Tuesday, September 4, 2018

பேரைச் சொல்லவா...அது நியாயமாகுமா...?



முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி பற்றிய பதிவுகள், அவரது மறைவைத் தொடர்ந்து சமூக  வலைத்தளங்களில் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. கருணாநிதியின் பெயருக்குப் பதிலாக, 'கலைஞர்' என்ற பொதுவான வார்த்தை தான், பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பிரயோகிக்கப்படுகிறது. அதுவே அவரை மதிப்புடன் அழைப்பதற்கான 'பட்டப்பெயர்' என்று கருதப்படுகிறது. (அது, அவரது 'புனைபெயர்' அல்லது 'மாற்றுப் பெயர்' அல்ல என்பது கவனத்துக்குரியது.) 

கருணாநிதி பற்றிய நிகழ்வொன்றில், அவரது பெயரைக் குறிப்பிட்டு ஊடகர் திரு. சமஸ் உரையாற்றிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், இடையில் சிலர் எழுந்து “கருணாநிதி என்று சொல்லாதே, கலைஞர் என்று சொல்” என்று கத்தியிருக்கிறார்கள். அந்த சர்ச்சை குறித்து, சமஸ் தனது முகநூலில் எழுதியிருந்தார். இத்தகைய சர்ச்சைகள் குறித்த எனது நிலைப்பாடு தொடர்பாக ஏற்கெனவே பலருடன் பலமுறை பேசியும், அவ்வப்போது எழுதியும் வந்திருக்கிறேன். 

கலைஞர் என்ற சொல்லானது பொதுவாகக் கலைத்துறை சார்ந்தவர்களுக்கானது. அது, தனக்கெனப் பிரத்தியேகமான அர்த்த பரிமாணத்தையும் நீண்டகாலப் பாரம்பரியத்தையும் கொண்டது. கருணாநிதி என்னும் பெயரை மறைத்து, 'கலைஞர்' என்ற சொல்லை மட்டும் பெயருக்குப் பதிலாகப் பிரயோகிப்பது நியாயமாகுமா? அவரை விடவும் காத்திரமாகக் கலைப்பணியாற்றிய பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பெயர் குறிப்பிட்டு அழைக்காமல், 'கலைஞர்' என்று பொதுவாக அழைத்தால் எப்படியிருக்கும்?       

ஒருமுறை எழுத்தாளர் திரு. ஜெயகாந்தனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட  கருணாநிதி, 'கலைஞர் பேசுகிறேன்' என்று முதலில் சொன்னாராம். 'நானும் கலைஞர் தான், சொல்லுங்க' என்று பதிலுக்குச் சொன்னாராம் ஜெயகாந்தன். இதை அறிந்தபோது குபீரென்று சிரிப்பு வந்தது. கூடவே, நடிகர் திரு. வடிவேலு திரைப்படத்தில் பேசிப் பிரபலமான 'நானும் ரவுடி தான்' என்ற வசனம் நினைவுக்கு வந்தது. ஒருவகை  அறச்செருக்குடன், எள்ளலுடன் ஜெயகாந்தன் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். அடிப்படையில் அவரும் 'கலைஞர்' தான். கலைத்துறை சார்ந்து இயங்கிய கருணாநிதியை, 'கலைஞர் கருணாநிதி' என்று  'அழைப்பது' பொருத்தமாக இருக்கலாம். 'கலைஞர்' என்ற பொதுச் சொல்லானது, கருணாநிதியின் தனியுடமையாகக் கட்டமைவது தான் கேள்விக்குரியது.

யாருக்காக, எங்கு, எத்தகைய பட்டப்பெயரை ஒருவர் பிரயோகிக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது. இருந்தாலும், அது சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் கவனிக்கப்படவேண்டியவை. தனிநபர் துதிபாடல், வழிபாட்டு மனோபாவம், அதீத அபிமானம், அதீத விசுவாசம் போன்ற பின்னணிகளில் இருந்து ஒருவர் மீதான பட்டப்பெயர் கட்டமைக்கப்படுகிறது. இதுபோலவே, ஒருவரை இழிவாகச் சித்தரிக்கும் வகையிலான பட்டப்பெயர்களும் கட்டமைக்கப்படுகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியது. ஒருவரை நேசிக்கவும் புகழவும் அல்லது வெறுக்கவும் இகழவும், பட்டப்பெயர் மட்டுமே உண்மையான காரணியாக அமைந்துவிடுவதில்லை. இருந்தாலும், பட்டப்பெயர்கள் சமூகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. கலாச்சாரம், அதிகாரம் மற்றும் அரசியல் போன்ற காரணிகள், பட்டப்பெயர்களின் உருவாக்கத்தில் அதிகமதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன. பட்டப்பெயராக வழங்கப்படுகிற பல சொற்கள், பெரும்பாலும் 'துஸ்பிரயோகம்' ஆவது நடைமுறை யதார்த்தமாகத் தொடர்கிறது. அதிகாரத்தின் பிரயோகமாக, பொருத்தமில்லாத நடைமுறையாக, வழிபாட்டின் விம்பமாக  ஒரு  பட்டப்பெயர் மாறும்போது பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.   

'பட்டப்பெயரை' ஒருவரின் 'மரியாதைக்குரிய' அடையாளப் பெயராக ஆக்கிவிடுவது மொழியியல், சமூகவியல் நோக்கில்  ஆரோக்கியமானதல்ல. பெரியார் என்று ஈ.வே.ராமசாமியையும் மகாத்மா என்று காந்தியையும் கலைஞர் என்று கருணாநிதியையும் அம்மா என்று ஜெயலலிதாவையும்  அழைப்பது எல்லோருக்கும் உவப்பானதாக இருக்குமா? மக்கள் அபிமானம் பெற்று சமூக முக்கியஸ்தர்களாகக் கருதப்படுகிறவர்களின்  அசலான பெயர்களை, ஜனநாயக வெளிகளிலும் ஊடகங்களிலும் புழக்கத்தில் கொண்டுவருவது தான் ஆரோக்கியமானது.

சினமாவிலும் இலக்கியத்திலும் நன்கு அறியப்பட்டிருந்த ஒருவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழைப்பில் தமிழகத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்திருந்தார். ஒரு நாள், அவருடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நடிகர் திரு.விஜய் நடித்த ஒரு திரைப்படத்தின் விளம்பரத்தை அங்கிருந்த சிறிய திரையரங்கிலே காண முடிந்தது. அதில் 'இளைய தளபதி விஜய்' என்று எழுதப்பட்டிருந்தது. ''எத்தனையோ உண்மையான தளபதிகள் இருக்கும் இந்த இடத்தில், ஒரு நடிகரின் பெயருடன் 'தளபதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாமே...'' என்று அந்தத் தமிழக நண்பர் அப்போது சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.    

தமிழைப் பொறுத்தவரையில் எழுத்தில்  மதிப்புடன் ஒருவர் பெயரை அடிக்கடி  பயன்படுத்த வேண்டியிருந்தால் ஆரம்பத்தில் மட்டும்  'திரு', 'அவர்கள்' போன்ற  ஏதாவது ஒரு சொல்லைப் பயன்படுத்துவதே போதுமானது. 'திரு', 'அவர்கள்', 'மேதகு'  போன்ற மதிப்புக்குரிய சொற்களை, ஒரு பெயரின் முன்னும் பின்னுமாக அடுக்க வேண்டிய அவசியமேயில்லை. பெயர்களை மறைத்துவிட்டு, தலைவர், கலைஞர், தேசியத் தலைவர், அம்மா, தளபதி, பண்டிதர், பெரியார், மகாத்மா, கவிப்பேரரசு, சுப்பர் ஸ்டார், உலக நாயகன் என்றெல்லாம் பதவி நிலைகளாலும் பட்டங்களாலும் மனிதர்கள் முன்னிறுத்தப்படுவது ஆரோக்கியமானதா? இத்தகைய வழக்கமானது, சார்புநிலைப்பட்டதாகவும் வழிபாட்டு மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் தமிழ்ச் சமூகத்தில் தொடர்வதைத்தான் அவதானிக்க முடிகிறது.

ஒரு தரப்பினரால் 'தலைவராக' ஏற்றுக்கொள்ளப்படுகிறவர், 'மாற்றுத் தரப்பினர்' எல்லோரினதும் 'தலைவர்' ஆகிவிட  முடியுமா? ஒரு 'கலைஞர்' தான் இருக்க முடியுமா? ஒரு 'கவிப்பேரரசு' தான் இருக்க முடியுமா? ஒரு 'தேசியத் தலைவர்' தான் இருக்க முடியுமா? ஒரு 'பெரியார்' தான் இருக்க முடியுமா? ஒரு 'மகாத்மா' தான் இருக்க முடியுமா? இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுப் பார்ப்பது நல்லது.

ஒருவரைப் பற்றிய பதிவொன்றில், அவரது பெயரும் தனித்துவமான அடையாளங்களும் விபரங்களும் மதிப்பீடுகளும் தான் முக்கியமே தவிர, 'பட்டப்பெயர்' அல்ல. ஒரு பதிவின் பல்வேறு இடங்களில் ஒருவரது பெயர் பாவிக்கப்பட நேர்கையில், மரியாதையினை வெளிப்படுத்தும் 'திரு' போன்ற முன்னொட்டுக்களையோ 'அவர்கள்' போன்ற பின்னொட்டுக்களையோ எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டியதில்லை. தொடக்கத்தில், ஒரு இடத்தில் மட்டும் பயன்படுத்தினால் போதும். சர்வதேச அளவில் பிரபலமான ஊடகங்களில், கட்டுரை அல்லது செய்தி போன்றவற்றில், முக்கிய பிரமுகர்களினது பெயர்கள் கையாளப்படும் 'ஊடக முறைமை' கவனிக்கப்பட  வேண்டியது. (தமிழில் சில விடயங்கள் சிக்கலானவையாகவே தொடர்கின்றன.) 

மொழி என்பது அடிப்படையில் விஞ்ஞான பூர்வமானது. அதனால் தான் மொழி சார் இலக்கணங்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன. மொழியின் இருப்புத் தொடரவும் வளர்ச்சியடையவும் விஞ்ஞான பூர்வ அடித்தளமே  வழிவகுக்கிறது. மொழியானது, அதன் பிரயோக நிலையிலே தான் உணர்வுபூர்வ பரிமாணங்களை அடைகிறது. உண்மையில், தமிழை நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழ் மொழியின் இனிமை, அறிவியல் போன்ற பின்னணிகள் தொடர்பிலான தேடலைப் படைப்பாக்க வழிமுறைகளில் தொடர்கிறேன். மொழியின் மரபில் தொடரும் கசடுத்தனங்களை அறியவும் விலகி நடக்கவும் விழைகிறேன். ஒரு எழுத்தாளர் மற்றும் ஊடகர் என்ற முறையில், இயன்றவரையிலும் தெரிந்தவரையிலும் தமிழை நான் செம்மையாகவே பிரயோகிக்க முனைவேன்.

விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்தவர் திரு. பிரபாகரன். அவரைப் பற்றி எங்காவது நான் குறிப்பிட நேர்ந்தால், அவரது பெயரைக் குறிப்பிடுவது வழமை. (ஊடகவியல் மரபின் அடிப்படையிலான எனது சுயாதீன நடைமுறை அது.) இதனால், பிரபாகரனின் தீவிர விசுவாசிகளாகக் காட்டிக்கொள்கிற, ஊடகவியல் மொழியின் சாத்தியப்பாடுகளைப் புரிந்துகொள்ளாத சிலர், தமது 'எதிர்ப்புகளை' வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அவர்களது 'அறியாமை', 'தீவிர விசுவாசம்' போன்றவற்றின் எதிர் வெளிப்பாடுகளை என்னால் 'புரிந்துகொள்ள' முடிந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாது. இயன்றவரை, எனது நிலைப்பாட்டினை எழுத்திலும் நேரிலும் சிலருக்கு விளக்கியிருக்கிறேன். எது எப்படியிருந்தாலும், யாரைப் பற்றியாவது எழுத நேரும் போது, அவர் எத்தகைய பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும், ஊடகவியல் பண்புகளின் அடிப்படையில் அவரது பெயரைக் குறிப்பிட்டே எழுதுவேன். அதனால், அந்தப் பெயருக்குரியவருக்கு எந்த மரியாதைக் குறைவும் ஏற்பட்டு விடாது.   

'பேரைச் சொல்லவா...அது நியாயமாகுமா...?' என்ற திரை இசைப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பெயரைச் சொன்னால் என்ன தான் குறைந்துவிடப் போகிறது..? பெயரில் என்ன இருக்கிறது? ஒருவரை நினைவுபடுத்த, அழைக்க உதவும் அடையாள வார்த்தையாகவே பெயர் அமைந்திருக்கிறது. கணவன் பெயரை மனைவி சொல்வது, மரியாதைக் குறைவாகும் என்று நம்பக்கூடிய  தமிழ்ச் சமூகத்தின் 'நுட்பமான' ஆதிக்க மனோபாவத்தையும் மொழியோடு வன்புணரும் கலாச்சாரக் கசடுத்தனங்களையும் உற்றுக் கவனிக்க வேண்டும். பரஸ்பரம் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில் சுயமரியாதை, தோழமை பேணப்பட முடியும். சுவிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், குடும்ப அமைப்பிற்குள் பரஸ்பரம் பெயர் சொல்லியே பெரும்பாலும் அழைத்துக்கொள்வார்கள்.   

சமூகப் பிரபலங்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்பும் 'அதிகாரிகள்' முன்பும்  எழுந்து நிற்றல், காலில் விழுந்து வணங்குதல் போன்ற செயல்கள் மூலம் உண்மையிலேயே 'மரியாதை' வெளிப்பட்டு விடுகிறதா? அதிகார இருப்பிற்கான அங்கிகாரமாக, கீழ்படிதலின் அல்லது தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடாக, வெறும் சம்பிரதாய நடைமுறையாக அத்தகைய செயல்கள் பெரும்பாலும் அமைந்து விடுகின்றன.

படைப்பாளிகள் மற்றும்  போராளிகள் பலருடன், விடுதலைப் புலிகளின்  தலைவர் பிரபாகரன் கலந்துகொண்ட ஒரு பிரத்தியேக நிகழ்வில், ஒரு படைப்பாளியாக நானும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. திரு. பொட்டு மற்றும் திரு. தமிழ்ச்செல்வன் போன்றவர்களுடன் மேடைப் பகுதியில்  இருந்த பிரபாகரன், ஒரு தேவைக்காக எழுந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து எழுந்து நின்றுவிட்டார்கள். அந்த இடத்தில், எல்லோரும் எழுந்து நிற்க வேண்டிய 'அவசியம்' இருக்கவில்லை. அந்த இடத்தில் பிரபாகரன் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இது பற்றி, அப்போது சில நண்பர்களுடன் பேசியிருக்கிறேன். 'சுவாரசியமான' அந்த அனுபவத்தையும், அந்த நிகழ்வில் பிரபாகரனிடம் இருந்து  அவதானிக்க முடிந்த சில நற்பண்புகளையும் தனியாகப் பிறகு ஒரு தருணத்தில் பதிவுசெய்யலாம் என்று தோன்றுகிறது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சில நண்பர்கள் இன்னமும் வாழ்கிறார்கள். 

2018-09-04
அமரதாஸ்

கமல் - BIGG BOSS - காலில் விழுதல்



மனித உணர்வுகளுடன் 'விளையாடும்' தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவே பெரும்பாலும் 'பிக்பாஸ்' காட்சியளிக்கிறது. இது பொதுவாகவும் சுருக்கமாகவும் சொல்லக்கூடிய கருத்து. இது விரிவான விவாதத்திற்குரியது. அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு ஊடக நிகழ்ச்சி என்ற வகையில், அது பற்றிய தெளிவான 'புரிதல்' அவசியமாகும். (ஆய்வு நோக்கில் மட்டுமே, அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.) 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என்றுபிரத்தியேகமான வணிக நோக்கங்களே முதன்மையானவையாக உள்ளன. அதனை, அதன்போக்கில் யார் வந்து நடத்தினாலும் இப்படித்தான் இருக்கும். என்றாலும், கமல் நடத்தும் போது, அது அவருக்கான நிகழ்ச்சியாகவும் ஆகிவிடுகிறது. அவர் அப்படியாக ஆக்கிவிடக் கூடியவர். சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடிகர் திரு. கமல்ஹாசன் வந்து செல்லும் நிகழ்ச்சிப் பகுதிகளில், சில 'நல்ல விடயங்கள்' நடந்திருக்கின்றன.

இன்றைய நிகழ்ச்சியில், திரு. டானியல் வெளியேறும் படலத்தில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சம்பவம் அடங்கியிருந்தது. கமலின் காலில் விழ முயன்ற டேனியை நிறுத்தி, ''அதுக்கு இன்னொரு வழி இருக்கு'' என்று சொல்லிக்கொண்டே கட்டிப்பிடித்துக்கொண்டார் கமல்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கமல். அவரை எனக்குப் பிடிப்பதற்கான காரணங்களில் ஒன்று அது. ஆனால், 'ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்' என்று அவரைப் பிறர் சொல்லும்போது, 'ஆமோதிப்பது போல' அவர் நடந்துகொள்வதை எப்படிப் புரிந்து கொள்வது? நேற்று, திரு.பாலாஜி அப்படிச் சொல்லும்போது 'அமைதியாக' இருந்துவிட்டார் கமல். அவருக்குள் ஒருவித 'மேட்டிமைத்தனம்' தொழிற்படுகிறதோ என்னவோ?

எதற்காகவும் காலில் விழுவது தவிர்க்கப்பட வேண்டியதே. கட்டி அணைத்தல், கைகுலுக்குதல் போன்ற நடத்தைகளில், பரஸ்பர அன்பும் மதிப்பளித்தலும் பேணப்பட முடியும். பொதுவாக மனித நடத்தைகளில், பரஸ்பர சுயமரியாதை பேணப்பட வேண்டியது அவசியமாகும்.

2018-09-02
அமரதாஸ்

Friday, June 22, 2018

ஊடக அற மீறல்.



ஒரு அமைப்பின் (PLOTE) ஆரம்பகாலப் பயிற்சிமுகாம்  காட்சிகளை YouTube தளத்தில் மிக அண்மையில் பார்த்திருந்தேன். அதிலிருக்கும் சில பயிற்சிக்  காட்சிகள், IBC தொலைக்காட்சி யின்  நிகழ்ச்சியொன்றில் ('தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்! - வெளிவரும் அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்') பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மூலக் காட்சிகளில் 'Swiss Ranjan PLOTE' என்று பதிக்கப்பட்டிருந்த எழுத்துகள், IBC தொலைக்காட்சி யில் பயன்படுத்தும் போது அழிக்கப்பட்டிருப்பது ஊடக தர்மத்தின் அடிப்படையில் நியாயமானதல்ல. இரண்டையும் YouTube  மூலம்  அண்மையில் நான் அடுத்தடுத்துப் பார்க்க முடிந்தமையால்  இதனைக் கண்டுபிடிக்க முடிந்தது. இப்படியான காரியங்களில் சில 'ஊடகங்கள்' அவ்வப்போது செயற்பட்டு வருவது புதிதல்ல என்றாலும், இப்போது ஆதாரபூர்வமாக  அறிந்த இதனைப் பதிவுசெய்யத் தோன்றியது. ஒருவேளை, சம்மந்தப்பட்டவர்களிடம் முறையான அனுமதி பெற்று எழுத்துகள் அழிக்கப்பட்டிருந்தால், அது ஊடக தர்மத்துக்கு உட்பட்டதாக அமைந்திருக்கக் கூடும்.

சுவிஸ் ரஞ்சன் என்பவரோ  புளொட் அமைப்பினரோ என்னுடன் தொடர்பில் உள்ளவர்களல்ல. IBC தொலைக்காட்சி மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை. ஒரு சுயாதீன ஊடகராக, எனது ஊடகவியல் அனுபவ அறிவின் அடிப்படையில் எனது 'பார்வையினை' இங்கு பதிவுசெய்கிறேன். அவ்வளவு தான். இது, கடந்து போய்விடக்கூடிய 'சிறிய' விடயமாகப் பலருக்கும் தோன்றக் கூடும். ஆனால், இத்தகைய விடயங்களை ஊடக உலகத்தில் 'அனுமதிப்பது' ஆபத்தானதாகும்.   

வரலாற்று ஆதாரங்களை, தகவல்களை, படங்களை  எங்கிருந்தும் யாராலும் பெற முடியும். அவற்றின்  உண்மைத்தன்மையினையோ பின்னணித்தகவல்களையோ மறைக்க முயல்வது ஊடக தர்மத்தின் அடிப்படையில் இழுக்கான காரியமாகும். அது அறமற்றது. ஒருவருக்கு உரித்துடைய ஆவணம் ஒன்று, நல்ல நோக்கத்திற்காக எடுத்தாளப்படும் போது, உரித்துடையவரின் 'பெயர்' திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுவது அறமல்ல. ஒரு இடத்தில்  இருந்து ஒன்றைப் பெறுவது விருப்பமில்லையெனில் அல்லது பெறுவதில் உடன்பாடில்லையெனில், அதைப் பெறாமலேயே இருந்துவிடலாமே... இன்னொருவரினதோ இன்னொரு அமைப்பினதோ ஆவணத்தின் உண்மைத்தன்மையை  மறைக்க முயல்வது மோசமான  ஊடக ஊழலாகும். தயவுசெய்து  இத்தகைய ஊழலை ஊடகங்களும் தனிமனிதர்களும் இனியாவது செய்யாமலிருக்க வேண்டும்.



விடுதலைப் புலிகளுக்கும் இந்திய  இராணுவத்தினருக்கும் இடையிலான  மோதல் இடம்பெற்ற  காலத்தில், விடுதலைப் புலிகள் வளர்த்த சிறுத்தை ஒன்று கைவிடப்பட்டது பற்றி, நேற்று ஒருவர் தனது முகநூலில் பதிவுசெய்திருந்தார். அந்தப் பதிவினை, இன்று இரண்டு நபர்கள் தமது முகநூலில் எழுதியவரின் பெயர் போடாமல் அப்படியே மீள்பதிவு செய்திருந்தார்கள். இத்தகைய பொறுப்பற்ற செயல்களை முகநூலிலும்  அடிக்கடி காண முடிகிறது. முகநூலும் அடிப்படையில் ஒரு ஊடகமாகும். அதனாலேயே அது சமூக வலைத்தளம் என்று சொல்லப்படுகிறது.

2018-06-22

கொலையும் குரூர மனநிலையும்.


இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதில்லை. இந்த உலகமானது, குறிப்பிட்ட இனப் பிரிவினருக்கானதோ நிறப் பிரிவினருக்கானதோ வர்க்கப் பிரிவினருக்கானதோ மதப்பிரிவினருக்கானதோ ஏனைய பிரிவினருக்கானதோ மட்டுமானதில்லை என்பதை எல்லா மனிதர்களும் உணர வேண்டும்.

ஜீவகாருண்ணியம் எனப்படுவது, மனிதர்களிடம் இருக்க வேண்டியதும் மனிதாபிமானத்தை உள்ளடக்கியதுமாகும். ஒரு 'ஆபத்தான உயிரினம்' ஆபத்துக்குரிய தருணத்தில் கொல்லப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கக் கூடும். ஒரு கொலைக்கு, சில தவிர்க்க முடியாத காரணங்கள் இருக்கக் கூடும். எது எப்படியிருந்தாலும், ஒரு கொலையினைக் கொண்டாட்ட மனநிலையில் அணுகும் மனித மனநிலை மிகவும் வக்கிரமானது, ஆபத்தானது...

கிளிநொச்சியில் ஒரு சிறுத்தை கொலை செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கொலை, பாதுகாப்புக் காரணத்துக்கானதாக இருக்கலாம். அது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். அந்தக் கொலையானது, சட்ட ரீதியில் குற்றமாகக் கூட இருக்கலாம். அந்தக் குற்றத்தின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அந்தக் கொலை நடைபெற்ற சூழலில் நிலவிய 'கொண்டாட்ட மனநிலை' கண்டிக்கப்பட வேண்டியது. வெற்றிக் களிப்புடன் கூடிய வக்கிர மனநிலை அது. அங்கு பதிவாகியுள்ள ஒளிப்படங்களும் வீடியோ பதிவுகளும் மனிதர்கள் சிலரின் குரூரத்தை வெளிப்படுத்துகின்றன.

'இன விடுதலையின் பெயரால்', சொந்த இனத்திற்குள்ளேயே இயக்கங்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான படுகொலைகளை 'ஆதரிக்கிற' மனநிலை கொண்டவர்கள், இதையும் இலகுவில் கடந்து போய்விடுவார்களா? போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைக் குற்றங்களையும் 'கொண்டாட்ட மனநிலையில்' குரூரமாகச் செய்து முடித்த சிங்கள அரச தரப்பினருடன் இணங்கிப் போகிறவர்கள், எதையும் கடந்து போய்விடுவார்களா? வீட்டுக்குள் புகுந்துவிட்ட பாம்பு ஒன்றினை அடித்துக் கொன்றுவிட்டு, இப்படி யாரும் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்களா?

இந்த 'சிறுத்தை' படுகொலைக்குள்ளானது, இலங்கையில் இனி விசாரிக்கப்படக் கூடும். அத்தகைய விசாரணையை வேண்டுகிறவர்களும் அதற்கு ஆதரவாக இருப்பவர்களும், இறுதி யுத்த காலத்தில் பெருந்தொகையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் போர்க்குற்றங்களுக்குமான விசாரணைகளை வேண்டுவார்களா?

குறிப்பு - சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள இந்த ஒளிப்படத்தினை ஆவண முக்கியத்துவம் கருதிப் பதிவுசெய்கிறேன். ஏனைய படங்கள் மற்றும் வீடியோ எதனையும் பதிவுசெய்ய மனம் வரவில்லை. கொல்லப்பட்ட சிறுத்தையின் தோற்றம் தரும் துயரத்தை விட, சில மனிதர்களின் உடல் மொழியிலும் கூக்குரல்களிலும் தொனிக்கும் 'குரூரம்' தரும் துயரம் அதீதமானது.

2018-06-22

Thursday, June 14, 2018

கேரளப் பயணத்தின் சிறு தடம்.




சில கேரள நண்பர்களுடன் ஒரு வண்டியில் ஒளிப்படங்கள் எடுப்பதற்காகப் பயணித்துக்கொண்டிருந்த போது, கேரளாவின் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில்   கம்பீரமாக நிற்கும் திரு. சே குவேரா வின் பெரிய அளவிலான படத்தைக் கண்டேன். (கேரளாவில், பல இடங்களில் சே குவேரா வின் படங்களைக் கண்டிருக்கிறேன்.) அந்த இடத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். 

உண்மையான போராளியாக மட்டுமல்ல, கவிஞராகவும் ஒளிப்படக் கலைஞராகவும் சே குவேரா இருந்தார். எல்லோரது பிறப்பும் போல, அவரது பிறப்பும் சாதாரணமானது தான். பிற்காலத்தில், தன் வாழ்வை 'அர்த்தமுள்ளதாக' ஆக்கிக்கொண்டார்.

சேகுவேரா கம்பீரமாக நிற்கும் அந்தப்  படம், சில இடங்களில் கிழிந்திருந்தது. அதுவும் கூட வித்தியாசமான அழகைக் கொடுப்பதாகத் தோன்றியது. சே குவேரா வின் பெரும்பாலான படங்கள், எப்போதும் ஈர்ப்புக்குரியவையாகவே இருக்கும். அந்தப் படத்தின் ஈர்ப்பிற்கான காரணங்கள் பற்றி, அந்த இடத்தில் நின்று யோசித்துக்கொண்டிருந்தேன். கேரளத் திரைத்துறையினர் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்த  விவரணத் திரைப்பட இயக்குநரான நண்பர்  ஒருவர், 'அவரைப் போல, உங்கள் கழுத்திலும் ஒரு கமெரா இருக்கிறது' என்று சொல்லிவிட்டு, சே குவேரா வின் அந்தப் படத்துக்கு அருகில் என்னை  நிற்கவைத்து ஒளிப்படம் எடுத்தார். அந்த இடத்தில், நானும் என்னவோ சொல்லிவிட்டு எல்லோருடனும் சேர்ந்து சிரித்தேன்.

2018-06-14
அமரதாஸ்

Friday, June 1, 2018

ராஜ்குமாரும் நானும் அல்லது சென்னையும் சினிமாவும்.

ராஜ்குமார் & அமரதாஸ் (WOODLANDS SYMPHONY திரையரங்கு)

சினிமாவில் தீவிர ஈடுபாடு கொண்டவன் ராஜ்குமார். சென்னையில், திரைத்துறையில் இயங்கும் நண்பன் சோமிதரன் வீட்டில் அவன் தங்கியிருந்தபோதுதான் அவனது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அப்போது சென்னையில் திரைப்பட விழா நடைபெற்றது. தினமும் அவனோடு சென்று பல மொழிகள் சார்ந்த பல்வேறு திரைப்படங்கள் பார்த்தேன்.

சினிமா பற்றி அதிகம் பேசுவான், கேட்பான். அவனுக்கு, வளர்ந்துவரும் HDSLR Film Making பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், காசநோய் விழிப்புணர்வு குறித்த ஒரு குறும் திரைப்படப் போட்டிக்கு அனுப்பவென ஒரு குறும் திரைப்படம் உருவாக்குவோமென்றும், அதற்கு நான்தான் என்னிடமிருந்த Canon HDSLR கமெராவினால் ஒளிப்பதிவு செய்யவேண்டுமென்றும் சொன்னான். அவனது தீவிரம் எனக்கு விளையாட்டுத்தனமாகவே ஆரம்பத்தில் தெரிந்தது. தவிரவும், கலை ரீதியில் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இல்லை. அவனது வற்புறுத்தலால் அவனோடு இணைந்து சென்னையில் பல இடங்களுக்கும் சென்று படப்பிடிப்புக்களை மேற்கொண்டேன்.
கொஞ்சம் விளையாட்டுத்தனமாகவே படப்பிடிப்பு நிகழ்ந்தது. பரீட்சார்த்த முயற்சியாகவும் இருந்தது. பல காட்சிகளைத் உள்ளடக்கம் சார்ந்து, திட்டமிட்டே Out Of Focus நிலையில் எடுத்தேன். கமெரா அசைவுகள், கமெரா கோணங்கள், ஒளியமைப்பு எல்லாவற்றையும் வித்தியாசப்படுத்தியும் எடுத்தேன். என்னைக் கூட வைத்துக்கொண்டு ஒரு பரிசோதனை முயற்சியைத்தான் அவன் செய்துகொண்டிருந்தான். அடிக்கடி திட்டங்களை மாற்றிக்கொண்டிருந்தான். அதிகம் திட்டமிடல் இல்லாமல் இயங்கினான். சிலசமயம் எனக்கு சலிப்பாகவுமிருந்தது, என்னை வைத்துக் ‘கொமெடி’ பண்ணுவது போலவும் இருந்தது.
ஒரு நாள், ஒருவர் இருமுவதுபோல ஒரு காட்சி எடுக்கவேண்டியிருந்தது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ஒரு இடத்தில் நின்று கொண்டு, பலரை வந்து கமெரா முன்னால் இருமச் சொன்னோம். எல்லோரும் மறுத்து நழுவி விட்டனர்.(காசநோய் பற்றிய படம் எடுக்கிறோம் என்று தெரிந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ?) கடைசியில் கமெராவை 'செற்' பண்ணித்தந்துவிட்டு நீங்களே போய் இருமுங்கள் என்று வற்புறுத்தினான். வேறு வழியில்லாமல் நானே கமெரா முன்னால் இரும வேண்டியிருந்தது. அந்த மோசமான இருமலைப் படத்தொகுப்பில் சேர்க்காதே என்று அப்போதே சொன்னேன். அவன் வேறு வழியில்லாமல் அதையே கோர்த்துவிட்டிருந்தான்.
படப்பிடிப்பை வேகமாக ஒரு வாரத்தில் முடித்துவிட்டு வேறு இடம் சென்றுவிட்டேன். நீண்டகாலம் அவனை நேரில் சந்திக்கவில்லை. நான் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் அவசரகதியில் படத்தொகுப்பு செய்யப்பட்டு அவனால் போட்டிக்கு அனுப்பப்பட்டது. போட்டி விதிமுறைகளுக்கு சரியாகப் பொருந்தியிருக்கவில்லையென்றும், பொதுவாக நன்றாக வந்திருப்பதாகவும் அங்கு தேர்வாளர்களாக இருந்த நடிகர் சூர்யா வும், இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனனும் சொல்லி அந்தப் படத்தைச் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்தார்களென்று பிறிதொரு நாளில் ராஜ்குமார் சொன்னான். படத்தொகுப்பின் பின் அது ஒரு பரீட்சார்த்த நிலையிலான Documentary ஆகிவிட்டிருந்தது.
சென்னையில் உள்ள L.V.Prasad Film & TV Academy க்கு ஒரு நாள் அவனை அழைத்துச் சென்றேன். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்குநர் பிரிவுகளில் இணைந்து திரைத்துறை அனுபவங்களை விரிவுபடுத்தும் நோக்கில், அதன் இயக்குநராக இருந்த ஹரிஹரன் அவர்களைச் சந்தித்தேன். ராஜ்குமார், அங்கு எனது கமெராவினால் சில ஒளிப்படங்களும் எடுத்தான். அங்கிருந்த கமல்ஹாசனின் படத்துக்கு அருகே நான் எதிர்பாராத விதமாக ஒரு படத்தை எடுத்துவிட்டு என்னவோ காரணத்துக்காக அது தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னான். எனக்கு, அது கொஞ்சம் செயற்கைத்தனமாகத் தோன்றுவதால் பிடிக்கவில்லை என்று சொன்னேன்.
L.V.Prasad Film & TV Academy யில் இருந்து திரும்பி வந்ததும், இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனின் Mindscreen Film Institute சென்று இயக்குநர் பிரிவில் இணைந்துகொள்ளவிருந்த திட்டத்தைக் கைவிட்டு L.V.Prasad Film & TV Academy யில் இயக்குநர் பிரிவில் இணைந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னான். பிறகு அப்படியே இணைந்து கொண்டான். நல்ல இயக்குநராகி விடுவான் என்று நினைத்திருந்தேன்.
நீண்ட காலம் அவனோடு தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மிக அண்மையில், திரைத்துறையில் இயங்கும் நண்பன் அரவிந்த் மூலம் ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டான் என்ற தகவலை அறிந்தேன். துயரமும் அவனோடு சென்னையில் திரிந்த நினைவுகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன.
ராஜ்குமார்..... உனக்கு என்னடா ஆச்சு? என்னென்னவோ எல்லாம் செய்யவேணுமென்று சொல்லிக்கொண்டிருந்தாயே....

திரு.ஹரிஹரன் & அமரதாஸ் - ராஜ்குமார் எடுத்த படம்.

ராஜ்குமார் எடுத்த படம்.


ராஜ்குமார் எடுத்த படம். (L.V. Prasad Film & TV Academy)

ராஜ்குமார் எடுத்த படம். (L.V. Prasad Film & TV Academy)



சோமிதரன் வீட்டில், சோமிதரனின் அம்மா  மற்றும் ராஜ்குமார்.

அமரதாஸ் 2015-12-20

Sunday, May 20, 2018

நீயா பேசியது...


'நீயா பேசியது...' என்று தொடங்கும் திரையிசைப் பாடலின் இசையமைப்பை நுட்பமாகவே வித்யாசாகர் கையாண்டிருக்கிறார். காதலும் கோபமும் ஏக்கமும் கலந்த கலவையான தொனியில் பாடப்பட்டிருக்கும் விதம் நன்றாக இருக்கும்.

'நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது...'என்று இருக்கும் சாதாரண வரிகள், பாடப்படும் போது கொள்ளும் பரிமாணங்களும் உணர்வுப் படிமங்களும் அலாதியானவை. 'நீயா பேசியது' என்ற இரண்டு வார்த்தைகளை மட்டும் திரும்பத்திரும்ப வெவ்வேறு தொனிகளில் சங்கர் மகாதேவன் பாடுவது அல்லது பிரயோகிப்பது நுட்பமான ரசனைக்குரியது. (நானும் அப்படிப் பாடிப் பார்க்கிறேன்.) ஈர்ப்பான சில வரிகள் உண்டெனினும் 'காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்...' என்ற வரியினை நடைமுறை அர்த்தத்தில், பொதுவில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது, 'தன் கூற்றாக' தனியொருவரின் நம்பிக்கையாக இருப்பதையும் காண முடிகிறது. பெரும்பாலான திரையிசைப் பாடல்களை நான் வரிகளுக்காக விரும்புவதில்லை என்பது வேறு விடையம்.

மிகவும் இலகுவாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கக் கூடிய சுழ்நிலை (situation) தான் இது. பாவம்...ஜோதிகாவை வெருட்டுவது போலவே விஜயின் நடிப்பு பல இடங்களில் அமைந்திருக்கிறது. இதில் விஜய் நடித்திருக்கும் ஒரு இடம் 'மெச்சத்தக்கதாக' உள்ளது. பாடலுக்கு வாய் அசைப்பதைத் தவிர்த்திருக்கலாம். இன்னும் சிறப்பாகவே நடிப்பையும் காட்சியமைப்புக்களையும் இயக்குநர் கையாண்டிருக்க முடியும். (இது ஒரு 'மொக்கைப் படத்தின்' பாடல் என்பது கவனிக்கத்தக்கது.) இந்த இசையினை, 'உள்மனக் குமுறலின் காட்சிப் படிமங்களாக மிகவும் சிறப்பாகவே நகர்த்தியிருக்க முடியும்.


https://youtu.be/KrnwKDvn6dc
அமரதாஸ் 

2017-05-31