Friday, June 22, 2018

கொலையும் குரூர மனநிலையும்.


இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதில்லை. இந்த உலகமானது, குறிப்பிட்ட இனப் பிரிவினருக்கானதோ நிறப் பிரிவினருக்கானதோ வர்க்கப் பிரிவினருக்கானதோ மதப்பிரிவினருக்கானதோ ஏனைய பிரிவினருக்கானதோ மட்டுமானதில்லை என்பதை எல்லா மனிதர்களும் உணர வேண்டும்.

ஜீவகாருண்ணியம் எனப்படுவது, மனிதர்களிடம் இருக்க வேண்டியதும் மனிதாபிமானத்தை உள்ளடக்கியதுமாகும். ஒரு 'ஆபத்தான உயிரினம்' ஆபத்துக்குரிய தருணத்தில் கொல்லப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கக் கூடும். ஒரு கொலைக்கு, சில தவிர்க்க முடியாத காரணங்கள் இருக்கக் கூடும். எது எப்படியிருந்தாலும், ஒரு கொலையினைக் கொண்டாட்ட மனநிலையில் அணுகும் மனித மனநிலை மிகவும் வக்கிரமானது, ஆபத்தானது...

கிளிநொச்சியில் ஒரு சிறுத்தை கொலை செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கொலை, பாதுகாப்புக் காரணத்துக்கானதாக இருக்கலாம். அது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். அந்தக் கொலையானது, சட்ட ரீதியில் குற்றமாகக் கூட இருக்கலாம். அந்தக் குற்றத்தின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அந்தக் கொலை நடைபெற்ற சூழலில் நிலவிய 'கொண்டாட்ட மனநிலை' கண்டிக்கப்பட வேண்டியது. வெற்றிக் களிப்புடன் கூடிய வக்கிர மனநிலை அது. அங்கு பதிவாகியுள்ள ஒளிப்படங்களும் வீடியோ பதிவுகளும் மனிதர்கள் சிலரின் குரூரத்தை வெளிப்படுத்துகின்றன.

'இன விடுதலையின் பெயரால்', சொந்த இனத்திற்குள்ளேயே இயக்கங்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான படுகொலைகளை 'ஆதரிக்கிற' மனநிலை கொண்டவர்கள், இதையும் இலகுவில் கடந்து போய்விடுவார்களா? போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைக் குற்றங்களையும் 'கொண்டாட்ட மனநிலையில்' குரூரமாகச் செய்து முடித்த சிங்கள அரச தரப்பினருடன் இணங்கிப் போகிறவர்கள், எதையும் கடந்து போய்விடுவார்களா? வீட்டுக்குள் புகுந்துவிட்ட பாம்பு ஒன்றினை அடித்துக் கொன்றுவிட்டு, இப்படி யாரும் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்களா?

இந்த 'சிறுத்தை' படுகொலைக்குள்ளானது, இலங்கையில் இனி விசாரிக்கப்படக் கூடும். அத்தகைய விசாரணையை வேண்டுகிறவர்களும் அதற்கு ஆதரவாக இருப்பவர்களும், இறுதி யுத்த காலத்தில் பெருந்தொகையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் போர்க்குற்றங்களுக்குமான விசாரணைகளை வேண்டுவார்களா?

குறிப்பு - சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள இந்த ஒளிப்படத்தினை ஆவண முக்கியத்துவம் கருதிப் பதிவுசெய்கிறேன். ஏனைய படங்கள் மற்றும் வீடியோ எதனையும் பதிவுசெய்ய மனம் வரவில்லை. கொல்லப்பட்ட சிறுத்தையின் தோற்றம் தரும் துயரத்தை விட, சில மனிதர்களின் உடல் மொழியிலும் கூக்குரல்களிலும் தொனிக்கும் 'குரூரம்' தரும் துயரம் அதீதமானது.

2018-06-22

No comments:

Post a Comment