Friday, September 8, 2017

'பொங்கியதே காதல் வெள்ளம்' அல்லது 'கண்ணுக்குள் நூறு நிலவா'...

'பொங்கியதே காதல் வெள்ளம்' அல்லது 'கண்ணுக்குள் நூறு நிலவா'...

- அமரதாஸ்
2017-09-08



'மண்ணுக்குள் வைரம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதில் இடம்பெற்ற ''பொங்கியதே காதல் வெள்ளம்...'', ''இதழோடு இதழ் சேரும் நேரம்...'' போன்ற பாடல்களால் கவனம் பெற்றவர் இசையமைப்பாளர் திரு. தேவேந்திரன். பின்னர், இயக்குநர் திரு. பாரதிராஜாவின் குறிப்பிடத்தகுந்த திரைப் பங்களிப்புகளில் ஒன்றான 'வேதம் புதிது' என்ற திரைப்படத்தில் தேவேந்திரனின் இசைப் பங்களிப்பு கவனிப்பிற்குரியதாக இருந்தது. அதில் இடம்பெற்றிருந்த ''கண்ணுக்குள் நூறு நிலவா...'' என்ற பாடல், அது வெளிவந்திருந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது.


''பொங்கியதே காதல் வெள்ளம்...'' மற்றும் ''கண்ணுக்குள் நூறு நிலவா...''ஆகிய பாடல்களுக்கிடையே இரண்டு முக்கியமான ஒற்றுமைகள் இருக்கும். முதலாவது காதல், இரண்டாவது மிருதங்கம். இரண்டு பாடல்களிலும் மகிழ்ச்சிகரமான மிருதங்க இசையை அனுபவிக்க முடியும். காதலின் மகிழ்ச்சியை, உக்கிரத்தை, புத்துணர்ச்சியை மிருதங்கத்தில் ஏற்றியிருக்கிறார் தேவேந்திரன். மிருதங்கத்தால் எனக்குப் பிடித்த பாடல்களில் இவையிரண்டும் முக்கியமானவை.


தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில், என்றைக்கும் நினைவுகூரத்தக்க சில பாடல்களை அவர் உருவாக்கியிருக்கிறார். ''பொங்கியதே காதல் வெள்ளம்...'', ''கண்ணுக்குள் நூறு நிலவா...'', ''இதழோடு இதழ் சேரும் நேரம்...'', ' போன்ற பாடல்களில் அவர் தனது இசை ஆளுமையைப் பதிவுசெய்திருக்கிறார். நல்லதொரு இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்த தேவேந்திரனுக்கு நல்லபடியான வாய்ப்புகள் அதிகம் அமையவில்லை என்பதும், அவர் அதிகம் 'கவனிக்கப்படவில்லை' என்பதும் வருத்தத்துக்குரியது.


''கண்ணுக்குள் நூறு நிலவா...''
https://youtu.be/o_umXE7vB_w

''பொங்கியதே காதல் வெள்ளம்...''
https://youtu.be/QojxewDQFmk

''இதழோடு இதழ் சேரும் நேரம்...''
https://youtu.be/QCcHXXDPkgc


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக ஆரம்ப காலத்தில் பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தேவேந்திரன். அப் பாடல்கள், ஈழத்தில் இந்திய ராணுவம் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் தமிழகத்தில் உருவாக்கப்பட்டவை. அத்தகைய சில பாடல்கள் இசையால் வளம்பெற்றவை, இசையாலேயே வசீகரிப்பவை, பல்வேறு அம்சங்களில் முக்கியத்துவம் கொண்டவை. (அவை, தனியான பதிவுக்குரியவை.) தேவேந்திரனுடனான இசை சார் அனுபவங்கள் பற்றி, அவருடன் இணைந்து பல பாடல்களை உருவாக்கிய கவிஞர் திரு. புதுவை இரத்தினதுரை என்னிடம் சொல்லியிருக்கிறார்.


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான பாடல்களின் உருவாக்கத்தில், தேவேந்திரனுக்குப் பிறகு இசையமைப்பாளர் திரு. கண்ணன் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்.