரையாடி இரவு உணவை அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.






2018-12-17

Wednesday, February 13, 2019

போர்க்குற்றம் + இனப்படுகொலை




ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகங்களின் மத்தியில், மனித உரிமை சார் விடயங்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஒருவரை, 'தனிப்பட்ட முறையில்' அண்மையில் சந்திக்க நேர்ந்தது. (ஒரு மொழிபெயர்ப்பாளரின் துணையுடன்) சிறிலங்கா அரசினால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு நீதிகோரி நிற்கும் ஈழத் தமிழினத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு முக்கியமான நிகழ்வு. உரையாடலின் பெரும் பகுதி, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றியதாக இருந்தது. 'போர்க்குற்றங்கள்' (war crimes) என்ற பதத்தினையே அவர் தொடர்ந்து உபயோகித்தார். உண்மையில் இலங்கையில் நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இலங்கையில், பல போர்க்குற்றங்களை உள்ளடக்கிய இனப்படுகொலைக் குற்றங்களும் நடந்திருக்கின்றமையினை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தேன். ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலை முன்னெடுப்புக்கள், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காலத்தில் மட்டும் நடக்கவில்லையென்றும் அத்தகைய முன்னெடுப்புக்களுக்கு, பல்பரிமாணத்தன்மை கொண்ட நீண்டகால வரலாறு உள்ளது பற்றியும் குறிப்பிட்டேன். (இனப்படுகொலை பற்றிய விடயத்தில், இனப்படுகொலைக்கான உள் நோக்கம் -motivation- மிகவும் முக்கியமானதாக சர்வதேச ரீதியில் நம்பப்படுகிறது. தவிரவும், வெறும் கொலைகள் மட்டும் இனப்படுகொலை என்னும் அம்சத்துக்குள் அவதானிக்கப்படுவதில்லை.) தனிப்பட்ட முறையில், தன்னால் அதைப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறினார். பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கமையவும் 'உள் நோக்கங்களோடும்' இயங்கும் ஐ.நா போன்ற சர்வதேச சமூகங்களின் மத்தியில் இத்தகைய 'புரிதலை' ஏற்படுத்துவதில் இருக்கக்கூடிய 'சிக்கல்கள்' சாதாரணமானவையல்ல. அந்த அடிப்படையில் சட்ட ரீதியிலும் புலமைத்துவ ரீதியிலும் ராஜதந்திர ரீதியிலும் ஈழத்தமிழினம் வழங்கவேண்டிய 'கூட்டு உழைப்பு' அதிகமாக இருக்க வேண்டும்.

''சுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் அடிப்படை உரிமை என்று ஐ.நா நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைக் கூறுகளாக ஐ.நா. வரையறுக்கின்ற அத்தனைக் கூறுகளையும் கொண்டது தமிழினம். அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இனப்படுகொலைக்கான நீதியான பரிகாரமே, இலங்கை இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வுக்கு வழிவகுக்க முடியும். நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இனப்படுகொலை என்று நிரூபிக்கக்கூடிய வகையில் கண்மூடித்தனமான மோசமான குற்றச் செயல்களும் நடந்திருக்கின்றன. போர்க்குற்றங்கள் எனப்படுபவை வேறு, இனப்படுகொலைக் குற்றங்கள் எனப்படுபவை வேறு.'' என்று 2005 ஒக்டோபர் மாதத்தில் நான் நிகழ்த்தியிருந்த 'ஐ.நா. உரையில்' தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

''இலங்கையில் நடந்தவை போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, தமிழின அழிப்பும் தான் என்பது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் போதுதான், தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட தனியான இனமென்பதும், இன விடுதலைக்கான நீண்ட கால விடுதலைப் போராட்ட நியாயங்களும், தியாகங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அமைய முடியும்.'' என்று, மேலும் அதில் குறிப்பிட்டிருக்கிறேன்.

எனது போர்க்காலப் படங்கள் சிலவற்றை அவருக்காகக் காட்சிப்படுத்திவிட்டு, அவருடனான எனது உரையாடலின் ஆரம்பம், பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது.

யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, மக்கள் மத்தியிலிருந்து தன்னிச்சையாகவும் தீவிரமாகவும் படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கட்டத்தில், என்னால் எடுக்கப்படும் படங்களால் அப்போது என்ன பயன் என்ற கருத்திலான 'ஆதங்கத்தினை' வேதனையோடு என்முன்னே ஒரு பெண் கொட்டித் தீர்த்தார். அப்போது அவருக்கு ஏதும் சொல்லமுடியவில்லை. இப்போதும் அந்தப் 'பெண்ணின் குரல்' என்னுள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. என் இனத்துச் சனங்களின் வலியின் சாட்சியாக நான் எப்போதும் இருக்க வேண்டும் என்னும் உந்துதல் அப்போது தீவிரமடைந்தது. யாராலும் நிறுத்தப்படாதிருந்த மோசமான யுத்தத்தின் விளைவுகளைப் படங்களாக்கி, சர்வதேச மட்டத்தில் ஈழத் தமிழினம் சார் ஆவணங்களாக நிலைநிறுத்த வேண்டும் என்னும் 'ஓர்மம்' வளர்ந்தது. பல தரப்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலும் பல்வேறு வழிகளில் எனது படங்களை வெளியிடத் தொடங்கினேன்.

அவருடனான எனது உரையாடலின் முடிவு, பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது.

ஆர்மேனியர்கள் மீதான துருக்கியின் 'இனப்படுகொலை' முன்னெடுப்பு, சர்வதேச அளவில் 'உறுதி' செய்யப்படுவதற்கு இடையில் வீணாக நூறு ஆண்டுகள் வரையில் கடந்துபோயிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலைக் குற்றங்களும் அவற்றுக்கான 'நீதியும்' சர்வதேச அளவில் 'உறுதி' செய்யப்படுவதற்காக, இவ்வளவு நீண்ட காலத்துக்குத் தமிழினம் காத்திருக்க வேண்டுமா? அப்படியானால் சிறிலங்காவின் 'இனப்படுகொலை' அம்சங்களைப் பதிவு செய்து, வாழும் சாட்சியாக இருக்கும் நான், அப்போது நிச்சயமாக உயிரோடு இருக்க மாட்டேன். அப்போதும் எனது இனப்படுகொலை சார் ஆவணங்கள், வலிமையான பயன்வீச்சுக்களை நிகழ்த்தும் அளவிற்கு, நான் இப்போதிருந்தே 'உரிய' இடங்களில், பொதுவெளியில் அவற்றை நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது.

2017-06-15
அமரதாஸ்