பாத்திரங்களின் உளவியலை அல்லது மன நிலைகளை இசையிலும் காட்சிகளிலும் இயல்பாக, அழகியலாக வெளிப்படுத்த முயன்ற திரை இசைப் பாடல்களில், 'சின்னப் பொண்ணு சேலை...' என்னும் பாடல் குறிப்பிடத் தகுந்தது. 'மலையூர் மம்பட்டியான்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.
பாடலின் காட்சியமைப்புகளில் பாத்திரங்களாக வரும் தியாகராஜனும் சரிதாவும் வாயசைத்துப் பாடவில்லை, ஆடவுமில்லை. அவற்றுக்கான அவசியமிருக்கவில்லை. ஒரு பாடலை எப்படிப் பொருத்தமாகக் காட்சிப்படுத்தித் திரைப்படத்துடன் ஒட்டவைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் பாடலைப் பரிந்துரைக்கலாம். இது ஒரு வகை உதாரணப் பரிந்துரை மட்டுமே.
மரத்தை அணைத்திருந்து பாதி முகம் காட்டி, காதலை ஒற்றைக் கண்ணில் கடத்த முயலும் சரிதாவின் நடிப்பும், அதை நெருக்கமாக அணுகி நகரும் கமெராவின் நுட்பமும் அழகியலாகப் பதிவாகியுள்ளன. இசைப் படிமங்கள் காட்சிப் படிமங்களுடன் இயைந்து சங்கமிக்கின்றன. வரிகளிலும் காட்சியமைப்புகளிலும் தொனிக்கும் சில செயற்கைத்தனங்கள் பெரிய உறுத்தலாகத் தோன்றவில்லை. இளையராஜாவின் எளிமையான இசையும் இயல்பான காட்சியமைப்புகளும் காதலின் பசுமையாக விரிகின்றன.
இரண்டாவது சரணத்தின் இறுதியில், 'அருகே நீ வா...' என்னும் வரிகளை ரகசியத் தொனியில் ஜானகி பாடுவதை, பாடல் முடிகையில் வெளிப்படும் அவரது 'சிணுங்கலான அழைப்பை' நுட்பமாக உற்று ரசிக்க முடியும்.
தெளிவான காட்சி மற்றும் நல்ல ஒலித்தரத்தில் இந்தப் பாடல் கிடைக்கவில்லை.
அமரதாஸ்
2018-10-03