சில கேரள நண்பர்களுடன் ஒரு வண்டியில் ஒளிப்படங்கள் எடுப்பதற்காகப் பயணித்துக்கொண்டிருந்த போது, கேரளாவின் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில் கம்பீரமாக நிற்கும் திரு. சே குவேரா வின் பெரிய அளவிலான படத்தைக் கண்டேன். (கேரளாவில், பல இடங்களில் சே குவேரா வின் படங்களைக் கண்டிருக்கிறேன்.) அந்த இடத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினேன்.
உண்மையான போராளியாக மட்டுமல்ல, கவிஞராகவும் ஒளிப்படக் கலைஞராகவும் சே குவேரா இருந்தார். எல்லோரது பிறப்பும் போல, அவரது பிறப்பும் சாதாரணமானது தான். பிற்காலத்தில், தன் வாழ்வை 'அர்த்தமுள்ளதாக' ஆக்கிக்கொண்டார்.
சேகுவேரா கம்பீரமாக நிற்கும் அந்தப் படம், சில இடங்களில் கிழிந்திருந்தது. அதுவும் கூட வித்தியாசமான அழகைக் கொடுப்பதாகத் தோன்றியது. சே குவேரா வின் பெரும்பாலான படங்கள், எப்போதும் ஈர்ப்புக்குரியவையாகவே இருக்கும். அந்தப் படத்தின் ஈர்ப்பிற்கான காரணங்கள் பற்றி, அந்த இடத்தில் நின்று யோசித்துக்கொண்டிருந்தேன். கேரளத் திரைத்துறையினர் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்த விவரணத் திரைப்பட இயக்குநரான நண்பர் ஒருவர், 'அவரைப் போல, உங்கள் கழுத்திலும் ஒரு கமெரா இருக்கிறது' என்று சொல்லிவிட்டு, சே குவேரா வின் அந்தப் படத்துக்கு அருகில் என்னை நிற்கவைத்து ஒளிப்படம் எடுத்தார். அந்த இடத்தில், நானும் என்னவோ சொல்லிவிட்டு எல்லோருடனும் சேர்ந்து சிரித்தேன்.
2018-06-14
அமரதாஸ்