Thursday, February 21, 2019

விசேட கவனத்துடன் வரவேற்கப்படவேண்டிய முயற்சி


தமிழின் குறிப்பிடத்தகுந்த ஒளிப்பதிவாளராகத் தன்னை நிலைநிறுத்தியிருந்தவர் திரு. செழியன். 'பரதேசி' என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த காலத்தில், அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அப்போதே, திரு. பிரசன்ன விதானகே போன்ற இயக்குநர்களுடன் தொடர்பில் இருந்தவர். சினமா சார்ந்த அவரது கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். தமிழின் மிக முக்கியமான சினமா ஆளுமையாக வருவார் என்று அப்போதே நினைத்திருந்தேன். இப்போது To Let என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தமிழின் மிக முக்கியமான திரைப்படமாக அது இருக்கும் என்று தோன்றுகிறது. அதைப் பார்த்துவிட்டுத்தான் அதுபற்றி எழுதவேண்டும்.

உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, பல விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ள To Let திரைப்படமானது, பொதுப்பார்வைக்காகத் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது. தமிழ்ச் சூழலில், இத்தகைய முயற்சிகள் விசேட கவனத்துடன் வரவேற்கப்படவேண்டியவை. இரண்டு நாட்கள் செழியனின் பல்வேறு புதிய நேர்காணல்கள், பதிவுகள் போன்றவற்றைப் பார்த்தேன். என்ன செய்ய வேண்டும் என்பதில், செழியன் மிகுந்த தெளிவுடன் இருக்கிறார். தீர்க்கமாகவும் நிதானமாகவும் உரையாடுகிறார்.

திரு. மகேந்திரன், திரு.பாலுமகேந்திரா போன்ற தமிழ் சினமாவின் மிக முக்கியமான ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகவும் நேரில் கலந்துரையாடவும் முடிந்திருக்கிறது. அத்தகையவர்களின் மனக்குமுறல்களையும் போதாமைகளையும் அறிந்திருக்கிறேன். அத்தகைய சினமா ஆளுமைகளால், அடைய முடியாமற் போய்விட்ட சிகரங்களை நோக்கி, செழியன் போன்றவர்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும். To Let திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

2019-02-21
அமரதாஸ்

''Fire zone of Srilanka: Tears of Tamils'' - Photo exhibition of Amarathaas (Goa)


இந்தியாவின் கோவா மாநிலத்தில், கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி, 2017-12-14 முதல் தொடர்ச்சியாக ஒரு வார காலம் நிகழ்த்தப்பட்டது (''Fire zone of Srilanka: Tears of Tamils -
Photo exhibition of Amarathaas'').

'Serendipity arts festival' என்னும் கலைசார் பெரு நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஒளிப்படக் காட்சி நிகழ்வு அமைந்திருந்தது. இதில், இலங்கையின் இறுதிப் போர்க்காலத்திலும் (last war period) போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் (post war period) பதிவாகியிருந்த ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியாவின் பிரபலமான கலைஞர்கள் மற்றும் அரசியல் வாதிகள் உட்படப்  பலரும் கலந்துகொண்டு ஒளிப்படங்களைப் பார்வையிட்டு, அவை தொடர்பில் கலந்துரையாடினர்.

சுவிற்சர்லாந்து  நாட்டில் இருந்து கோவா சென்றிருந்த அமரதாஸ், ஒளிப்படக் காட்சி நிகழ்வினை நேரடியாக நெறிப்படுத்தியிருந்தார். பல மட்டங்களிலான சந்திப்புகளை நிகழ்த்தியிருந்தார். கோவா வில் இருந்து கேரளா மாநிலத்திற்கும் பின்னர் தமிழகத்திற்கும் பயணித்து, நெருக்கடிகள் நிறைந்த ஈழத்தமிழரின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு, சுவிஸ் திரும்பியிருந்தார்.