Tuesday, October 23, 2018

ஊடக வெளியும் இழிநிலைகளும்



தமிழகத் திரைப்பட இயக்குநர் திரு. பாரதிராஜாவின் அண்மைக்கால இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து நிகழ்ந்திருக்கும் சர்ச்சைகள், இலகுவில் கடந்து செல்லக்கூடியவையல்ல.  

யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில், ஒருவகை மேட்டிமைத்தனத்துடன் 'முறைகேடாக' அவர் நடந்துகொண்டார். அப்போது அவரை, அங்கிருந்த செய்தியாளர்கள் பக்குவமாக எதிர்கொண்டிருக்க வேண்டும். அந்த இடத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டிய ஆரோக்கியமான, முறையான எதிர்வினைகள் நிகழவில்லை. பின்னர், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் தொடர்ந்தன. பிரமுகராக நிகழ்வொன்றில் முன்னிறுத்தப்பட்டிருக்கும் ஒருவர், எத்தகைய கேள்விகளையும் பக்குவமாக எதிர்கொள்ள வேண்டியது அவசியமானது. பதில் சொல்ல விரும்பாத (முடியாத) அல்லது சூழ்நிலைக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றுகிற 'சிக்கலான' கேள்விகளை, நாகரிகமாக மறுத்துக் கடந்துவிட முடியும். சமூக வாழ்வில், பொதுவெளியில்  'எழுந்தமானமாக', 'முறைகேடாக' எதையும் யாரும் செய்துவிட முடியாது.

குழப்பத்தில் முடிந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, இரண்டு நபர்களால் பாரதிராஜாவின் 'கால்கள் கழுவப்படுவது' மாதிரியான படமொன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, சர்ச்சைகள் வேறுபோக்கிலே தொடர்ந்தன. எந்த விளக்கமுமின்றி, முன்முடிவுகளுடனும் 'கொச்சையான' கருத்துகளுடனும் பெரும்பாலும் பகிரப்பட்டிருக்கிறது அந்தப் படம். தமிழ்ச் சூழலில்  எதையும் சரியாக ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டு அவசரகதியில் கருத்துதிர்க்கும் வழக்கம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல. சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும், தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அமைவாக, தனிமனித நடத்தைகள் சார்ந்து 'அவசரகதியில் ' முன்வைக்கப்படும் எதிர்வினைகள், கண்ணியத்துடன் அமைவதில்லை. எங்கு, எப்போது, எச் சந்தர்ப்பத்தில், யாரால், எதற்காக அந்தப் படம் எடுக்கப்பட்டது? யாரால், எப்படி அது விபரங்கள் எதுவுமில்லாமல் வெளிவந்தது? அந்தப் படம் தொடர்பான பின்னணித்தகவல்கள் எதுவும் சரியாக இதுவரை கிடைக்கவில்லை. அந்தப் படமானது, பல வகையில் திரிபுபடுத்திக் காட்டப்படக் கூடியதாக, இருப்பதால் பின்னணித்தகவல்கள் அவசியமாகின்றன. எது எப்படியிருந்தாலும், சமூக மட்டங்களில் நிலவும் மேட்டிமைத்தனங்களையும் கசடுத்தனங்களையும் மத, கலாச்சார, அதிகார, அரசியல்  பின்புலங்கள் வழியாகப் புரிந்துகொண்டு, எதிர்வினைகளை ஆரோக்கியமான வழிமுறைகளில் வெளிப்படுத்த வேண்டும்.   

பாரதிராஜா சம்மந்தப்பட்ட  அந்தப் படத்தில், ஒருவகையான 'மேட்டிமைத்தனம்' தொனிப்பதை அவதானிக்க முடிந்தாலும், பின்னணித்தகவல்கள் பற்றிச் சரியாக அறிந்துகொள்ளாமல் முடிவாக எதையும் கூறிவிட முடியாது.  அப் படமானது, எத்தகைய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று, அதில் இருக்கிற மூவரும் அந்தப் படத்தை எடுத்தவரும் தான் இனி வெளிப்படையாகப் பேச வேண்டும். வயது முதிர்ந்த ஒருவருக்கான 'வைத்திய உதவி' நடந்திருப்பதன் பதிவாகக் கூட அது புரிந்துகொள்ளப்படக் கூடும். பாரதிராஜா வயது முதியவரானாலும், உடல் சார்ந்த காரியங்களை சுயமாகச் செய்துகொள்ள முடியாத அளவிற்குத் தளர்ந்துபோனவரல்ல. கால்களில் வலி இருந்தால் யார் கால்களையும் யாரும் வெந்நீரில் கழுவிடுவதும் மசாஜ் செய்து விடுவதும் சாதாரணம் தான். கால்களைக் கழுவக் கொடுத்த பாரதிராஜாவினதும், கழுவிக் கொடுத்த இரண்டு நபர்களினதும் மனநிலைகள் நுட்பமாக ஆராயப்பட வேண்டியவை.  ஒரு 'பிரமுகராக' இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்த பாரதிராஜாவின் மனநிலையானது, அதிகார துஸ்பிரயோகமாக, மேட்டிமைத்தனமாகத் தொழிற்பட்டிருந்தால் கண்டிக்கப்பட வேண்டியது. ஒரு 'மசாஜ்' நிலையத்திலோ அல்லது  வைத்திய நிலையத்திலோ, உடல் சுகத்திற்காக, 'உடன்பாட்டு நிலையில்' நிகழும் காரியங்கள் வேறுவகையானவை. 
   
விசேடமான சூழ்நிலைகளில், பிரத்தியேகமான அல்லது அந்தரங்கமான தருணங்களில் தனி நபர்கள் சார்ந்து தற்செயலாகவோ செய்திமதிப்புடனோ (news value) எடுக்கப்படுகின்ற  ஒளிப்படங்கள், ஊடக வெளிகளில் 'தவறான  முறைகளில்' பிரயோகிக்கப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பதிவாகியுள்ள ஒளிப்படமானது, ஒருவரது தனிப்பட்ட 'இயல்பை' அல்லது ஆளுமையை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்துவிடுவதும் உண்டு. எது எப்படியிருந்தாலும், நம்பகத்தன்மையுடன் கூடிய பின்னணித்தகவல்கள் எதுவும் கொண்டிராத ஒரு ஒளிப்படமானது, தவறான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் வகையில், ஊடகவெளிகளில் பிரயோகிக்கப்படுவது அறமாகாது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்தோ தனிப்பட்ட நடத்தை குறித்தோ யாரும் எழுந்தமானமாகவோ அவதூறாகவோ கருத்துக்கள் முன்வைப்பது ஏற்புடையதல்ல. எது எப்படியிருந்தாலும், ஊடக ரீதியான அத்துமீறல்களும் தனிமனித அத்துமீறல்களும்  இனங்காணப்பட வேண்டியவை. தனிமனித சுதந்திரம் குறித்த தெளிவான நிலைப்பாடு எல்லோருக்கும் அவசியமானது. தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்தும் ஓர்மமும் சுயசிந்தனையும் கொண்ட மனிதர்களே, அதிகார மையங்கள் சார்ந்த 'அரூப கரங்களின்' குரூரத்தை அம்பலப்படுத்தக் கூடியவர்கள்.

கால் கழுவுதல், முதுகு சொறிதல், காலில் விழுதல், காக்கா பிடித்தல் (கால் கை பிடித்தல்), அடிவருடுதல் (அடிவருடி), மண்டியிடுதல், போன்ற சொற்தொடர்கள் பெரும்பாலும் பிரயோகிக்கப்படுகிற சந்தர்ப்பங்கள் நுட்பமாக அவதானிக்கப்பட  வேண்டியவை. அவை, அதிகாரத்திற்கு முன் இணங்கிப் போவதை 'இழிவாக' எடுத்துரைக்கும் வகையிலே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. சாதி, மதம், அரசியல் போன்ற அதிகார மூலங்களின் இடுக்குகளில் இத்தகைய சமூக இழிவுகள் போசிக்கப்படுகின்றன.   

மரியாதை நிமித்தமாகவும் அன்பின் நிமித்தமாகவும் செய்யப்படுகிற 'மதிப்பளிப்பு' சார்ந்த உடல்மொழிதல்கள் புரிந்துகொள்ளக்கூடியவை. அவை, தனிமனித மற்றும் சமூகப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாகப் பார்க்கப்படக் கூடும். அதிகாரத்தினாலோ அல்லது மேட்டிமைத்தனத்தினாலோ அடிமை மனோபாவத்தினாலோ செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிற காரியங்கள் இனங்காணப்பட வேண்டியவை. காலில் விழுதல், அதிகாரத்தின் முன் மண்டியிடுதல், தனிமனித வழிபாடு போன்ற சமூக இழிவுகள் கண்டிக்கப்பட வேண்டியதுடன் களையப்பட வேண்டியதுமாகும். 

பாரதிராஜாவின் முதலாவது வன்னி வருகையின் போது, அவரைச் சந்தித்திருக்கிறேன். 'ஆணிவேர்' என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பைத் தொடக்கி வைத்திருந்தார். அந்தத் திரைப்பட உருவாக்கத்தில் எனது தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்பு, ஒளிப்படத் துறை சார்ந்ததாக இருந்தது. பாரதிராஜாவின் திரைப்படங்கள் மீதான 'மிகை மதிப்பீடுகள்' எதுவும் என்னிடமில்லை. எனினும், தமிழ் சினமாவில் அவரது பங்களிப்பு குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. அவர் நிதானமாக இருந்து, தனது ஆரோக்கியத்தைப் பேணிக்கொண்டு தொடர்ந்து இயங்குவது நல்லது. திரு. சீமான் போல, பாரதிராஜாவும் பொதுவெளியில் சர்ச்சைகளுக்குரிய வகையில் அடிப்படைவாத நிலைப்பாடுகளையும், அதிகாரத் தோரணைகளையும் வெளிப்படுத்தி வருவதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இத்தகையவர்களின் உளவியலும் உடல்மொழியும் நடத்தைக் கோலங்களும் ஆழமாக அணுகிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.  

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன், வன்னியில் பாரதிராஜாவைச் சந்தித்தபோது, ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை இயக்குமாறு கேட்டிருந்தார். பிரபாகரனிடம் சில விடயங்களைச் சொல்லி 'நழுவிவிட்டார்' பாரதிராஜா. ஈழப் பிரச்சினைகள் பற்றி அடிக்கடிப் பேசும் பாரதிராஜாவால் ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை இதுவரை இயக்க முடியவில்லை. ஈழப் பிரச்சினைகளை அவற்றின் சகல பரிமாணங்களோடும் உள்வாங்கி, ஒரு நல்ல ஈழத் திரைப்படத்தை இயக்கி, சர்வதேச அளவில் அவரால் கொண்டுசெல்ல முடியும் என்று தோன்றவில்லை. (உண்மையான அக்கறைகளுடன் முயன்றால் அது சாத்தியமாகக் கூடும்.) இலங்கைக்கு அவர் இப்போது பயணம் செய்திருப்பதன் நோக்கம் சரியாகத் தெரியவில்லை.   

பாரதிராஜாவையோ அவரை இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றவர்களையோ தொடர்புகொள்ளக்கூடிய நிலையில் உள்ள யாராவது, அவர்களோடு உரையாடி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். பாரதிராஜாவின் கால்கள் 'கழுவப்படுவது போன்ற' படம் தொடர்பிலும், யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதான பாரதிராஜாவின் 'முறைகேடான' நடத்தை தொடர்பிலும் ஊடகவியல் நெறிமுறைகளுக்கு அமைவான உரையாடல் சாத்தியமாக வேண்டும்.

2018-10-23
அமரதாஸ்

Wednesday, October 3, 2018

காதலின் ரகசிய அழைப்பு




பாத்திரங்களின் உளவியலை அல்லது மன நிலைகளை இசையிலும் காட்சிகளிலும்  இயல்பாக, அழகியலாக வெளிப்படுத்த முயன்ற திரை இசைப் பாடல்களில், 'சின்னப் பொண்ணு சேலை...' என்னும் பாடல் குறிப்பிடத் தகுந்தது. 'மலையூர் மம்பட்டியான்' என்ற  திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. 

பாடலின் காட்சியமைப்புகளில் பாத்திரங்களாக வரும் தியாகராஜனும் சரிதாவும் வாயசைத்துப் பாடவில்லை, ஆடவுமில்லை. அவற்றுக்கான அவசியமிருக்கவில்லை. ஒரு பாடலை எப்படிப் பொருத்தமாகக் காட்சிப்படுத்தித் திரைப்படத்துடன் ஒட்டவைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் பாடலைப் பரிந்துரைக்கலாம். இது ஒரு வகை உதாரணப் பரிந்துரை மட்டுமே.

மரத்தை அணைத்திருந்து பாதி முகம் காட்டி, காதலை ஒற்றைக் கண்ணில் கடத்த முயலும் சரிதாவின் நடிப்பும், அதை நெருக்கமாக அணுகி நகரும் கமெராவின் நுட்பமும்  அழகியலாகப் பதிவாகியுள்ளன. இசைப் படிமங்கள் காட்சிப் படிமங்களுடன் இயைந்து  சங்கமிக்கின்றன. வரிகளிலும் காட்சியமைப்புகளிலும் தொனிக்கும் சில செயற்கைத்தனங்கள் பெரிய உறுத்தலாகத் தோன்றவில்லை. இளையராஜாவின் எளிமையான இசையும் இயல்பான காட்சியமைப்புகளும் காதலின் பசுமையாக விரிகின்றன. 

இரண்டாவது சரணத்தின் இறுதியில், 'அருகே நீ வா...' என்னும் வரிகளை ரகசியத் தொனியில் ஜானகி பாடுவதை, பாடல் முடிகையில் வெளிப்படும் அவரது 'சிணுங்கலான அழைப்பை' நுட்பமாக உற்று ரசிக்க முடியும்.

தெளிவான காட்சி மற்றும் நல்ல ஒலித்தரத்தில் இந்தப் பாடல் கிடைக்கவில்லை.

அமரதாஸ் 
2018-10-03

Saturday, September 15, 2018

தமிழர் அழுத கண்ணீர் வீணானதா?



ஓவியர், ஊடகர், கவிஞர், எழுத்தாளர், ஒளிப்படக் கலைஞர் எனப் பன்முகப் பாரம்பரியம் கொண்ட அமரதாஸினால் இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் கண்காட்சி அண்மையில் சுவிஸ் நாட்டின் வர்த்தகத் தலைநகரான சூரிச் மாநகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. “தமிழர்களின் கண்ணீர்’ என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட இந்தக் கண்காட்சியை பல்கலைக் கழக மாணவர்களும், ஆர்வலர்களும் பார்வையிட்டிருந்தனர்.

ஓவியங்களே அமரதாஸின் விருப்புக்குரிய துறையாக இருந்த போதிலும், காலச் சூழல் அவரை ஒரு ஒளிப்படக் கலைஞனாக மாற்றியிருந்தது. தனது மனச்சாட்சியை ஏமாற்றாமல் முடிந்த அளவில் தனது பணியை, சமூக அக்கறையோடு அவர் நிறைவேற்றி உள்ளார் என்பதை அவரது ஒளிப்படங்களைப் பார்வையிடும் அனைவரும் புரிந்து கொள்வர்.

ஒரு ஊடகவியலாளனைப் பொறுத்தவரை அவன் எடுக்கின்ற ஒளிப்படங்களைப் பிரசுரம் செய்வதோடு அவனது பணி நிறைவுக்கு வந்து விடுகின்றது. அதையும் தாண்டி தன்னால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தி, அவை தொடர்பான ஒரு பரப்புரையை மேற்கொள்ளும் போது அவனது பாத்திரம் ஊடகவியலாளன் என்பதற்கும் அப்பால் பரந்து விரிந்து பயணிக்கத் தொடங்குகின்றது. ஊடகங்களில் காட்சிப் படுத்தப்பட்ட ஒளிப்படங்கள் சொல்லிய சேதியை விடவும் ஒளிப்படக் கண்காட்சிகள் சொல்லுகின்ற சேதிகள் ஆழமானவை, அகலமானவை.

அந்த வகையில், “தமிழரின் கண்ணீர்’ தனது பணியைச் செவ்வனே செய்திருக்கின்றது எனத் துணிந்து கூறலாம்.

ஈழத் தமிழரின் கண்ணீர் பல கதைகளைக் கூறும் வகையினது. பல சரித்திரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐரோப்பிய ஜனநாயகக் கூறுகளை மாத்திரம் அளவீடாகக் கொண்டு நோக்குபவர்களால் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாதது. “பாவத்தின் சம்பளம் மரணம்’ எனப் பழங்கதை பேசுபவர்களின் பட்டியலில் அடங்காதது. “போரில் மனித இழப்பு தவிர்க்க முடியாதது’ என வரட்டுத் தத்துவம் பேசுபவர்களால் அறிந்து கொள்ள முடியாதது. இரத்தமும், சதையும், கண்ணீரும் என வாழ்ந்து, போரின் துயர்களுக்கு முகங் கொடுத்து, “பறிகொடுக்கக் கூடாத’ அத்தனையையும் பறிகொடுத்து, உயிர் தப்பி, நடைப் பிணங்கள் போன்று வாழ்ந்து கொண்டு, “எங்களை இரட்சிக்க மேய்ப்பன் ஒருவர் வர மாட்டாரா?’ என ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களால் மாத்திரமே ஈழத் தமிழரின் கண்ணீரை முழுவதுமாக விளங்கிக் கொள்ளவும், புரிந்து கொள்ளம் முடியும்.

அத்தகைய ஒரு விளக்கத்தை, புரிதலை ஏனையோரிடத்தில் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே அமரதாஸின் ஒளிப்படக் கண்காட்சியை நோக்க வேண்டும். அமரதாஸ் குறிப்பிடுவதைப் போன்று ஒளிப்படங்கள் மிகவும் காத்திரமான ஊடகங்கள். அவற்றில் பொய்மை இருக்க முடியாது. உள்ளதை உள்ள படியே பதிவு செய்யும் அவை கறுப்பு வெள்ளை நிறங்களில் காட்சிப் படுத்தப்படும் போது, தாம் கொண்டிருக்கும் கருத்தை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றன. அவரது கருத்தை ஒட்டியே, அவர் காட்சிப் படுத்திய ஒளிப்படங்கள் யாவும் கறுப்பு வெள்ளையிலேயே வைக்கப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது.

இது மே மாதம். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த மாதம். தமிழர்களின் வீரத்தையும், வேதனைகளையும் நினைவு கூர்வதற்கான மாதம். இழப்புக்களின் நினைவு கூரலில் எதிர்கால செயற்பாடுகளுக்கு வழிகோலும் தருணம். இந்தக் காலகட்டத்தில் குறிப்பறிந்து இந்த ஒளிப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருப்பது அதிலும் சுவிஸ் நாட்டவர்களை இலக்கு வைத்துச் செய்யப் பட்டிருப்பது சாலப் பொருத்தமானது.

வெறுமனே துயரங்களை மாத்திரம் காட்சிப் படுத்தாமல், போரின் வடுக்களை மாத்திரம் காட்சிப் படுத்தாமல், போர்க் காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியல் சம்பவங்களையும் காட்சிப் படுத்தியதன் ஊடாக, தான் ஒரு பரப்புரையாளன் என்ற வரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒரு சிறந்த ஊடகவியலாளன் என்பதை அமரதாஸ் நிரூபித்து நிற்கிறார்.
அது மாத்திரமன்றி, புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் ஊடகவியலாளர்கள் தாயகத்திலே பெரிதாக எதுவும் சாதித்து விடாமல், புலம்பெயர்ந்த நாட்டிற்கு வந்த பின்னரே புகழைத் தேடிக் கொண்டார்கள் என “அப்பாவித் தனமாக(?)’ நினைக்கும் ஒருசிலரின் எண்ணங்களையும் அமரதாஸின் ஒளிப்படக் கண்காட்சி உடைத்திருக்கிறது.

இத்தகைய கண்காட்சியை அமரதாஸ் அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடாத்தி இருக்கிறார். தற்போது சூரிச் மாநகரில் நடைபெறும் கண்காட்சியைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற கண்காட்சியைத் தொடர இருக்கிறார். அது மாத்திரமன்றி, ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைச் சபையிலும் நேரில் தோன்றி சாட்சியம் வழங்கி இருக்கிறார்.

ஒரு ஊடகவியலாளனாய், போர்க் காலத்திலே பணியாற்றிய ஒருவனாய் தனது பணியை அவர் தொடர்கிறார் என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமான ஒரு செய்தி அல்ல. ஊடகவியலாளர்களாகப் புலம்பெயர்ந்த பின்னர் “பொதுமக்களாகிப்’ போன தமிழ் ஊடகர்களுக்குமான அழுத்தமான செய்தியே.

“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்’ என்பது தமிழில் உள்ள ஒரு சொல்வகை. அதன் அர்த்தம் ஏழையின் கண்ணீரில் இருந்து உருவாகும் செயற்பாடு ஒரு மாற்றத்தை, புரட்சியை நோக்கிச் செல்லும் என்பதே. தமிழர்கள் சிந்திய கண்ணீருக்கு அளவே இல்லை. கடந்த காலத்தில் மட்டுமன்றி நிகழ்காலத்தில் கூட தினம் தினம் தமிழர்கள் கண்ணீர் சிந்திய வண்ணமே உள்ளார்கள். ஆனால், அந்தக் கண்ணீர் ” மழுங்கிய கத்திகளாகவே’ வீணாகிப் போகின்றன.

இத்தகைய அவல நிலைக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஈழத் தமிழர் அரசியலை நகர்த்திச் சென்றவர்கள். இன்றும் நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். பதில் சொல்வார்களா?

சுவிசில் இருந்து சண் தவராஜா
நன்றி-தினக்குரல் 2018-05-21
http://thinakkural.lk/article/10283

Thursday, September 6, 2018

Destroyed cage.




துயர் பெருக்கும் இறுதிப் போர்க்காலம்... தமிழ் மக்கள் குடியிருப்புகளின் மேல், சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் அவ்வப்போது நடந்துகொண்டிருந்தன.

நீண்ட தூரம் இடம் பெயர்ந்து அலைந்தவர்கள் செறிவாகத் தங்கியிருந்த இரணைப்பாலை என்ற இடத்திலே, தற்காலிகக் கொட்டகை ஒன்றின் மேலேயே எறிகணை ஒன்று விழுந்து வெடித்தது. அந்த இடத்தில், தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடக்கக் கூடும் என்று அஞ்சிய பலரும் ஆங்காங்கே ஓடிப் பதுங்கிக்கொண்டார்கள்.

அயலவர் சிலருடன், எறிகணை வெடித்த திசையினை நோக்கி உடனடியாகவே விரைந்தேன். (பல தடவைகள் நான் இடம்பெயர்ந்து, இரணைப்பாலை என்ற இடத்தை அடைந்திருந்தேன். அங்கு நான் தற்காலிகமாக வசித்த கொட்டகைக்கு மிக அருகில், கிட்டத்தட்ட 50 மீற்றர் தூரத்திலேயே அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.)

புழுதியும், புகையும், மரண நெடியும் படிந்த சிதிலங்களிடையே அதிர்ச்சியில் உறைந்து எதையோ தேடிக்கொண்டிருந்தார் அவர். மகனும் மனைவியும் பெரு வெடிப்பில் உருக்குலைந்து போயிருந்த விபரீதத்தை அப்போது தான் உணரத்தொடங்கியிருந்தார். ஒரு குடும்பத்தைக் கொண்டிருந்த அவர் மட்டுமே மயிரிழையில் உயிர் பிழைத்திருந்தார் அப்போது. அந்த விபரீத நிலையில், அவர் என்ன நினைத்தாரோ...? யாரை நினைத்தாரோ...? அவரே, சிதைந்த உடல்களின் பாகங்களைத் தேடித்தேடிக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தார். இதயத்தின் குமுறலை, விரல்களில் தாங்கிக்கொண்டிருந்தவரின் தோற்றம், என்னை வியப்பிலும் வேதனையிலும் ஆழ்த்திக்கொண்டிருந்தது. அயலவர் சிலரும் அவருடன் இணைந்து, இரண்டு சடலங்களின் சிதைவுகளையும் தேடிக்கொண்டிருந்தார்கள்.

கொல்லப்பட்டிருந்தவர்களின் உருவப்படங்களைக் கண்டெடுத்தேன். அந்தப் பதின்பருவத்துப் பையனின் முகத்தை, இனி எப்போதும் அவனால் பயன்படுத்த முடியாத 'பயண அனுமதி அட்டை' ஒன்றிலே அப்போது தான் பார்த்தேன். (அந்தப் 'பயண அனுமதி அட்டை', 'தமிழீழம்' என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டமைத்திருந்த 'நிழல் அரசாங்க' அடையாளங்களில் ஒன்று.)

உருக்குலைந்து சிதறிக் கிடந்த சடலங்களின் பாகங்கள், இரண்டு பொதிகளில் அடுக்கப்பட்டன. அருகில் இருந்த ஒரு பற்றைக்கிடையில் புதைப்பதற்காக, அவற்றை எடுத்துச் சென்றார்கள் அயலவர்கள்.

அவர் கடைசியாக நடந்தார். 'நடைப்பிணம்' என்னும் மொழிவழக்கின் காட்சிப்படிமம் என் கண்களின் முன்னே... கடைசியாக அவர் நடந்தார். அவரை நான் பின்தொடர்ந்தேன்.

பயண வழியில், கிளைகளை இழந்திருந்த ஒரு அடிமரத்தின் விளிம்பில், தனித்திருந்து விசும்பிக்கொண்டிருந்தது சிறு குருவி.

ஒரே குழியில், மகனையும் மனைவியையும் இரண்டு பொதிகளாய் இறக்கிவைத்தார். பிறகு, தன் தீனக்குரலை உருவியிழுத்துக் கைகளில் ஏந்தி என்னவோ சொன்னார். அப்போது என்னவோ சொன்னார்....என்ன சொன்னாரோ...?

அவர் இனி என்ன செய்வார்...? எங்கு செல்வார்...? தன்னிச்சையாகத் தோன்றிக்கொண்டேயிருந்தன கேள்விகள். யுத்தத்தில் கொல்லப்பட்டோரினதும் காணாமல் ஆக்கப்பட்டோரினதும் உறவினர்கள் பெறும் பெருவலியை, எழுத்தில் இறக்கிவிட முடியுமா...? சுயாதீன ஊடகராயிருந்து, என் சனங்களின் அவலங்களைப் பதிவாக்கிய அனுபவங்கள் அதீதமானவை.

அன்றைய காலையின் ஒளியிலே படர்ந்த அவலத்தின் கோடுகள், என் கமெராவில் பதிவாகிக்கொண்டிருந்தன. கலங்கிக்கொண்டிருந்த என் கண்களால் குவியப்படுத்தலை (focus) மேற்கொள்ளச் சிரமாயிருந்தது.

அவலத்தில் விடிந்த அந்த நாளின் பின்னர், அவரை எங்கும் நான் காணவேயில்லை. போர் முடிந்த பிறகு, மீள்குடியேறி, மனநோயில் உழன்று, அவரும் அநாதரவாக இறந்து போனாராம். ஆக, அந்தக் குடும்பத்தில் யாருமே இன்றில்லை.

என் படங்களின் கோடுகளில் படர்ந்துகொண்டேயிருக்கின்றன, சந்ததியின்றி அழிந்துபோய்விட்ட அந்தக் குடும்பத்தின் நினைவுகள்.

2018-09-06
அமரதாஸ்

Tuesday, September 4, 2018

பேரைச் சொல்லவா...அது நியாயமாகுமா...?



முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி பற்றிய பதிவுகள், அவரது மறைவைத் தொடர்ந்து சமூக  வலைத்தளங்களில் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. கருணாநிதியின் பெயருக்குப் பதிலாக, 'கலைஞர்' என்ற பொதுவான வார்த்தை தான், பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பிரயோகிக்கப்படுகிறது. அதுவே அவரை மதிப்புடன் அழைப்பதற்கான 'பட்டப்பெயர்' என்று கருதப்படுகிறது. (அது, அவரது 'புனைபெயர்' அல்லது 'மாற்றுப் பெயர்' அல்ல என்பது கவனத்துக்குரியது.) 

கருணாநிதி பற்றிய நிகழ்வொன்றில், அவரது பெயரைக் குறிப்பிட்டு ஊடகர் திரு. சமஸ் உரையாற்றிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், இடையில் சிலர் எழுந்து “கருணாநிதி என்று சொல்லாதே, கலைஞர் என்று சொல்” என்று கத்தியிருக்கிறார்கள். அந்த சர்ச்சை குறித்து, சமஸ் தனது முகநூலில் எழுதியிருந்தார். இத்தகைய சர்ச்சைகள் குறித்த எனது நிலைப்பாடு தொடர்பாக ஏற்கெனவே பலருடன் பலமுறை பேசியும், அவ்வப்போது எழுதியும் வந்திருக்கிறேன். 

கலைஞர் என்ற சொல்லானது பொதுவாகக் கலைத்துறை சார்ந்தவர்களுக்கானது. அது, தனக்கெனப் பிரத்தியேகமான அர்த்த பரிமாணத்தையும் நீண்டகாலப் பாரம்பரியத்தையும் கொண்டது. கருணாநிதி என்னும் பெயரை மறைத்து, 'கலைஞர்' என்ற சொல்லை மட்டும் பெயருக்குப் பதிலாகப் பிரயோகிப்பது நியாயமாகுமா? அவரை விடவும் காத்திரமாகக் கலைப்பணியாற்றிய பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பெயர் குறிப்பிட்டு அழைக்காமல், 'கலைஞர்' என்று பொதுவாக அழைத்தால் எப்படியிருக்கும்?       

ஒருமுறை எழுத்தாளர் திரு. ஜெயகாந்தனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட  கருணாநிதி, 'கலைஞர் பேசுகிறேன்' என்று முதலில் சொன்னாராம். 'நானும் கலைஞர் தான், சொல்லுங்க' என்று பதிலுக்குச் சொன்னாராம் ஜெயகாந்தன். இதை அறிந்தபோது குபீரென்று சிரிப்பு வந்தது. கூடவே, நடிகர் திரு. வடிவேலு திரைப்படத்தில் பேசிப் பிரபலமான 'நானும் ரவுடி தான்' என்ற வசனம் நினைவுக்கு வந்தது. ஒருவகை  அறச்செருக்குடன், எள்ளலுடன் ஜெயகாந்தன் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். அடிப்படையில் அவரும் 'கலைஞர்' தான். கலைத்துறை சார்ந்து இயங்கிய கருணாநிதியை, 'கலைஞர் கருணாநிதி' என்று  'அழைப்பது' பொருத்தமாக இருக்கலாம். 'கலைஞர்' என்ற பொதுச் சொல்லானது, கருணாநிதியின் தனியுடமையாகக் கட்டமைவது தான் கேள்விக்குரியது.

யாருக்காக, எங்கு, எத்தகைய பட்டப்பெயரை ஒருவர் பிரயோகிக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது. இருந்தாலும், அது சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் கவனிக்கப்படவேண்டியவை. தனிநபர் துதிபாடல், வழிபாட்டு மனோபாவம், அதீத அபிமானம், அதீத விசுவாசம் போன்ற பின்னணிகளில் இருந்து ஒருவர் மீதான பட்டப்பெயர் கட்டமைக்கப்படுகிறது. இதுபோலவே, ஒருவரை இழிவாகச் சித்தரிக்கும் வகையிலான பட்டப்பெயர்களும் கட்டமைக்கப்படுகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியது. ஒருவரை நேசிக்கவும் புகழவும் அல்லது வெறுக்கவும் இகழவும், பட்டப்பெயர் மட்டுமே உண்மையான காரணியாக அமைந்துவிடுவதில்லை. இருந்தாலும், பட்டப்பெயர்கள் சமூகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. கலாச்சாரம், அதிகாரம் மற்றும் அரசியல் போன்ற காரணிகள், பட்டப்பெயர்களின் உருவாக்கத்தில் அதிகமதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன. பட்டப்பெயராக வழங்கப்படுகிற பல சொற்கள், பெரும்பாலும் 'துஸ்பிரயோகம்' ஆவது நடைமுறை யதார்த்தமாகத் தொடர்கிறது. அதிகாரத்தின் பிரயோகமாக, பொருத்தமில்லாத நடைமுறையாக, வழிபாட்டின் விம்பமாக  ஒரு  பட்டப்பெயர் மாறும்போது பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.   

'பட்டப்பெயரை' ஒருவரின் 'மரியாதைக்குரிய' அடையாளப் பெயராக ஆக்கிவிடுவது மொழியியல், சமூகவியல் நோக்கில்  ஆரோக்கியமானதல்ல. பெரியார் என்று ஈ.வே.ராமசாமியையும் மகாத்மா என்று காந்தியையும் கலைஞர் என்று கருணாநிதியையும் அம்மா என்று ஜெயலலிதாவையும்  அழைப்பது எல்லோருக்கும் உவப்பானதாக இருக்குமா? மக்கள் அபிமானம் பெற்று சமூக முக்கியஸ்தர்களாகக் கருதப்படுகிறவர்களின்  அசலான பெயர்களை, ஜனநாயக வெளிகளிலும் ஊடகங்களிலும் புழக்கத்தில் கொண்டுவருவது தான் ஆரோக்கியமானது.

சினமாவிலும் இலக்கியத்திலும் நன்கு அறியப்பட்டிருந்த ஒருவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழைப்பில் தமிழகத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்திருந்தார். ஒரு நாள், அவருடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நடிகர் திரு.விஜய் நடித்த ஒரு திரைப்படத்தின் விளம்பரத்தை அங்கிருந்த சிறிய திரையரங்கிலே காண முடிந்தது. அதில் 'இளைய தளபதி விஜய்' என்று எழுதப்பட்டிருந்தது. ''எத்தனையோ உண்மையான தளபதிகள் இருக்கும் இந்த இடத்தில், ஒரு நடிகரின் பெயருடன் 'தளபதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாமே...'' என்று அந்தத் தமிழக நண்பர் அப்போது சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.    

தமிழைப் பொறுத்தவரையில் எழுத்தில்  மதிப்புடன் ஒருவர் பெயரை அடிக்கடி  பயன்படுத்த வேண்டியிருந்தால் ஆரம்பத்தில் மட்டும்  'திரு', 'அவர்கள்' போன்ற  ஏதாவது ஒரு சொல்லைப் பயன்படுத்துவதே போதுமானது. 'திரு', 'அவர்கள்', 'மேதகு'  போன்ற மதிப்புக்குரிய சொற்களை, ஒரு பெயரின் முன்னும் பின்னுமாக அடுக்க வேண்டிய அவசியமேயில்லை. பெயர்களை மறைத்துவிட்டு, தலைவர், கலைஞர், தேசியத் தலைவர், அம்மா, தளபதி, பண்டிதர், பெரியார், மகாத்மா, கவிப்பேரரசு, சுப்பர் ஸ்டார், உலக நாயகன் என்றெல்லாம் பதவி நிலைகளாலும் பட்டங்களாலும் மனிதர்கள் முன்னிறுத்தப்படுவது ஆரோக்கியமானதா? இத்தகைய வழக்கமானது, சார்புநிலைப்பட்டதாகவும் வழிபாட்டு மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் தமிழ்ச் சமூகத்தில் தொடர்வதைத்தான் அவதானிக்க முடிகிறது.

ஒரு தரப்பினரால் 'தலைவராக' ஏற்றுக்கொள்ளப்படுகிறவர், 'மாற்றுத் தரப்பினர்' எல்லோரினதும் 'தலைவர்' ஆகிவிட  முடியுமா? ஒரு 'கலைஞர்' தான் இருக்க முடியுமா? ஒரு 'கவிப்பேரரசு' தான் இருக்க முடியுமா? ஒரு 'தேசியத் தலைவர்' தான் இருக்க முடியுமா? ஒரு 'பெரியார்' தான் இருக்க முடியுமா? ஒரு 'மகாத்மா' தான் இருக்க முடியுமா? இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுப் பார்ப்பது நல்லது.

ஒருவரைப் பற்றிய பதிவொன்றில், அவரது பெயரும் தனித்துவமான அடையாளங்களும் விபரங்களும் மதிப்பீடுகளும் தான் முக்கியமே தவிர, 'பட்டப்பெயர்' அல்ல. ஒரு பதிவின் பல்வேறு இடங்களில் ஒருவரது பெயர் பாவிக்கப்பட நேர்கையில், மரியாதையினை வெளிப்படுத்தும் 'திரு' போன்ற முன்னொட்டுக்களையோ 'அவர்கள்' போன்ற பின்னொட்டுக்களையோ எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டியதில்லை. தொடக்கத்தில், ஒரு இடத்தில் மட்டும் பயன்படுத்தினால் போதும். சர்வதேச அளவில் பிரபலமான ஊடகங்களில், கட்டுரை அல்லது செய்தி போன்றவற்றில், முக்கிய பிரமுகர்களினது பெயர்கள் கையாளப்படும் 'ஊடக முறைமை' கவனிக்கப்பட  வேண்டியது. (தமிழில் சில விடயங்கள் சிக்கலானவையாகவே தொடர்கின்றன.) 

மொழி என்பது அடிப்படையில் விஞ்ஞான பூர்வமானது. அதனால் தான் மொழி சார் இலக்கணங்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன. மொழியின் இருப்புத் தொடரவும் வளர்ச்சியடையவும் விஞ்ஞான பூர்வ அடித்தளமே  வழிவகுக்கிறது. மொழியானது, அதன் பிரயோக நிலையிலே தான் உணர்வுபூர்வ பரிமாணங்களை அடைகிறது. உண்மையில், தமிழை நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழ் மொழியின் இனிமை, அறிவியல் போன்ற பின்னணிகள் தொடர்பிலான தேடலைப் படைப்பாக்க வழிமுறைகளில் தொடர்கிறேன். மொழியின் மரபில் தொடரும் கசடுத்தனங்களை அறியவும் விலகி நடக்கவும் விழைகிறேன். ஒரு எழுத்தாளர் மற்றும் ஊடகர் என்ற முறையில், இயன்றவரையிலும் தெரிந்தவரையிலும் தமிழை நான் செம்மையாகவே பிரயோகிக்க முனைவேன்.

விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்தவர் திரு. பிரபாகரன். அவரைப் பற்றி எங்காவது நான் குறிப்பிட நேர்ந்தால், அவரது பெயரைக் குறிப்பிடுவது வழமை. (ஊடகவியல் மரபின் அடிப்படையிலான எனது சுயாதீன நடைமுறை அது.) இதனால், பிரபாகரனின் தீவிர விசுவாசிகளாகக் காட்டிக்கொள்கிற, ஊடகவியல் மொழியின் சாத்தியப்பாடுகளைப் புரிந்துகொள்ளாத சிலர், தமது 'எதிர்ப்புகளை' வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அவர்களது 'அறியாமை', 'தீவிர விசுவாசம்' போன்றவற்றின் எதிர் வெளிப்பாடுகளை என்னால் 'புரிந்துகொள்ள' முடிந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாது. இயன்றவரை, எனது நிலைப்பாட்டினை எழுத்திலும் நேரிலும் சிலருக்கு விளக்கியிருக்கிறேன். எது எப்படியிருந்தாலும், யாரைப் பற்றியாவது எழுத நேரும் போது, அவர் எத்தகைய பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும், ஊடகவியல் பண்புகளின் அடிப்படையில் அவரது பெயரைக் குறிப்பிட்டே எழுதுவேன். அதனால், அந்தப் பெயருக்குரியவருக்கு எந்த மரியாதைக் குறைவும் ஏற்பட்டு விடாது.   

'பேரைச் சொல்லவா...அது நியாயமாகுமா...?' என்ற திரை இசைப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பெயரைச் சொன்னால் என்ன தான் குறைந்துவிடப் போகிறது..? பெயரில் என்ன இருக்கிறது? ஒருவரை நினைவுபடுத்த, அழைக்க உதவும் அடையாள வார்த்தையாகவே பெயர் அமைந்திருக்கிறது. கணவன் பெயரை மனைவி சொல்வது, மரியாதைக் குறைவாகும் என்று நம்பக்கூடிய  தமிழ்ச் சமூகத்தின் 'நுட்பமான' ஆதிக்க மனோபாவத்தையும் மொழியோடு வன்புணரும் கலாச்சாரக் கசடுத்தனங்களையும் உற்றுக் கவனிக்க வேண்டும். பரஸ்பரம் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில் சுயமரியாதை, தோழமை பேணப்பட முடியும். சுவிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், குடும்ப அமைப்பிற்குள் பரஸ்பரம் பெயர் சொல்லியே பெரும்பாலும் அழைத்துக்கொள்வார்கள்.   

சமூகப் பிரபலங்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்பும் 'அதிகாரிகள்' முன்பும்  எழுந்து நிற்றல், காலில் விழுந்து வணங்குதல் போன்ற செயல்கள் மூலம் உண்மையிலேயே 'மரியாதை' வெளிப்பட்டு விடுகிறதா? அதிகார இருப்பிற்கான அங்கிகாரமாக, கீழ்படிதலின் அல்லது தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடாக, வெறும் சம்பிரதாய நடைமுறையாக அத்தகைய செயல்கள் பெரும்பாலும் அமைந்து விடுகின்றன.

படைப்பாளிகள் மற்றும்  போராளிகள் பலருடன், விடுதலைப் புலிகளின்  தலைவர் பிரபாகரன் கலந்துகொண்ட ஒரு பிரத்தியேக நிகழ்வில், ஒரு படைப்பாளியாக நானும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. திரு. பொட்டு மற்றும் திரு. தமிழ்ச்செல்வன் போன்றவர்களுடன் மேடைப் பகுதியில்  இருந்த பிரபாகரன், ஒரு தேவைக்காக எழுந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து எழுந்து நின்றுவிட்டார்கள். அந்த இடத்தில், எல்லோரும் எழுந்து நிற்க வேண்டிய 'அவசியம்' இருக்கவில்லை. அந்த இடத்தில் பிரபாகரன் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இது பற்றி, அப்போது சில நண்பர்களுடன் பேசியிருக்கிறேன். 'சுவாரசியமான' அந்த அனுபவத்தையும், அந்த நிகழ்வில் பிரபாகரனிடம் இருந்து  அவதானிக்க முடிந்த சில நற்பண்புகளையும் தனியாகப் பிறகு ஒரு தருணத்தில் பதிவுசெய்யலாம் என்று தோன்றுகிறது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சில நண்பர்கள் இன்னமும் வாழ்கிறார்கள். 

2018-09-04
அமரதாஸ்

கமல் - BIGG BOSS - காலில் விழுதல்



மனித உணர்வுகளுடன் 'விளையாடும்' தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவே பெரும்பாலும் 'பிக்பாஸ்' காட்சியளிக்கிறது. இது பொதுவாகவும் சுருக்கமாகவும் சொல்லக்கூடிய கருத்து. இது விரிவான விவாதத்திற்குரியது. அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு ஊடக நிகழ்ச்சி என்ற வகையில், அது பற்றிய தெளிவான 'புரிதல்' அவசியமாகும். (ஆய்வு நோக்கில் மட்டுமே, அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.) 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என்றுபிரத்தியேகமான வணிக நோக்கங்களே முதன்மையானவையாக உள்ளன. அதனை, அதன்போக்கில் யார் வந்து நடத்தினாலும் இப்படித்தான் இருக்கும். என்றாலும், கமல் நடத்தும் போது, அது அவருக்கான நிகழ்ச்சியாகவும் ஆகிவிடுகிறது. அவர் அப்படியாக ஆக்கிவிடக் கூடியவர். சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடிகர் திரு. கமல்ஹாசன் வந்து செல்லும் நிகழ்ச்சிப் பகுதிகளில், சில 'நல்ல விடயங்கள்' நடந்திருக்கின்றன.

இன்றைய நிகழ்ச்சியில், திரு. டானியல் வெளியேறும் படலத்தில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சம்பவம் அடங்கியிருந்தது. கமலின் காலில் விழ முயன்ற டேனியை நிறுத்தி, ''அதுக்கு இன்னொரு வழி இருக்கு'' என்று சொல்லிக்கொண்டே கட்டிப்பிடித்துக்கொண்டார் கமல்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கமல். அவரை எனக்குப் பிடிப்பதற்கான காரணங்களில் ஒன்று அது. ஆனால், 'ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்' என்று அவரைப் பிறர் சொல்லும்போது, 'ஆமோதிப்பது போல' அவர் நடந்துகொள்வதை எப்படிப் புரிந்து கொள்வது? நேற்று, திரு.பாலாஜி அப்படிச் சொல்லும்போது 'அமைதியாக' இருந்துவிட்டார் கமல். அவருக்குள் ஒருவித 'மேட்டிமைத்தனம்' தொழிற்படுகிறதோ என்னவோ?

எதற்காகவும் காலில் விழுவது தவிர்க்கப்பட வேண்டியதே. கட்டி அணைத்தல், கைகுலுக்குதல் போன்ற நடத்தைகளில், பரஸ்பர அன்பும் மதிப்பளித்தலும் பேணப்பட முடியும். பொதுவாக மனித நடத்தைகளில், பரஸ்பர சுயமரியாதை பேணப்பட வேண்டியது அவசியமாகும்.

2018-09-02
அமரதாஸ்

Friday, June 22, 2018

ஊடக அற மீறல்.



ஒரு அமைப்பின் (PLOTE) ஆரம்பகாலப் பயிற்சிமுகாம்  காட்சிகளை YouTube தளத்தில் மிக அண்மையில் பார்த்திருந்தேன். அதிலிருக்கும் சில பயிற்சிக்  காட்சிகள், IBC தொலைக்காட்சி யின்  நிகழ்ச்சியொன்றில் ('தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்! - வெளிவரும் அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்') பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மூலக் காட்சிகளில் 'Swiss Ranjan PLOTE' என்று பதிக்கப்பட்டிருந்த எழுத்துகள், IBC தொலைக்காட்சி யில் பயன்படுத்தும் போது அழிக்கப்பட்டிருப்பது ஊடக தர்மத்தின் அடிப்படையில் நியாயமானதல்ல. இரண்டையும் YouTube  மூலம்  அண்மையில் நான் அடுத்தடுத்துப் பார்க்க முடிந்தமையால்  இதனைக் கண்டுபிடிக்க முடிந்தது. இப்படியான காரியங்களில் சில 'ஊடகங்கள்' அவ்வப்போது செயற்பட்டு வருவது புதிதல்ல என்றாலும், இப்போது ஆதாரபூர்வமாக  அறிந்த இதனைப் பதிவுசெய்யத் தோன்றியது. ஒருவேளை, சம்மந்தப்பட்டவர்களிடம் முறையான அனுமதி பெற்று எழுத்துகள் அழிக்கப்பட்டிருந்தால், அது ஊடக தர்மத்துக்கு உட்பட்டதாக அமைந்திருக்கக் கூடும்.

சுவிஸ் ரஞ்சன் என்பவரோ  புளொட் அமைப்பினரோ என்னுடன் தொடர்பில் உள்ளவர்களல்ல. IBC தொலைக்காட்சி மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை. ஒரு சுயாதீன ஊடகராக, எனது ஊடகவியல் அனுபவ அறிவின் அடிப்படையில் எனது 'பார்வையினை' இங்கு பதிவுசெய்கிறேன். அவ்வளவு தான். இது, கடந்து போய்விடக்கூடிய 'சிறிய' விடயமாகப் பலருக்கும் தோன்றக் கூடும். ஆனால், இத்தகைய விடயங்களை ஊடக உலகத்தில் 'அனுமதிப்பது' ஆபத்தானதாகும்.   

வரலாற்று ஆதாரங்களை, தகவல்களை, படங்களை  எங்கிருந்தும் யாராலும் பெற முடியும். அவற்றின்  உண்மைத்தன்மையினையோ பின்னணித்தகவல்களையோ மறைக்க முயல்வது ஊடக தர்மத்தின் அடிப்படையில் இழுக்கான காரியமாகும். அது அறமற்றது. ஒருவருக்கு உரித்துடைய ஆவணம் ஒன்று, நல்ல நோக்கத்திற்காக எடுத்தாளப்படும் போது, உரித்துடையவரின் 'பெயர்' திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுவது அறமல்ல. ஒரு இடத்தில்  இருந்து ஒன்றைப் பெறுவது விருப்பமில்லையெனில் அல்லது பெறுவதில் உடன்பாடில்லையெனில், அதைப் பெறாமலேயே இருந்துவிடலாமே... இன்னொருவரினதோ இன்னொரு அமைப்பினதோ ஆவணத்தின் உண்மைத்தன்மையை  மறைக்க முயல்வது மோசமான  ஊடக ஊழலாகும். தயவுசெய்து  இத்தகைய ஊழலை ஊடகங்களும் தனிமனிதர்களும் இனியாவது செய்யாமலிருக்க வேண்டும்.



விடுதலைப் புலிகளுக்கும் இந்திய  இராணுவத்தினருக்கும் இடையிலான  மோதல் இடம்பெற்ற  காலத்தில், விடுதலைப் புலிகள் வளர்த்த சிறுத்தை ஒன்று கைவிடப்பட்டது பற்றி, நேற்று ஒருவர் தனது முகநூலில் பதிவுசெய்திருந்தார். அந்தப் பதிவினை, இன்று இரண்டு நபர்கள் தமது முகநூலில் எழுதியவரின் பெயர் போடாமல் அப்படியே மீள்பதிவு செய்திருந்தார்கள். இத்தகைய பொறுப்பற்ற செயல்களை முகநூலிலும்  அடிக்கடி காண முடிகிறது. முகநூலும் அடிப்படையில் ஒரு ஊடகமாகும். அதனாலேயே அது சமூக வலைத்தளம் என்று சொல்லப்படுகிறது.

2018-06-22