Monday, April 9, 2018

இசையும் தமிழ் சினமாவும் - விரிவான ஆய்விற்கான முன் குறிப்புகள்.




நீண்ட காலமாக, தமிழ் சினமாவானது குறிப்பிடத்தகுந்த நல்ல இசைவெளிப்பாடுகளைத் தந்துகொண்டிருக்கிறது. அத்தகையவற்றைத்  தமிழ்த் திரைப்படங்கள்   நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது மிகவும் அரிது. பெரும்பாலும்,  தமிழ்த்  திரைப்படங்களில் பாடல்களின் வரிகளும் காட்சிப்படுத்தல்களும் தரமானவையாகவோ பொருத்தமானவையாகவோ அமைவதில்லை. தமிழ் சினமாவானது அதிகம்  நல்ல திரைப்படங்களைத் தந்ததில்லை. ஆனால், அது தமிழ்ச்  சூழலுக்கு வழங்கியிருக்கும் இசைவெளிப்பாடுகள் அல்லது இசைப் பாடல்கள்   கணிசமானவை, கவனிக்கப்பட வேண்டியவை.  அவை குறித்த ஆய்வுகள் பன்முகத் தன்மையோடு முன்னெடுக்கப்பட வேண்டியவை.

திரைப்படங்களில் இடம்பெற்ற இசைப்பாடல்களை, மோசமான காட்சிப்படுத்தல்களில் இருந்தும் வரிகளில் இருந்தும்  பிரித்துத் தனி  இசையாகவே அணுகும் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது, சுவாரசியமானது. திரைப்படங்களில் பொருத்தமில்லாமல் இடம்பெறும் பாடல்களை, அந்த இடங்களில்  நான் விரும்புவதில்லை. அத்தகைய பல பாடல்களை, வீடியோப்பாடல்களாகவோ ஓடியோப் பாடல்களாகவோ (இசைக் கோப்பு-Music Album) இசை நிகழ்ச்சிகளிலோ  அணுகுவதையே அதிகம் விரும்புகிறேன்.

சினமா என்ற கலையினைப் போல, இசைக் கலையினையும் நான்  தீவிரமாக நேசிப்பவன். இசையோடு வரிகளோ காட்சிகளோ இணையும் போது, உண்மையில் அந்த இணைவானது புதிய சாத்தியங்களை நிகழ்த்துவதாக, பல்பரிமாணத் தன்மை கொண்டதாக  அமைய வேண்டும். பல திரை இசைப் பாடல்களை, இசையின் ரசனைக்காக  நான் 'கரோக்கி' வடிவில் கேட்பதுண்டு. (‘ஓரளவு’ பாடுவேன் என்பதால் 'கரோக்கி' யோடு பாடுவதுமுண்டு) மோசமான காட்சிகளின் மற்றும்   வரிகளின் நீக்கமானது, இசையை நேரடியாக அணுகவும் நெருக்கமாக ரசிக்கவும்  சுவாரசியமாகத்  துணை புரிகிறது. இசை என்பது, உண்மையில் தனித்துவமான வெளிப்பாட்டுச் சாத்தியங்கள் கொண்ட  கலைச் சாதனம்  தானே.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உட்பட  மிகவும் சாதாரணமான நிலையில்  இருந்து தமிழ் சினமாவிற்குள் வந்தவர்கள் பலர். அத்தகையவர்களின் இசை முயற்சிகள், தமிழ்ச் சூழலில் பல்வேறு வகையிலான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

சினமாவில் வியக்கத்தக்க இசை வெளிப்பாடுகளை நிகழ்த்தியிருக்கும்  இசையாளர்கள் சிலர், சினமாவைத் தாண்டிய ஆரோக்கியமான இசை முயற்சிகளில் இறங்காமல் சினமா இசையாளர்களாக மட்டுமே மட்டுப்பட்டிருப்பது விரும்பத்தக்கதல்ல. மட்டுமல்ல, அத்தகையவர்களின் இசைப் பங்களிப்புகளைத் தமிழ் சினமாவானது பல சந்தர்ப்பங்களில் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது ஆரோக்கியமானதல்ல.

2015-11-22
அமரதாஸ்


Tuesday, April 3, 2018

புலம்பெயர் வாழ்வியலில் ஒரு ஓவியர்.


ஒரு கலை முயற்சியானது, அதில் ஈடுபடுகிறவரின் ஆளுமை விருத்தியில் ஆரோக்கியமான 'வினைத்திறன்' ஆற்றக்கூடியதாகும். ஆளுமை விருத்தி மற்றும் சமூகப்பயன்பாடு சார்ந்து, கலை முயற்சிகள் ஆற்றும் வினைத்திறன்கள் எப்போதும் 'மதிப்பீடு' செய்யப்பட வேண்டியவை. நெருக்கடிகள் பலவும் நிறைந்திருக்கும் புலம்பெயர் வாழ்வியலில், கலைசார் முயற்சிகள் எப்போதும் அவசியமானவை.   

தன்னார்வத்தில், தன்னிச்சையாக பெருமளவுக்கு ஒரு 'பிரதிமை' (Portrait) ஓவியராகத் தன்னை உருவாக்கிக் கொண்டு சுவிற்சர்லாந்து நாட்டில் வசித்துவரும் திரு. பாலேந்திரன் பரமேஸ்வரன் என்பவரைப் பற்றிய இந்தக் காட்சிப்பதிவானது, தமிழ்ச் சூழலில் முக்கியமாக புலம்பெயர் தமிழ்ச் சூழலில் கவனப்படுத்தப்பட வேண்டியது. இவரைப் போன்ற பல ஓவியர்களை நான் பல்வேறு இடங்களில் சந்தித்திருக்கிறேன். இத்தகையவர்களின் 'ஓவியத் திறன்' குறித்த மதிப்பீடுகள் எனக்குச் சுயமாக இருந்தாலும், இத்தகையவர்களது முயற்சிகளில் 'கலையாக்கம்' எந்த வகையில் பரிணமிக்கிறது என்ற தேடலை நிகழ்த்தி வந்திருக்கிறேன்.

ஒரு படத்தை அல்லது காட்சியைப் பார்த்து அப்படியே 'பிரதிசெய்வது' அல்லது 'அதேமாதிரியே' வரைவது நல்ல கலையாகுமா? அத்தகைய முயற்சிகள், எக் காலத்திலும் அல்லது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவசியம் தானா? ஒளிப்படக் கமெராக்களின் வருகைக்குப் பின்னர், 'பிரதிமை' ஓவியங்களின் இருப்பு அல்லது தேவை எப்படியாக இருக்க முடியும்? கலையின் சமூக மற்றும் தனிமனிதப் பயன்பாடுகள் எப்படிப்பட்டவை?...இது போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு, தமிழ்ச் சூழலில் ஆரோக்கியமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஓவியர் ரவிவர்மா போன்றவர்களது தாக்கம், இந்தியா முழுதும் இலங்கையிலும் இன்றுவரை உணரப்படுகிறது. மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் 'பிரதிமை' ஓவிய முயற்சிகள் பல்வேறு வகைகளில் நடந்திருக்கின்றன. அவற்றுக்கான தேவைகள் பலவகைப்பட்டவையாக இருந்து வருகின்றன. பிரக்ஞை குன்றிய நிலையில் அல்லது 'இயந்திரத்தனமாக' முன்னெடுக்கப்படும் கணனி அல்லது 'மென்பொருள் ஓவிய' முயற்சிகள், பிரதிமை ஓவிய முயற்சியாளர்களுக்குச் சவாலாகவே தொடர்ந்து வருவது நிகழ்கால யதார்த்தமாகும்.

தனிப்பட்ட வேலைப்பழுக்கள் உள்ளிட்ட நெருக்கடிகள் நிறைந்திருக்கும் புலம்பெயர் வாழ்வியலில், சுய வளர்ச்சி சார்ந்தோ ஆளுமை விருத்தி சார்ந்தோ சமூக முன்னேற்றம் சார்ந்தோ இயங்குவது சவாலானதாவே உள்ள நிலையில், ஆரோக்கியமான கலை முயற்சிகள் இனங்காணப்படவும் வரவேற்கப்படவும் பரவலாக்கப்படவும் புரிந்துகொள்ளப்படவும் வேண்டியவையாகின்றன.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் நெருக்கடிகளுக்குப் பின்னர் புங்குடுதீவுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து, பிறகு சுவிற்சர்லாந்து நாட்டிற்குப் புலம்பெயர்ந்து இப்போது சூரிச் நகர்ப்பகுதியில் வசித்து வரும் பாலேந்திரன் பரமேஸ்வரன் என்னும் ஓவியரை அறிமுகப்படுத்தும் வகையில், இந்தக் காட்சி ஆவணத்தை மிகவும் குறைந்த நேரத்தில் உருவாக்கியுள்ள திரு.ஜெயந்தன் நடராஜா வின் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சிகள் தொடர்பாகவும் பல்வேறு கலை, இலக்கிய முயற்சிகள் தொடர்பாகவும் என்னுடன் அடிக்கடி உரையாடுகிறவர் நண்பர் ஜெயந்தன். இன்னும் கொஞ்சம் நேரத்தை அதிகப்படுத்தி, 'மேலதிக நுணுக்கங்களுடன்' அவர் இதை உருவாக்கியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

அமரதாஸ்
2018-04-03

Sunday, April 1, 2018

தமிழ் மொழியின் பிரயோகத் திரிபு.



'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகம், தமிழ்ச் சூழலில் இப்போது பரவலாகியிருக்கிறது. அது, இலங்கையில் திரு.மைத்திரிபால சிறிசேன வின் அரசாங்க ஆட்சியைக் குறிக்கும் விதத்திலேயே பயன்பாட்டிலுள்ளது. பல்வேறு இடங்களிலும் இத்தகைய மொழிப் பிரயோகங்களைப் பார்க்க முடிகிறது. இத்தகைய மொழிப் பிரயோகங்கள், பொருள் வெளிப்பாட்டின் அடிப்படையில் பொருத்தமற்றவை. மட்டுமல்ல, 'பக்கச் சார்பான' அல்லது 'உண்மைக்கு' எதிரான தன்மையினை வெளிப்படுத்தக் கூடியவை.

'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகமானது, ஒருவகை உளவியல் திணிப்பை நாசூக்காக மேற்கொள்ளக் கூடியது. 'உடன்பாடான' உளவியல் நிலைப்பாட்டை ஏற்படுத்தி, அதை நிலைநிறுத்தும் உள் நோக்கத்துடன் அப் பிரயோகம் உருவாக்கப்பட்டிருக்கக் கூடும். ஒரு அரசாங்கத்தின் ஆட்சியானது உண்மையிலேயே நல்ல ஆட்சியாக அமைந்திருக்கும் தருணத்தில், அல்லது ஒரு அரசாங்கத்தின் ஆட்சியை நல்ல ஆட்சியாக ஒருவர் கருதுவதாக இருந்தால் மட்டுமே 'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகத்தினை மேற்கொள்ள முடியும். (அல்லது, 'நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகிற...' என்பது போன்ற மொழிக் கையாள்கையே நியாயமானதாக இருக்கும். ஆங்கிலத்தில் இத்தகைய 'புறவயப்பட்ட பிரயோகத்திற்கான' தேவை ஏற்படும் போது, ‘so called’ என்ற பிரயோகம் கையாளப்படுவது கவனிக்கப்படவேண்டியது.)

உண்மையில், இப்போது இலங்கையில் 'நல்லாட்சி' நடக்கவில்லை என்பதும், யுத்தத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழர் நலன்களில் உண்மையான கரிசனம் கொண்ட அரசாங்கமாக மைத்திரியின் அரசாங்கம் இல்லை என்பதும் எனது தனிப்பட்ட அவதானிப்பாகும். மைத்திரி அரசாங்கத்தை அர்த்தப்படுத்தும் வகையில், 'நல்லாட்சி அரசாங்கம்' என்ற பிரயோகத்தினை யாராவது தொடர்ந்தும் இனிக் கையாண்டால், அவர் மைத்திரி அரசாங்கத்தை நல்லாட்சி செய்யும் நல்ல அரசாங்கமாக நம்பியிருக்கிறார் என்றோ, மைத்திரி அரசின் சார்பாளர் என்றோ புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது.

'இறுதிப் போருக்குப்' பின்னர், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களை 'சிறைப்படுத்தி' வைத்திருந்த இடங்களை, 'புனர்வாழ்வு முகாம்' என்று சிறீலங்கா அரசு பொதுவெளியில் அடையாளப்படுத்தியிருந்ததும், அதையே பல்வேறு ஊடகங்கள் பிரயோகித்து வந்ததும் இவ்விடத்தில் பதிவுசெய்யக் கூடியது. சிறீலங்கா இராணுவத்தினரால் மோசமாக நிர்வகிக்கப்பட்டு, திறந்த வெளிச் சிறைச்சாலைகளாகக் காணப்பட்ட தமிழ் அகதிகள் முகாம்களை, 'நலன்புரி நிலையம்' என்ற பெயரில் சிறீலங்கா அரசு அடையாளப்படுத்தியிருந்தது
குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச் சூழலில் பல சொற்பதங்கள், பொருத்தமற்ற பிரயோகங்களால் கருத்துத் திரிபை அல்லது அர்த்தத் திரிபை அடைந்திருக்கின்றன.

கலைஞர் என்ற சொல்லானது பொதுவாகக் கலைத்துறை சார்ந்தவர்களுக்கானது. அது, தனக்கெனப் பிரத்தியேகமான அர்த்த பரிமாணத்தையும் நீண்டகால இருப்பையும் கொண்டது. கலைஞர் என்ற பொதுச் சொல்லானது, கருணாநிதியின் தனியுடமையாகக் கட்டமைவது தான் கேள்விக்குரியது. கருணாநிதி என்னும் பெயரை மறைத்து, 'கலைஞர்' என்ற சொல்லை மட்டும் பெயருக்குப் பதிலாகப் பிரயோகிப்பது நியாயமாகுமா? அவரை விடவும் காத்திரமாகக் கலைப்பணியாற்றிய பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பெயர் குறிப்பிட்டு அழைக்காமல், 'கலைஞர்' என்று பொதுவாக அழைத்தால் எப்படியிருக்கும்?

அம்மா, பெரியார், மகாத்மா, கற்பு, கற்பழிப்பு, மாவீரர், வீரச்சாவு, வீரவணக்கம், நாட்டுப்பற்றாளர், மாமனிதர், உணர்வாளர், தோழர், விமர்சனம், துரோகம், துரோகி, போராளி, கூத்தாடி, இனவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம்... இப்படியான பல சொற்களின் பயன்பாடுகளும் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட வேண்டும். வெறுமனே சம்பிரதாயபூர்வமாகவோ 'பாசாங்குத்தனமாகவோ' பல சொற்கள் பிரயோகிக்கப்படுவதும் இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டியது. (உ+ம் - உண்மை, அன்பு, நன்றி, நீதி, ஜனநாயகம்...)

ஒரு காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 'செல்வாக்கினால்' சில சொற்களின், சொற்றொடர்களின் 'நடைமுறை அர்த்தம்' திரிபடைந்திருக்கிறது. இன்றுவரை அத்தகைய 'திரிபார்ந்த' சொற்களின், சொற்றொடர்களின் பிரயோகம் நடைமுறையில் உள்ளது. சில புதிய சொற்களினதும் சொற்றொடர்களினதும் பிரயோகம் நடைமுறையில் உள்ளதும் குறிப்பிடப்பட வேண்டியது.

நீண்டகாலமாக நிலவிவந்த சில சொற்களின் 'கசடுத்தனங்கள்' கண்டறியப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக மாற்றுச் சொற்களின் பயன்பாடு தொடரப்படுவது அவதானிப்பிற்குரியது, வரவேற்புக்குரியது. (உ+ம் - கற்பழிப்பு > பாலியல் வல்லுறவு...)

பொதுப் புழக்கத்தில் நிலைபெற்றுவிட்ட சொற்களை அல்லது சொற்றொடர்களை, திட்டவட்டமான காரணங்களுக்காக வரையறைப்படுத்தியோ 'புனிதப்படுத்தியோ' அல்லது 'இழிவுபடுத்தியோ' பயன்படுத்தும் போது, காலப்போக்கில் பல குழப்பங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. ஒரு மொழியின் 'திரிபை', மொழிசார் சமூக வாழ்வியலின் சரிவை இத்தகைய போக்குகள் குறிகாட்டுவன. இடையில் நேர்கிற 'திரிபார்ந்த' பிரயோகத்தின் தாக்கத்தினால், சில சொற்களையோ சொற்றொடர்களையோ அவற்றின் காலாதிகால உணர்த்து பொருளின் அடிப்படையில் தொடர்ந்தும் பிரயோகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

பொது வழக்கில் இருக்கும் பல நல்ல தமிழ்ச் சொற்கள் முறையற்ற பிரயோகங்களால் 'திரிபு' அடைவது, தமிழுக்கும் தமிழ்ச் சூழலுக்கும் ஆரோக்கியமானதல்ல. சொற்களின் பொருளறிந்து, அவற்றை நிதானமாகவும் செம்மையாகவும் விழிப்புணர்வோடும் பிரயோகிக்க வேண்டும்.

ஒரு மொழியின் 'போதாமை' உணரப்படுகிற போது, புதிய சொற்களும் புதிய சொற்றொடர்களும் உருவாக்கப்படலாம். அது அவசியமானது, வளர்ச்சிக்குரியது. ஒருவர் எதையும் சொல்ல முற்படும் போது, கருத்தியல் மற்றும் உணர்வு வெளிப்பாட்டிற்கு உரிய முறையிலும் மரபார்ந்த வளத்தின் செழுமை குன்றாமலும் மொழியைக் கையாள வேண்டியது அவசியமாகும். வளர்ச்சியடைந்த மொழியானது, அடிப்படையில் பெருமளவுக்கு விஞ்ஞான பூர்வமானதாகவே இருக்கும். மரபிலே குமைந்த 'கசடுத்தனங்கள்', மயக்கங்கள் நீங்கிச் செழுமையடைவதாகவும் ஒரு மொழி இருக்க வேண்டும்.


அமரதாஸ்
2018-03-28

Sunday, March 18, 2018

நூல்கள் மீதான காதல், தீராக்காதல் - Endless love, over books


சென்னையில், புத்தகக் காட்சி நிகழ்வில் பல்வேறு வகைப்பட்ட புத்தகங்களை வாங்கியிருந்தேன். அவற்றை, அங்கிருந்து எனது முகவரிக்கு, தபால் மூலம் அனுப்ப ஒழுங்கு செய்திருந்தேன். அந்தப் புத்தகங்களின் ஒரு தொகுதி இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அனுப்புவதில் உதவிய நண்பர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.


கேரளாவில் இருந்து கொண்டுவந்திருக்கும் திரைப்படங்களையெல்லாம் இன்னும் பார்த்து முடிக்க முடியாதபடி எப்படியெப்படியோ காலம் கடந்து போகிறது. ஏற்கெனவே இருக்கும் புத்தகங்களில் சிலவற்றை இன்னமும் படித்து முடிக்கவில்லை. இப்போது புதிதாக வந்திருக்கும் இந்தப் புத்தகங்களையும் இனி வரவிருக்கும் புத்தகங்களையும் படிக்கவென நேரம் ஒதுக்குவதுதான் சிக்கலான காரியம்.

பழைய புத்தகக் கடைகளுக்கெல்லாம் சென்று, குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பல நல்ல புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அப்படித்தான் பல்வேறு ரஸ்ய இலக்கியப் புத்தகங்களை வாங்கிப் படிக்க முடிந்திருக்கிறது. எனது கருத்தியல்களுக்கு, நம்பிக்கைகளுக்கு எதிரான உள்ளடக்கங்கள் கொண்ட புத்தகங்களையும் எப்போதும் வைத்திருப்பேன். அந்த வகையில் பகவத் கீதை, குர் ஆன், பைபிள் போன்றவை கூட எனது தனிப்பட்ட நூலகத்தில் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. எது எப்படியிருந்தாலும் எனக்கான தேவை, தேடல், ரசனை, கருத்தியல் போன்றவற்றில் தெளிவாகவே இருக்கிறேன்.

ஒரு காலத்தில், எனது வீட்டுக்கு பல எழுத்தாளர்களும் நண்பர்களும் வந்து ஆய்வு நோக்கத்திற்காகவும் வேறு பல தேவைகளுக்காகவும் புத்தகங்களை வாங்கிச்செல்வார்கள். பல புத்தகங்கள் அப்படியே காணாமல் போயுமிருக்கின்றன. எழுத்தாளரும் நண்பருமான திரு. அ.யோசுராசா கிராஞ்சியில் வசித்த காலத்தில் (இடப்பெயர்வுக் காலம்), நீண்ட தூரம் சைக்கிளில் பிரயாணித்து எனது வீட்டுக்கு அடிக்கடி வருவார். பல்வேறு புத்தகங்களையும் வாங்கிச்சென்று படித்துவிட்டு, பத்திரமாகத் திருப்பித் தந்திருக்கிறார். அதுபற்றி அவரது புத்தகம் ஒன்றில் ('நினைவுக் குறிப்புகள்') குறிப்பிட்டும் இருக்கிறார்.

யுத்த காலத்தில், நான் இழந்த பல்லாயிரக்கணக்கிலான புத்தகங்கள் குறித்த வலிமிகுந்த நினைவுகள் நிரந்தரமானவை. இடப்பெயர்வின் போது, கிளிநொச்சியில் இருந்த பெருந்தொகையான புத்தகங்களையும் வேறு பல ஆவணங்களையும் புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்த ஒரு நண்பனின் வீட்டிற்கு மாற்றியிருந்தேன். அந்த நண்பனே ஒரு பெரிய வாகனத்தை ஓட்டிவந்து எல்லாவற்றையும் ஏற்றிப்பறித்து எனக்காக உதவினான். அவனும் அவனது மனைவியும் அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கணினிப் பிரிவில் இருந்து செயற்பட்டவர்கள். (போர் நெருக்கடிகளில் இருந்து தப்பித்து, இப்போதும் அவர்கள் என்னுடன் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.) அவர்களுடைய வீட்டின் ஒரு பெரிய அறை முழுக்க என்னுடைய புத்தகங்களே நிறைந்திருந்தன. பிறகு யுத்தம் தீவிரமடைந்த நிலையில் அங்கிருந்து எங்குமே கொண்டுசெல்ல முடியவில்லை. எல்லாம் அங்கேயே கைவிடப்பட்டன.

புத்தகங்களுக்கும் எனக்கும் இடையிலான உறவு மிகவும் அந்தரங்கமானது, அலாதியானது. 'இயல்பினை அவாவுதல்' என்ற பெயரிலமைந்த கவிதைத் தொகுதி ஒன்றும் 'வாழும் கணங்கள்' என்ற பெயரிலமைந்த ஒளிப்படத் தொகுதி ஒன்றுமாக இதுவரையில் இரண்டு புத்தகங்கள், யுத்தகால நெருக்கடிகளுக்குள்ளிருந்து என்னால் படைக்கப்பட்டிருக்கின்றன என்பது பெருமைக்குரியது தான். எனது ஒளிப்படத் தொகுதி ஒன்றுகூட இப்போது இல்லையென்பது மிகுந்த வேதனைக்குரியது. (யுத்தகாலத்தில் அழிவடைந்து விட்டன.) சில புதிய புத்தகங்களை உருவாக்கும் கனவுகளோடும் அத்தகைய புத்தகங்களுக்கான உள்ளடக்கங்களோடும் தான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.

எத்தனையோ இழப்புக்களை அனுபவித்து, 'வாழ்வின் நிலையாமை' குறித்த சிந்தனைகளால் அலைக்கழிந்தாலும், புதிது புதிதாக புத்தகங்களைத் தேடுகிறது மனசு. ஒரு 'நாடோடி' போலவோ 'கொரில்லாப் போராளி' போலவோ வாழ நேர்ந்துவிடுகிற எனக்கு, தவிர்க்க முடியாத மேலதிகமான 'சுமைகளாக' சேர்ந்து விடுவதுடன் பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்தி விடுகின்றன. போர் முடிந்த பிறகு நான் சேகரித்த பெருந்தொகையான புத்தகங்கள் இன்னமும் எனது ஊரில் கிடக்கின்றன. நானோ அகதியாகி ஐரோப்பாவில்... நூல்கள் மீதான நினைவுகள் ஏராளமானவை. நூல்கள் மீதான காதல் இனிமையானது, அது தீராக்காதல்.

- அமரதாஸ்
2018-03-17

Sunday, November 19, 2017

வா காதலே...




'யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே...
நாம் சென்று வாழ்வோமா
வா காதலே...'
என்று தொடங்கும் பாடலின் பல்லவி, காதலியைக் காதலாகவே உருவகிக்கும் காதலனுடைய அழைப்பின் குழைவினால் ஈர்ப்புக்குரியதாக மாறிவிடுகிறது. அந்தக் காதலின் அழைப்பிற்கு, ஆரம்பத்தில் இழையும் கம்பீரமான வீணையிசை வழி சமைத்துக் கொடுக்கிறது.

இமானின் இசையில், குமரேஸ் கமலக்கண்ணன் மற்றும் நளினி கிருஷ்ணன் ஆகியோர் இனிமையாக, லாவகமாகப் பாடியிருக்கிறார்கள். மதன் கார்க்கியின் செயற்கையான சில வரிகளுக்கு இடையிலும் இயல்பான, இனிமையான வரிகள் காதலின் இசையில் குழைகின்றன.
சரணங்கள் இரண்டும் ஒரேமாதிரியான மெட்டில் இல்லாமல் வேறு வேறாக அமைக்கப்பட்டிருப்பது இந்தப் பாடலில் இருக்கிற சிறப்புக்களில் ஒன்றாகும். முதலாவது சரணம், பல்லவியின் சாயலிலேயே உள்ளது. மகிழ்ச்சிகரமான இசையுடன், ஒருவித துள்ளலுடன், 'குலேபாவா...' என்று தொடங்கித் திரும்பத்திரும்ப வரும் அனுபல்லவி அமைந்திருக்கிறது. அது, 'அஸ்கு லஸ்க ஐமோ ஐமோ...' என்ற பாடலை நினைவுபடுத்துகிறது. இதுபோலக் கலவையான தினுசில் வேறு சில பாடல்களும் உள்ளன. பொதுவாக, திரையிசைப் பாடல்களின் சரணங்கள் பலவாக இருந்தாலும் அவற்றின் மெட்டுக்கள் ஒன்றாகவே இருக்கும்.

மஞ்சிமா மோகன், காதல் உணர்வை அநாயாசமாக முகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த அளவிற்கு உதயநிதி யின் உணர்வு வெளிப்பாடு இல்லை. பல இடங்களில், கண்ணாடி அவரைக் காப்பாற்றி விடுகிறது போல...

பாடலை, ஓரளவுக்கு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கிற இயக்குநர் கௌரவ் நாராயணன், மற்றும் ஒளிப்பதிவாளர் ரிச்சார்ட் எம். நாதன், படத்தொகுப்பாளர் பிரவீன் போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். பாடலுக்கான படப்பிடிப்பிற்காக, 'ஓமான்' சென்று சிரமப்பட்டது பற்றி இயக்குநர் சொல்லியிருந்தார். அந்தச் சிரமங்கள் இல்லாமல் இந்தியாவிலேயே படப்பிடிப்பைச் செய்திருக்க முடியுமே...

ஒரு 'வீடியோ இசை அல்பமாக' தனியாகப் பார்க்கும்போது, இந்தப் பாடல் ரசனைக்குரியதாக இருக்கிறது. அண்மைக்காலத்தில் நான் அடிக்கடி கேட்ட பாடல்களில் ஒன்று இது.

ஒட்டுமொத்தமாக ஒப்பிட்டுப் பார்த்து, இசையாலேயே இந்தப் பாடல் அதிகம் வசீகரிப்பதாக உணர்கிறேன்.

https://youtu.be/KuwNfob7Q8U

2017-11-19
அமரதாஸ்

Saturday, September 16, 2017

திலீபன் - நிகழ்ந்திருக்கக் கூடாத நிகழ்வுகளின் நினைவுகள்.


அமரதாஸ்
2017-09-15

தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்து திரு. திலீபன் வகித்த பங்கு தனித்துவமானதாக நோக்கப்படுகிறது. உலகின் விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் தனித்துவமாக இடம்பெறும் போராளியாக அவர் அறியப்படுகிறார். 5 கோரிக்கைகளோடு முன்னெடுத்த உண்ணா நிலைப் போராட்டத்தில் உணவை மட்டுமல்ல, நீரையும் மருத்துவத்தையும் முற்றாகப் புறக்கணித்திருந்தார். சாகும் வரையான அவரது உண்ணா நிலைப் போராட்டத்தின் காலகட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள சில ஒளிப்படங்களின் பின்னணியில் இருக்கும் திரு.தேவர் மற்றும் திரு.ராஜன் போன்றவர்கள் எனக்கு இன்றுவரை நெருக்கமானவர்கள். அவர்கள் இப்போது வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் அவர்களோடு பேசுகிறபோது, திலீபனின் நினைவுகள் எழுவது வழக்கம். திலீபனின் தியாகச்சாவுக் காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஒளிப்படங்கள், என்னுள் பல நினைவுகளையும் கேள்விகளையும் கிளர்த்திக்கொண்டிருப்பவை. பெரும் சோகத்தையும் மறக்க முடியாத வரலாற்றையும் தாங்கியிருப்பவை அவை.



அப்போதிருந்த அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து, உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்வதென்று முடிவெடுத்த திலீபன், அதைத் தனக்கு நெருக்கமாக இருந்த ஒரு அரசியல் ஆய்வாளருக்கு முதலில்  சொல்லியிருக்கிறார். திலீபன் மேல் மிகுந்த அன்பும் நட்பும் கொண்டிருந்த அந்த அரசியல் ஆய்வாளர் அதை ஏற்கவில்லை. 'உன்னை எல்லோரும் சாகவிடுவார்கள், உனது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும், இந்த விசப்பரீட்சையைக் கைவிடு' என்று அப்போது திலீபனிடம் சொல்லியிருந்தார். (அவர் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் எனது  நீண்டகால நண்பர்களில் ஒருவர்.) 

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரனிடம் தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அனுமதிபெற்று உண்ணாநிலைப் போராட்டத்தைத் திலீபன் தொடர்ந்தார். தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதிருந்தால், மயக்கமுற்றிருந்தாலும் தனக்கு வைத்திய உதவிகள் எதுவும் செய்யக் கூடாது என்று சொல்லியிருந்தார்.



விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில், இந்திய இராணுவ காலகட்டமானது மிகுந்த நெருக்கடிக்குரியதாக இருந்தது. அன்றைய காலத்தின் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக திலீபனின் உண்ணா நிலைப் போராட்டத்தை விளங்கிக்கொள்ள முடியும். அது, இந்திய வல்லாதிக்கத்தை அம்பலப்படுத்தவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் அப்போது ஏற்பட்டிருந்த பலவீனமான நிலையினைச் சரிசெய்வதற்குமான முயற்சியாகவும் பார்க்கப்படலாம். எது எப்படியிருந்தாலும், திலீபனின் உண்ணா நிலைப் போராட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட 5 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாது என்று தெரிந்துகொண்ட பின்னரும், அவரது இறப்பை யாராலும் தடுக்க முடியாமல் போனது ஒரு வரலாற்று அவலமாகவே எனக்குத் தெரிகிறது. தனக்கு நீரோ உணவோ வைத்தியமோ வழங்கக் கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லியிருந்தாலும், நீர் கூட அருந்தாமல் வதங்கிப்போய் மயங்கிக் கிடந்த கடைசி நேரத்திலாவது அவரை யாரும் சாவிலிருந்து காப்பாற்றியிருக்கக் கூடாதா...? இது எனது தனிப்பட்ட ஆதங்கமாகும். அவர் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும், காப்பாற்றப்பட்டிருக்க முடியும். 

'இங்கு ஓர் மலர் வாடுகின்றதே
இதய நாடிகள் ஒடுங்குகின்றதே 
தங்க மேனியை சாவு தின்னுதே 
தழலிலாடிய மேனி சோருதே 
பொங்கி நின்றவன் பேச்சடங்குதே 
பொழுது சாயுதே பொழுது சாயுதே 
வந்து பாரடா வந்து பாரடா 
வாடமுன்னொரு செய்தி கூறடா...' 
என்று திரு. புதுவை இரத்தினதுரையும்  
'ஐயா திலீபன்...எங்கைய்யா  போகின்றாய்...' என்று திரு. காசி ஆனந்தனும் தமது உணர்வுகளின் வரிகளை ஒலிபெருக்கிகளில் வழியவிட்டுக்கொண்டிருந்தார்கள். திரு. பிரபாகரன் வந்து, திலீபனின்  தலையைக் கோதிக்கொண்டிருந்தார். திலீபன் நினைவிழந்து போனதை மக்கள் பலரும் போராளிகள் சிலரும் விழிகள் கசியப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் சூழ்நிலையின் கைதிகளாக இருந்திருக்கக் கூடும். (அப்போது திலீபனின் பக்கத்தில் போராளிகளாய் இருந்த சிலர், திலீபனின் கனத்த நினைவுகளுடன் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.)    

இருந்த இடத்திலேயே அணுவணுவாய் இறந்துகொண்டிருந்த திலீபனைச் சுற்றிக் காத்திருந்தவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், இறப்பை உறுதிசெய்து கொண்டே நினைவிழந்த திலீபனின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? இயலாமையின் விளைவான ராஜதந்திரத்தில் அந்தத் தியாகச் சாவு நிச்சயிக்கப்பட்டதா?  எது எப்படியிருந்தாலும், அதுவொரு மானுடப் பேரவலம். அது நடந்திருக்கவே கூடாத துன்பியல் நிகழ்வாகும். மானுட நேசர்களாலும் விடுதலை விரும்பிகளாலும் 'திலீபனின் தியாகம்' புரிந்துகொள்ளப்பட முடிந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.



திலீபனின் வேண்டுகோளுக்கு அமைவாக, யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தனது உடல், கல்வித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பது அவரது விருப்பமாக இருந்தது. அங்கு அவரது உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தபோது நான் பார்த்திருக்கிறேன். கறுத்துப்போயிருந்த வெற்று உடலின் உட்புறம் தெரியும் நிலையில், சில இடங்கள் வெட்டப்பட்டிருந்தன. அவருக்கு இயல்பாகவே துருத்தலாக இருக்கும் பற்கள், மேலதிகமாகத் துருத்திக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அப்போது எனக்கு ஏற்பட்ட மன உணர்வுகள் பற்றி, இப்போது எழுத்தில் விபரிப்பது கடினம். அது இப்போது அவசியமுமில்லை. 

யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்திலிருந்த திலீபனின் உடலானது, 'யாழ்ப்பாண இடப்பெயர்வுக் காலத்தில்' விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினரால் பெறப்பட்டு, வன்னிக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. அங்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அது பாதுகாக்கப்பட்டு வந்தது. திலீபனின் உடல் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம், 'கிபிர்' தாக்குதலுக்கு உள்ளான ஒரு சந்தர்ப்பத்தில் கூட, உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் 'பேழை' சேதமாகவில்லை. பின்னர் 'இறுதி யுத்த காலத்தில்', இடப்பெயர்வில் தொடர்ந்தும் காவிச்சென்று பாதுகாக்க முடியாதிருந்த நிலையில், அந்த உடல் புதைக்கப்பட்டுவிட்டது.

இதை அறிந்த, விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் இருந்த ஒரு நண்பனுடன் அண்மையில் இது பற்றி உரையாடினேன். யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திலேயேயே திலீபனின் உடலை விட்டு வைத்திருந்தால், அது இப்போதும் எப்படியோ பாதுகாப்பாக இருந்திருக்கக் கூடுமென்று அந்த நண்பனுக்குச் சொன்னேன். ஆனால், சிறிலங்கா அரசினால் அது பின்னர் அழிக்கப்பட்டிருக்கவும் கூடும்.



இறுதி யுத்த காலத்தின் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, நல்லூரில் திலீபனின் 'நினைவுக்கல்' வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று ஒளிப்படங்களை எடுத்திருக்கிறேன். அப்போது, பெரிதாக அமைக்கப்பட்டிருந்த திலீபனின் 'நினைவுத் தூபி' அழிக்கப்பட்டிருந்தது. இன்னொரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் 'நினைவுக்கல்' அப்படியே இருந்தது. (அப்போது, அது யாராலும் கவனிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.) இதுவும் விட்டுவைக்கப்படாதென்று அப்போதே நினைத்திருந்தேன். நான் ஒளிப்படங்களை எடுத்த பிறகு, பின்னொரு காலத்தில் அந்த 'நினைவுக்கல்' சிறிலங்கா அரசினால் அழிக்கப்பட்டுவிட்டது. 


திலீபனின் உயிரை அவரது 'விருப்பத்திற்கு' மாறாகக் காக்க முடியவில்லை என்பது ஒருபக்க வரலாற்று அவலம். அவரது உடலை அவரது 'விருப்பத்திற்கு' அமைவாக, தொடர்ந்தும் காக்க முடியவில்லை என்பது இன்னொருபக்க வரலாற்று அவலமாகும். தமிழின விடுதலையை அவாவி, அதற்காக உழைத்த போராளி திலீபன் பற்றிய நினைவுகளும் வரலாறும் பேணப்பட  வேண்டியவை.  

பிற்குறிப்பு -  திலீபனின் வரலாற்றினைத் திரைப்படமாக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. முக்கியமான சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், உண்ணா நிலைப் போராட்டக் காட்சிகள் இன்னமும் படமாக்கப்படவில்லை என்று அறிய முடிந்தது. 'திலீபன்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட அத் திரைப்பட முயற்சியில், திலீபன் பாத்திரத்தில் நடித்த நடிகர் நந்தா மற்றும் இயக்குநர் ஆனந்த் மூர்த்தி ஆகியோருடன் அண்மையில் உரையாடியிருந்தேன். திரைப்படத்தைப் பூர்த்திசெய்து, இன்னமும் வெளிக்கொண்டுவர முடியாத நிலை தொடர்வதில், 'பண நெருக்கடி' முக்கிய காரணியாக இருக்கிறது என்று தெரிய வருகிறது. அத் திரைப்படத்தின் 'தரம்' எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. உண்மையான வரலாற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற அக்கறையோடு தான் அந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்று கருதுகிறேன். அதன் படப்பிடிப்பு  நடந்துகொண்டிருந்த காலத்தில், சென்னையில் நடிகர் நந்தாவை சந்தித்திருந்தேன். வன்னிப்பகுதியில் உருவாக்கப்பட்ட 'ஆணிவேர்' என்ற திரைப்படத்தில் ஒளிப்படக் கலைஞராக நான் பணியாற்றியபோது, அதில் நடித்த நந்தாவுடன் நல்ல அறிமுகம் ஏற்பட்டிருந்தது. 'திலீபன்' என்ற திரைப்பட முயற்சியில் சம்மந்தப்பட்டிருந்தவர்கள், ஆர்வமுள்ளவர்கள் அதனை நேர்த்தியுடன் வெளிக்கொண்டுவர முயற்சிப்பது நல்லது.


Friday, September 8, 2017

'பொங்கியதே காதல் வெள்ளம்' அல்லது 'கண்ணுக்குள் நூறு நிலவா'...

'பொங்கியதே காதல் வெள்ளம்' அல்லது 'கண்ணுக்குள் நூறு நிலவா'...

- அமரதாஸ்
2017-09-08



'மண்ணுக்குள் வைரம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதில் இடம்பெற்ற ''பொங்கியதே காதல் வெள்ளம்...'', ''இதழோடு இதழ் சேரும் நேரம்...'' போன்ற பாடல்களால் கவனம் பெற்றவர் இசையமைப்பாளர் திரு. தேவேந்திரன். பின்னர், இயக்குநர் திரு. பாரதிராஜாவின் குறிப்பிடத்தகுந்த திரைப் பங்களிப்புகளில் ஒன்றான 'வேதம் புதிது' என்ற திரைப்படத்தில் தேவேந்திரனின் இசைப் பங்களிப்பு கவனிப்பிற்குரியதாக இருந்தது. அதில் இடம்பெற்றிருந்த ''கண்ணுக்குள் நூறு நிலவா...'' என்ற பாடல், அது வெளிவந்திருந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது.


''பொங்கியதே காதல் வெள்ளம்...'' மற்றும் ''கண்ணுக்குள் நூறு நிலவா...''ஆகிய பாடல்களுக்கிடையே இரண்டு முக்கியமான ஒற்றுமைகள் இருக்கும். முதலாவது காதல், இரண்டாவது மிருதங்கம். இரண்டு பாடல்களிலும் மகிழ்ச்சிகரமான மிருதங்க இசையை அனுபவிக்க முடியும். காதலின் மகிழ்ச்சியை, உக்கிரத்தை, புத்துணர்ச்சியை மிருதங்கத்தில் ஏற்றியிருக்கிறார் தேவேந்திரன். மிருதங்கத்தால் எனக்குப் பிடித்த பாடல்களில் இவையிரண்டும் முக்கியமானவை.


தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில், என்றைக்கும் நினைவுகூரத்தக்க சில பாடல்களை அவர் உருவாக்கியிருக்கிறார். ''பொங்கியதே காதல் வெள்ளம்...'', ''கண்ணுக்குள் நூறு நிலவா...'', ''இதழோடு இதழ் சேரும் நேரம்...'', ' போன்ற பாடல்களில் அவர் தனது இசை ஆளுமையைப் பதிவுசெய்திருக்கிறார். நல்லதொரு இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்த தேவேந்திரனுக்கு நல்லபடியான வாய்ப்புகள் அதிகம் அமையவில்லை என்பதும், அவர் அதிகம் 'கவனிக்கப்படவில்லை' என்பதும் வருத்தத்துக்குரியது.


''கண்ணுக்குள் நூறு நிலவா...''
https://youtu.be/o_umXE7vB_w

''பொங்கியதே காதல் வெள்ளம்...''
https://youtu.be/QojxewDQFmk

''இதழோடு இதழ் சேரும் நேரம்...''
https://youtu.be/QCcHXXDPkgc


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக ஆரம்ப காலத்தில் பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தேவேந்திரன். அப் பாடல்கள், ஈழத்தில் இந்திய ராணுவம் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் தமிழகத்தில் உருவாக்கப்பட்டவை. அத்தகைய சில பாடல்கள் இசையால் வளம்பெற்றவை, இசையாலேயே வசீகரிப்பவை, பல்வேறு அம்சங்களில் முக்கியத்துவம் கொண்டவை. (அவை, தனியான பதிவுக்குரியவை.) தேவேந்திரனுடனான இசை சார் அனுபவங்கள் பற்றி, அவருடன் இணைந்து பல பாடல்களை உருவாக்கிய கவிஞர் திரு. புதுவை இரத்தினதுரை என்னிடம் சொல்லியிருக்கிறார்.


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான பாடல்களின் உருவாக்கத்தில், தேவேந்திரனுக்குப் பிறகு இசையமைப்பாளர் திரு. கண்ணன் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்.